Monday 8 August 2016

புத்தகம்-1 "ஊர்ப்புறத்துப் பறவைகள்”



மாதம் இரண்டு காட்டுயிர் மற்றும் பறவைகள் பற்றிய புத்தகத்தை எழுதலாம் என்ற நினைப்பில் ஆரம்பித்துவிட்டேன். ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் இருந்தாலும் தமிழில் என்னும் அளவுக்கே புத்தகங்கள் வந்திருகிறது.

தமிழில் ஏன் வருவதில்லை என்ற கேள்விக்கு-பறவை நோக்குவது இன்றும் கீழ் நிலை,மத்திய தர மனிதர்களின் செயல்பாடாக இல்லை அவை மேல் நிலை மனிதர்களின் செயலாகவே காணப்படுகிறது அதனால் வரும் புத்தககங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது. 

வெகுஜன மனிதர்கள் விரும்பி படிக்கும் வார இதழ்களில் கூட இதுவரை பறவை மற்றும் காட்டுயிர் பற்றிய கட்டுரையோ,தொடரோ வரவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் இந்து தின பத்திரிகையில் சனிகிழமை தோறும் உயிர்மூச்சு என்ற தலைப்பில் காட்டுயிர், பறவை, விலங்கு என்று பலதர பட்டு கட்டுரைகள் வருவது மட்டுமே ஆறுதல் தரக்கூடிய விஷயமாக உள்ளது.

மிக சிறந்த காட்டுயிர் எழுத்தாளரான திடோர் பாஸ்கரன் அவர்கள் கூட அதிகமாக காட்டுயிர் பற்றி கட்டுரைகளை சிறு பத்திரிகையான உயிர்மையில் தான் எழுதி உள்ளார். அதனால் குறைந்த அளவே தமிழில் காட்டுயிர் சம்பந்தமாக புத்தகங்கள் வந்திருக்கிறது. இதில் மிக முக்கியமாக எதை கவனிக்க வேண்டும் என்றால்-வந்திருக்கும் குறைவான புத்தகங்கங்கள் கூட நம் மக்கள் வாங்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இவையும் குறைந்து அளவு புத்தகங்கள் வருவதற்கான காரணமும் ஆகும். 

அதனால் இதுவரை வந்த புத்தகத்தை பற்றி அடுத்து ஆறு மாதம், மாதம் இரண்டு கட்டுரையாக (குறுந்தொடராக) தொடர்ச்சியாக பார்ப்போம்.

முதல் புத்தகமாக நம் ஊர் புறத்தில் இருக்கும் பறவைகளை பற்றி சொல்லும் மிக முக்கியமான புத்தகத்தில் இருந்து தொடரை ஆரம்பிப்போம்.

புத்தகத்தின் பெயரே அழகாக உள்ளது மற்றும் என்ன மாதிரியான புத்தகம் இது என்றும் தலைப்பு தெரிவித்துவிடுகிறது. ”ஊர்ப்புறத்துப் பறவைகள்” ஆசிரியர் கோவை சதாசிவம் அவர்கள்.

ஒரு மாலை பொழுதில் இந்நூலை நீங்கள் வாசித்துக்கொண்டு இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்ற ஒரு வரி புத்தகத்தின் தொடக்கத்தில் வராமல் புத்தகத்தின் முடிவில் வருவது அமர்களமான வரியாகவே தெரிகிறது.

புத்தகத்தை மாலையில் வாசியுங்கள் என்று நம்மை கட்டாயபடுத்தாமல் கடைசியில் அந்த வரியை எழுதயுள்ளார். வாசிக்கும்பொழுது உண்மையாகவே அப்பொழுது மாலையாக இருந்தால் ஆசிரியருடன் சேர்ந்து நமக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கும். நான் வாசிக்கும்பொழுது மாலை கடந்துவிட்டது, இரவில் வாசித்து முடித்தேன். ஏனென்றால் கடைசியில் தானே அந்த வரி நம் கண்ணில்படுகிறது.

மொத்தம் இருபத்து ஐந்து பறவைகளை பற்றி படிக்க போரடிக்காமல் எழுதி சென்றுள்ளார். பறவைகள் படங்களுடன் கட்டுரைகள் இருப்பது படித்த உடன் சுலபமாக நினைவில் வைத்துகொள்ள முடிகிறது. 

ஆரம்ப பறவையாக தையல் சிட்டு நம்மை அழைக்கிறது. மாணவர் ஆசிரியர் இடையே நிகழும் உரையாடலாக அவற்றை எழுதியுள்ளது கதை படிப்பது போல் சுவாரசியமாக செல்கிறது. பெரும்பாலும் பறவைகளுக்கு அதன் பண்பை கொண்ட பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார்.

நம் ஊரை சுற்றி இருக்கும் பறவைகளை ஒருசேர படிப்பதற்கும் மற்றும் புதிதாக பறவை நோக்குபவர்கள் இந்த புத்தகத்தில் இருந்து தொடங்குவது சிறந்ததாக இருக்கும் என்பது என் நினைப்பு. நம் ஊரை சுற்றி இருக்கும் பறவைகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் காடு, மலை பகுதிகளில் சென்று பார்ப்பது இருப்பதை விட்டு பறக்க ஆரம்பிப்பதுபோல் இருக்கும்.
சீன பிதாமகன் மாசேதுங் சிட்டுக்குருவிகள் தம் அரசாங்கத்தால் அழித்த பிறகு கடைசியில் ஒரு சிட்டு குருவிகள் கூட இல்லை என்ற நிலை வந்த பிறகு ஆதங்க படுகிறார் அதாவது கடைசி பறவை அழிந்த பிறகே மாசேதுங்கு கவலை படுகிறார்.

ஊதாதேன்சிட்டின் குரல் 100 மீட்டர் வரை கேட்கும் என்ற தகவல் ஆச்சரியம் தருகிறது.ஒரு பறவைக்கு பல பெயர்கள் இருப்பதையும் பெரும்பாலும் அந்த பெயர்களையும் சேர்த்தே தருகிறார் ஆசிரியர்.

ஒரு ஆச்சரியமான செய்தியாக பறவைகளிலேயே மரங்கொத்திகளுக்குத்தான் நீளமான நாக்கு உள்ளதாக குறிப்பிடுகிறார். சிறிய புத்தகம் என்றாலும் நிறைய தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
  
செம்பகம் பறவை பற்றிய கட்டுரையில் வலசை பறவைக்கும், அதிகம் துரம் பறக்காத தரையில் கூடு கட்டி வாழும் பறவையான செம்பகம் பறவையை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஏன் பறவைகளில் இத்தனை வேறுபாடு என்பதற்கு - ஒரு சில பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் பறந்து செல்கிறது சில பறவைகள் பக்கத்து ஊருக்கு கூட செல்வதில்லை என்பதற்கு விளக்கம் இப்படி எழுதியுள்ளார் அதிக பறப்புத் திறன் கொண்ட பறவைகள் தான் உலகைச் சுற்றி வலசை வருகின்றன என்ற வரி உண்மை.

வெளிச்சம் பதிப்பகம்  ஊர்ப்புறத்துப் பறவைகள் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய பறவைகள் என்பதால் கண்டிப்பாக படிக்கவும்.

பதிப்பகம்:

வெளிச்சம் வெளியிடு 

1447, அவினாசி சாலை

பீளமேடு, கோயம்புத்தூர்-641004

Mobile-98947 77291


Rs-80/

                                                                                                                                                                        -செழியன் 

Wednesday 3 August 2016

பெரும்பாக்கம் ஏரி

என்னது சென்னையில் ஏரியா என்று நானும்தாங்க யோசித்தேன்? இன்றுதான் சென்னை நீண்டு ஸ்ரீபெரும்பத்தூர், செங்கல்பட்டு,மாமல்லபுரம் என்று நான் வளர்கிறேனே மம்மி என்று வளர்ந்து விட்டதே. அதனால் பெரும்பாக்கம் இதற்குள்ளேயே அடங்கிவிட்டது. பழைய மகாபலிபுரம் சாலை தொடங்கும் இடமான மத்திய கைலாஷ் சாலையில் காலை 6.30மணிக்கு வண்டியை திருப்பினேன்.

முதல் டோல் கேட் தாண்டி வலது பக்கம் திரும்பினால் பள்ளிகரணை சதுப்புநிலம் ஆனால் திரும்பாதீர்கள் நேராகவே செல்லுங்கள்.ஒரே நேர் சாலை, போய்கொண்டே இருக்க வேண்டும் சோழிங்கநல்லூர் நாலு முனை ஜங்ஷன் வரை போனால் போதும். அது எனக்கு தெரியாது நான் அதையும் தாண்டி சென்று கொண்டிருந்தேன் கேளம்பாக்கம் வந்தது என்னுடன் வருபவர் அப்போதுதான் யோசிக்கிறார் இந்த பக்கம் வந்தது போல் இல்லையே என்று சொல்கிறார். என்ன சொல்கிறிர்கள் யாரிடமாவது கேளுங்கள் நீங்கள் தான் ஏற்கனவே வந்துள்ளிர்கள் என்ற பிறகு அந்த பக்கம் போனவரை நிறுத்தி பெரும்பாகாம் ஏரி போகவேண்டும் என்றதற்கு வந்த வழியே சென்று சோழிங்கநல்லூர் நாலுமுனை இடது புறம் திரும்புங்கள் என்று சொன்னவரின் வார்த்தையை மீறாமல் சென்று இடது புறம் திரும்பிய உடனேயே வாபா வா  இங்கே திரும்பாமல் எங்கே நேராக சென்று கொண்டிருகிறாய் என்று அங்கிருந்த நீர்காகம் என்னை கேட்பது போல் இருந்தது.

மத்திய கைலாஷ்ல் இருந்து வருபவர்கள் சோழிங்கநல்லூர் நாலுமுனை ஜங்ஷன் வந்தவுடன் வலது புறம் திரும்பினால் போதும் (கிழக்கு தாம்பரம் செல்லும் சாலை).இங்கேயும் பள்ளிகரணை சதுப்புநிலம் என்ற பெயர் பலகை தான் உள்ளது ஏன் என்று தெரியவில்லை.பள்ளிகரணை டோல் கேட் போல் இங்கேயும் ஒரு டோல் கேட் உள்ளது.வலதுபுறம், சமீபத்தில் பெய்த மழையால் முழு தண்ணீருடன் ஏரி நிரம்பியும், ஒரு நேர் கோடு போட்டது போல் ஏரி நீண்டும் இருக்கிறது.

நீர் காகங்கள்
ஏரியின் தொடக்கத்திலேய புள்ளி மூக்கு வாத்து ( SPOT- BILLED DUCK) கண்ணில் பட்டதால் வண்டியில் இருந்து இறங்கிவிட்டேன்.புள்ளி மூக்கு வாத்துடன் சீழ்க்கைச் சிறகியும்(LESSER WHISTLING DUCK) நிறைய காணப்பட்டது.இரண்டு சிவப்பு மூக்கு ஆட் காட்டி(RED WATTLED LAPWING) பறவை நடந்து கொண்டிருந்தது.கரையோரமே நீலத் தாழை கோழி(PURPLE SWAMPHEN) ஒன்று கரையில் இருப்பவர்களை பற்றி கவலை படாமல் இறை தேடி கொண்டிருந்தது.

நீர் அதிகமாக இருப்பதால் பச்சை பசல் திட்டுகள் நீரில் மூழ்கி உள்ளது அதனால்  பறவைகள் இறை தேட வசதிகள் குறைவாகவே இருக்கிறது.மஞ்சள் மூக்கு நாரையை இதுவரை நான் பள்ளிக்கரணையில் பார்த்தது இல்லை ஆனால்  பெரும்பாகத்தில் காணப்படுகிறது.

பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் இவ்இரண்டு இடங்களிலும் வண்டிகளின் சத்தம் அதிகமாக உள்ளது. அமைதியான இடங்களில் வாழ்வை நடத்தும் இப்பறவைகள் இங்கு ஏற்படும் சத்தத்திற்கு பழகிவிட்டது போலவே தெரிகிறது. வேடந்தாங்கல் இதற்கு நேர் எதிர், முழு அமைதியாக இருக்கும். அங்கு பறவைகளின் சத்தத்தின் இடையிலேயே நாம் இருக்கவேண்டும்.


ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கு மேல் பறவைகளை அவதானித்து, தெரியாத பறவைகளை கொண்டுசென்ற பறவைகளின் புத்தகத்தின் உதவியோட தெரிந்து கொண்டு அப்பொழுதே குறிப்பும் எடுத்துவிட்டேன்.

பெரும்பாகத்தில் பார்த்த பறவைகள்:

1.புள்ளி மூக்கு வாத்துகள் (Spot-Billed Duck)

2.சீழ்க்கைச் சிறகி –இவையும் வாத்துதான் (Lesser Whistling Duck)

3.சீழ்க்கைச் சிறகி குட்டிகள் (Chick of Lesser Whistling Duck)
 
4.நீலத் தாழை கோழி (Purple Swamp Hen)-அருகில் மூன்று குட்டிகள் இருந்தது 

5.சிறிய நீர் காகம் (Little Cormorant)

6.சாம்பல் நாரை (Grey Heron)

7.மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork)

8.மடையான் (Pond Heron)

9.சிறிய கொக்கு (Little Egret)
 
10. செந்நாரை (Purple Heron)

11.நாமக்கோழி (Coot)

12.நடுத்தர கொக்கு (Intermediate Egret)

13.சிவப்பு ஆட் காட்டி (Red Wattled Lapwing)

14.கூழைக்கடா (Pelican)

15.கரண்டி வாயன் (Spoon Bill)

16.கருப்பு வெள்ளை மீன் கொத்தி (Pied KingFisher)

17.பவள கால் உள்ளான் (Black Winged Stilt)

18.தாழைக் கோழி (Common Moorhen)

19.சாம்பல் கதிர் குருவி (Ashy Prinia)

20.பச்சைக்கிளி (Parakeet)

21.அன்றில் (Black Ibis or Glossy IBIS)

பறவைகளை பார்பதற்க்கா என்று தெரியவில்லை ஆனால் சுலபமாக நின்று பார்பதற்கு சாலை ஓரமாக நடை மேடை அமைத்து இருக்கிறார்கள்.

இரண்டு மஞ்சள் மூக்கு நாரைகள் அடுத்த கரையோரம் இறை தேடி கொண்டிருந்ததை பைனாகுலர் வழியாக பார்த்தப்பொழுது தெரிந்தது. நாரை சிறுது நகர்ந்தாலே பக்கத்தில் இருக்கும் அடுக்கு மாடி வீட்டுக்குள் தான் போகவேண்டி வரும் அந்த அளவுக்கு கட்டிடங்கள் ஏரிக்குள்ளே வர ஆரம்பித்துவிட்டது பக்கத்திலேயே  நடுத்தர கொக்கும் இருந்தது.


கரண்டிவாயன் பறவைகள் நிறைய தெற்கு பகுதியில் நின்று கொண்டும் அதன் அருகில் நடுத்தர கொக்கும் இருப்பதை பார்க்க முடிந்தது. சாம்பல் நாரை ஒன்று தனியாக நின்று கொண்டிருந்தது. எங்கிருதோ ஒரு மஞ்சள் மூக்கு நாரை பறந்து வந்து அதன் மிக அருகில் வந்து நின்றது சாம்பல் நாரை எந்த வித சலனமும் இல்லாமல் வரியா வா என்பது போலவே காணப்பட்டது.

அப்பொழுது இவைதான் நினைவுக்கு வந்தது மணப்பாக்கம் பாலத்தின் கீழே மடையான் ஒன்று அசயாமல் நின்று இருந்தது அதன் அருகில் நிறைய காகங்கள் அவற்றை தொந்தரவு செய்வது போல் வருவதும் செல்வதும்ஆக இருந்தாலும் எந்தவித சலனமும் அதனிடம் இல்லை நானும் நிறைய நேரம் பார்துகொண்டிருதேன் ம் அப்படியே இருந்தது.

மீண்டும் பெரும்பாக்கத்திற்கு வருவோம் 

சிகப்பு ஆட் காட்டி பறவை எந்த இடையூறும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. இரண்டு பறவைக்கு மேல் காணப்படவில்லை. பறவைகளை படம் எடுக்க நான்கு பேர் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். பறவை நோக்குபவர்கள் என்றால் எங்களை தவிர வேறு யாரும் இல்லை.

ஏரிய்யை சுற்றி கட்டிடங்கள்
முதல் வருடம் காலேஜ் படிக்கும் மாணவர் ஒருவர் தனியாக பறவைகளை படம் எடுத்து கொண்டிருந்தார் அவரிடம் பேச்சு கொடுத்தபோது புதியதாக CANON 700D வாங்கியதாக சொன்னவர் இங்கு இருக்கும் ஒரு பறவையின் பெயர் கூட தெரியவில்லை என்ற உண்மையை சொன்னார் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை அதான். எப்படி பெயர் தெரிந்து கொள்வது என்று அவருடைய கேள்விக்கு சில அடிப்படை தகவல்களை அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.  

பூ நாரை பள்ளிகரனைக்கு வந்து உள்ளது என்ற தகவலால் அப்படியே பள்ளிகரனையும் எட்டி பார்ப்போமே என்று சென்றேன். அங்கு சென்றால் நிறைய பவள கால் உள்ளான்கள் காகத்துடன் சண்டை போட்டு கொண்டிருந்தது. பூ நாரைகள் இருபதுக்கு மேல் இருந்தது மற்றும் தன் குட்டிகளுடன் புள்ளி முக்கு வாத்து நீந்தி கொண்டிருந்த காட்சி ஒரு சேர பார்க்க முடிந்தது.

பள்ளிக்கரனையில் பார்த்த பறவைகள் :
பூ நாரைகள் (Lesser Flamingo)

நீலவால் இலைக் கோழி (Pheasant Tailed Jacana)
 
வெள்ளை அரிவாள் மூக்கன் (White IBIS)

பவள கால் உள்ளான் (Black Winged Stilt )

சாம்பல் நாரை (Purple Heron)

உண்ணிக் கொக்கு (Cattle Egret)

கருப்பு அரிவாள் மூக்கன் (Glossy IBIS or Black Ibis)

மடையான் (Pond Heron)

கூழைக்கடா (Pelican)

உண்ணிக் கொக்குக்கு இனபெருக்க காலம் என்பதால் நிறைய கொக்கின் வண்ணம் ஆரஞ் கலர் துவி விட்டது போல் இருந்தது. அமைதியாகவும் கூட்டமாகவும் நின்று கொண்டிருந்தது.பவள கால் உள்ளாங்களை தவிர மற்ற பறவைகள் ஒருவித தியான நிலையிலேயே காணப்பட்டது. அன்றில் பறவையை கருப்பு அரிவாள் மூக்கன் என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது அதேபோல் பவள கால் உள்ளானை நெடுங்கால் உள்ளான் என்றும் பெயர் உள்ளது.

வண்டியை யு டேர்ன் போட்டு குப்பைகளை கொட்டும் சதுப்புநிலத்தில் பார்வையை செலுத்தினேன்.முதலிலேயே நிறைய தாழை கோழிகள் இருந்தது மற்றும் பைனாகுலர் கொண்டு பார்த்த பொழுது நீலவால் இலைக்கோழி நான்கு தென்பட்டது அவற்றில் மூன்று பறந்து சென்றதில் ஒன்று மட்டும் நீரில் தொடர்ச்சியாக அலகை நுழைப்பதும் எடுப்பதும்மாக இருந்தது.

மூன்று இலைக் கோழி பறந்து சென்றது போல் விடு ஜுட் என்று நானும் அங்கிருந்து பறந்துவிட்டேன்.   
                                              
                                                                                                                                                                              -செழியன்