Wednesday 30 November 2016

பறவை நோக்குதல் – 6 வலசை பறவைகள் (Migration Birds)



செங்கால் நாரை வலசை -விக்கிபீடியா
பறவைகள் எந்த அளவுக்கு மனிதர்களுக்கு முக்கியம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த சம்பவம் - சீன அதிபர் மாவோ இந்த நாட்டில் இருக்கும் குருவிகள், எலிகள், கொசுக்கள் அழித்து விடுங்கள் என்று ஒரே இரவில் உத்தரவு போட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் விவசாயிகளுக்கு தொந்தரவு தருகிறது.

சொன்னது போல் குருவிகளை சுட்டு வீழ்த்தினார்கள். அதன் விளைவு தெரியாமல் இருக்குமா? சில வருடங்கள் பிறகு நான்கு கோடி மக்கள் இறந்த பிறகே அரசுக்கு தெரியவந்தது குருவிகளை அழித்ததால் மனிதர்கள் இறந்தார்கள என்று. சலீம் அலி சொன்ன மனிதர்கள் இன்றி பறவைகள் வாழலாம் ஆனால் பறவைகள் இன்றி மனிதர்கள் வாழ முடியாது என்ற வாசகம் நூறு சதவிகிதம் சரியாக பொருந்தியது மாவோட செயலால்.


பறவைகள் இந்த உலகத்தில் எவ்வளவு முக்கியம் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. பறவை நோக்குபவர்களின் அடுத்த முயற்சியாக பறவைகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவும்,சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தங்கள் பங்களிப்பை செலுத்துவதுன் மூலம் இயற்கையின் நடுவில் எதிர்கால மனிதர்கள் வாழமுடியும் இல்லையென்றால் மனிதர்கள் நான்கு பக்க சுவற்றின் மத்தியில் இருக்ககூடும்.

பறவைகள்  வலசை செல்லும் நாடுகள்-wikki 
MIGRATION BIRDS

இப்பொழுது குளிர்காலம் என்பதால் வலசை பறவைகள் மற்றும் சரணாலயங்கள் பற்றி பார்ப்போம். 

வலசை பறவைகள் (Migratory Birds) என்பது என்ன?

அதென்ன வலசை(Migration)?

முழுஆண்டு பரீட்சை முடிந்து பிள்ளைகள் ஆயா, தாத்தா வீட்டிற்கு செல்வார்கள் ஒரு மாதம் முழுவதும் இருந்து பள்ளி திறக்கும் பொழுது மீண்டும் ஊருக்கு திரும்புவதை பார்க்க முடியும் ஏன் நாம் கூட அதுபோல் பள்ளி நாட்களில் சென்று வந்திருப்போம். இவற்றைதான் பறவைகளின் உலகில் வலசை என்பார்கள்.

பறவைகள் வருடத்தில் ஒரு சில மாதங்கள் அதன் சொந்த இடத்தில் இருந்து கிளம்பி வேறு ஒரு இடத்திற்கு தற்காலிகமாக சென்று மீண்டும் அதன் சொந்த இடத்திற்கு திரும்புவதையே வலசை பறவைகள் என்பார்கள்.

இப்படி சென்று திரும்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. வாழ்விடத்தில் உணவு கிடைக்காது போதல், தங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாமல்போவது போன்ற காரணங்களால் பறவைகள் தற்காலிகமாக வேறு ஒரு இடத்திற்கு சென்று திரும்பும்.

இரண்டு விதமான காலச் சூழ்நிலையில் பறவைகள் Migration செய்யும்:

1.Winter Migration 

2.Summer Migration 

பெரும்பாலும் நமக்கு தெரிந்தது குளிர்காலத்தில்(Winter)பறவைகள் இந்தியாவிற்கு வருகிறது என்று ஆனால் வெயில் காலத்திலும் சில பறவைகள் வலசை வருவது உண்டு.அதனால் குளிர்கால பறவைகள் வேறு வெய்யில் காலத்தில் வரும் பறவைகள் வேறு ஆகும். 

இரண்டு விதமான வலசை (Migration) உண்டு:

1.வெளிநாட்டு வலசை பறவை (International Migratory Bird)

2.உள்ளநாட்டு வலசை பறவை (Local Migratory Bird)

வெளிநாட்டு வலசை பறவைகள்: (International Migratory Bird)

குளிர்காலத்தில் நாம் படிக்கும் பத்திரிகைகளில் ஒரு பத்தி அல்லது படம் வருஷா வருஷம் வரும். வெளிநாட்டு பறவைகள் எல்லாம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்திருகிறது என்று. இதை அனைவரும் படித்திருப்போம்.

அதாவது குளிர்காலத்தில் வெளிநாட்டில் இருந்து பல பறவைகள் நம் இந்திய துணை கண்டத்திற்கு வந்து சில மாதங்கள் இருந்து பிறகு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திரும்பவும் அதன் தாய் நாட்டிற்கு சென்றுவிடும். இவை வெளிநாட்டு வலசை பறவைகள் என்று பெயர்.
ஏன் வருகிறது?

நம்மாலேயே இந்த குளிரில் இருக்க முடியவில்லை இதில் பறவைகள் எப்படி குளிர் தாங்கும்?
 இந்தியாவில் இருக்கும் குளிர் எல்லாம் இங்கு வரும் பறவைகளை ஒன்றும் செய்யாது ஏனென்றால் அதனுடைய நாட்டில் விழும் பனி மரம், தரை, வீடு என்று முழுவதும் பனியால் போர்வை போல் (உறைந்து) படர்ந்து விடும். மரம் முழுவதும் பனி போர்வையாக இருப்பதால் பறவைகளுக்கு இறை கிடைப்பதில்லை, அங்கே தங்கவும் முடியாது அதனால் உணவை தேடியும், உறைவிடத்திற்கும் அவை இந்தியா போன்ற நாட்டிற்கு வலசை வருகிறது.

இங்கு நான்கு ஐந்து மாதங்கள் இருந்து கோடை ஆரம்பிக்கும் முன் கிளம்பி அதனுடைய நாட்டிற்கு சென்று விடும் அப்பொழுது அங்கு பனி விலக ஆரம்பித்துவிடும்.

Example:
1. பொறி உள்ளான்-Wood Sandpiper
2. பட்டை தலை வாத்து-Bar-Headed Goose 

3. செங்கால் நாரை-White Stork

4. சேற்று பூனை பருந்து-Marsh Harrier 

5. சோளப்பட்சி-Rosy Starling........etc 

இதே போல் நிறைய பறவைகள் வெளிநாட்டில் இருந்து வருடா வருடம் இந்திய துணை கண்டத்திற்கு வருகிறது. இதே போல் வேறு சில நாட்டிற்கும் (ஆப்ரிகா, இலங்கை, ஆஸ்திரேலியா) செல்கிறது.

உள்ளநாட்டு வலசை பறவைகள் (Local Migratory Birds)

வெளிநாட்டில் இருந்து பறவைகள் வருவது போல் இந்தியாவிற்குள்ளேயே வாழும் பறவைகளில், சில பறவைகள் தங்கள் இடத்தை விட்டு வேறு ஒரு இடத்திற்கு மற்றும் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு ஒரு மாநிலத்திற்கு தற்காலிகமாக சென்று பிறகு தங்கள் சொந்த இடத்திற்கே வந்து விடுவதுதான் உள்ளநாட்டு வலசை பறவைகள் ஆகும். இவ்வகை பறவைகள் வெளிநாட்டிற்கு எல்லாம் செல்லாது.

Example:
1.நாமக் கோழி (Common Coot), 2.கரண்டிவாயன் (Eurosian Spoonbill), 3.(Small Pratincole), 4.ஆற்று ஆலா (RiverTern), 5.Black headed Ibis, 6.மஞ்சள்மூக்கு ஆட்காட்டி (Yellow Wattled Lapwing), 7.மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork), 8.கூழைகடா (Spot billed Pelican), 9.நீலவால் பஞ்சுருட்டான் (Blue tailed Bee-eater), 10.மாங்குயில்(Indian Golden oriole)  
  
பறவைகள் போல் விலங்குகள், பூச்சிகள், மீன்கள் போன்ற உயிரினங்கள் கூட வருடா வருடம் வலசை செல்கிறது.

உள்நாடு, வெளிநாடு என்று எங்குமே செல்லாதே பல பறவைகள் நம் வாழிடத்திலேயே இருக்கும். வலசை எல்லாம் இந்த பறவைகளுக்கு தெரியாது. குறைந்து தூரம் கூட செல்லாத பறவைகள் எல்லாம் நம் நாட்டில் உண்டு.

உதாரணம் – செம்போத்து

வலசையின் முக்கிய நோக்கம் உணவு, தங்கும் இடம் ஆகும். இவை சொந்த இடத்தில் அல்லது நாட்டில் தடைப்படும்பொழுது பறவைகள் வலசை செல்கிறது. 

வலசை பறவைகள் பற்றி நிறைய ஆராய்ச்சியெல்லாம் செய்திருகிறார்கள் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள் அதை பற்றி வேறு ஒரு கட்டுரையாக எழுதுகிறேன்.
வெளிநாட்டு வலசை பறவை ஒன்றை பற்றி பார்ப்போம்:

பொறி  உள்ளான் -விக்கிபிடியா
பொறி உள்ளான் (Wood Sandpiper):
இவை வெளிநாட்டில்(சைபிரியா) இருந்து இந்தியாவுக்கு வலசை வரும் பறவை. Eurosian நாட்டை சேர்ந்த பொறி உள்ளான் குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வரும் முதல் பறவையாகும்.சென்னை பள்ளிகரணை சதுப்பு நிலத்திலும் இவற்றை பார்க்கலாம்.தமிழகத்தில் உள்ள நீர்நிலை அருகில் இவற்றை பார்க்கமுடியும்.

பொறி உள்ளான் இந்தியாவிற்கு வருவது போல் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாட்டிற்கும் வலசை செல்கிறது. வெள்ளை புள்ளிகளுடன் அடர் காபி கலரில் மேல் பாகம் அமைந்திருக்கும். அடிபாகம் முழுவதும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

மஞ்சள் பச்சை கலந்த நிறத்தில் கால்களும் அடர் கலரில் அலகும் அமைந்திருக்கும். உணவு என்று பார்த்தால் தவளை, புழுக்கள், சிறிய மீன்கள் போன்றவை சாப்பிடும். அதன் சொந்த நாட்டில் இனப்பெருக்கம் மே, ஜூன் மாதங்களில் செய்துவிட்டு இந்தியா போன்ற நாட்டிற்கு ஆகஸ்ட் மாதம் வந்து ஏறக்குறைய மே மாதம் வரை இருக்கும்.

காணப்படும் இடங்கள்:

சதுப்பு நிலங்கள், ஏரி, ஆறு, ஈரமான விவசாய நிலத்தில்.  
RANGE :

இந்தியா முழுவதும் குளிர்காலத்தில் காணப்படும்.

குறிப்பு:

IUCN Status – Least Concern

பறவையின் வட்டாரப்பெயர்கள்:

1.உள்ளான் 2.பொறி கோட்டான் 3.காட்டு உள்ளான் 4.காடை கொக்கு

பொறி உள்ளான் போல் நிறைய உள்ளான் வகைகள் உள்ளன:
1. ஆற்று உள்ளான் (Marsh Sandpiper), 2.சின்ன பச்சைக் காலி (Green Sandpiper), 3.உள்ளான் (Common Sandpiper), 4.Terek Sandpiper
வெய்யில்(Summer) காலத்தில் வலசை வரும் பறவைகள்:
1.குயில்-Asian Koel 
2.ராகொக்கு-Night Heron
3.Eurasian Golden Oriole
4. அக்கா குயில்-Cuckoos
5.நீலவால் பஞ்சுருட்டான்-Blue-Tailed bee eater  etc..................

வலசை பறவைகளின் அழகை அதன்பின் சென்று படம்பிடித்து உள்ளார்கள் பொறுமையாக பாருங்கள் பல விருதுகள் வாங்கிய படம்:
https://www.youtube.com/watch?v=hu6A7-VWHXg

குளிர்காலத்தில் சரணாலயங்கள் சுறு சுறுப்பாக காணப்படும். காரணம் வலசை பறவைகள் எல்லாம் இது போல் இருக்கும் சரணாலயத்தை நோக்கியே வரும். பெரும்பாலான வலசை பறவைகள நீர்நிலை பறவைகளே(Wetland Birds)ஆகும்.

தமிழ் நாட்டில் மிக முக்கியமான, இந்தியாவில் மிக பழமையான பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என்று சொல்லாம். ஆயிரக்கனக்கான நீர் பறவைகள் வருடம் தோறும் இங்கு வருகிறது.

சென்னையில் இருந்து குறைந்த தொலைவே வேடந்தாங்கல் இருப்பதால் எல்லோரும் செல்லமுடியும். வேடந்தாங்கல் சரணாலயத்தை பற்றி போன வருடம் சென்று வந்ததை பற்றி எழுதிய கட்டுரை http://birdsshadow.blogspot.in/2016/03/late-comers-to-vedanthaankal.html.

இந்த வருடம்(2016) அக்டோபர் மாதமே வேடந்தாங்கல் சென்று வந்ததில் நத்தை குத்தி நாரைகள் மட்டுமே அதிகம் பார்க்க முடிந்தது.

தமிழ் நாட்டில் இருக்கும் பறவைகள் சரணாலயம்:
1.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்–காஞ்சிபுரம் மாவட்டம்
2.கரிக்கிளி பறவைகள் சரணாலயம் – காஞ்சிபுரம் மாவட்டம்
3.பழவேற்காடு பறவைகள் சரணாலயம் – திருவள்ளூர் மாவட்டம்
4.உதயமார்தாண்டம் பறவைகள் சரணாலயம் - திருவாரூர் மாவட்டம்
5.வடுவூர் பறவைகள் சரணாலயம் - தஞ்சாவூர் மாவட்டம்
6.கரைவெட்டி பறவைகள் சரணாலயம் - பெரம்பலூர் மாவட்டம்
7.வெள்ளோடு பறவைகள் சரணாலயம் - ஈரோடு மாவட்டம்
8.வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் -சிவகங்கை மாவட்டம்
9.கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் - ராமநாதபுரம் மாவட்டம்
10.சித்ரங்குடி பறவைகள் சரணாலயம் -இராமநாதபுரம் மாவட்டம்
11.மேல்செல்வனூர் பறவைகள் சரணாலயம் - இராமநாதபுரம் மாவட்டம்
12.கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் - திருநெல்வேலி மாவட்டம்

நீர் பறவைகள் பார்ப்பதற்கு குளிர்காலம் மிகவும் ஏற்றது. உங்கள் ஊருக்கு அருகில் இவற்றில் ஏதாவது ஒரு சரணாலயம் அமைந்திருக்கும். அதனால் மேலே இருக்கும் ஏதாவது ஒரு சரணாலயத்திற்கு சென்று கண்டிப்பாக பாருங்கள் எண்ணற்ற உள்ளூர் மற்றும் வெளிநாடு வலசை பறவைகளை ஒரே இடத்தில பார்ப்பதற்கு இதுவே சிறந்த வழி.

-தொடரும் 

-செழியன்

1 comment:

  1. அருமையான கட்டுரை...
    I have seen the documentary film on winged migration after your suggestion. Beautiful and worth watching. Thanks for your service towards birds.

    Masilamani Selvam

    ReplyDelete