Sunday 2 April 2017

கடிதம்



அன்புள்ள செழியன்,

நான் சமீபத்தில் 'பறவை நோக்குதல்' அறிமுக வகுப்பில் கலந்து கொள்ள நேர்ந்தது. எனது முதல் களப்பயிற்சியை Lalbagh-இல் நேற்று தான் முடித்தேன். 'பறவை நோக்குதல்' சம்பந்தமாக தெரிந்து கொள்வதற்காக வலைதளத்தில் தேடுகையில் தங்களுடைய தொடர் கட்டுரையை கண்டடைந்தேன். தெளிவாக, நேர்த்தியுடன் தாங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக சிறப்பான பணியை தமிழில் முன்னெடுத்துள்ளீர்கள். தொடந்து தாங்கள் எழுதவிருக்கும் கட்டுரைகளை படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.

நன்றி,

இ.ஜனார்த்தனன்.

Wipro, Bengaluru.


வணக்கம் ஜனார்த்தனன்,

மிக்க நன்றி. பறவை நோக்குதல் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேய இருப்பதால் நான் பார்த்தவரை இன்றும் மேல் தட்டு மனிதர்களின் பொழுதுபோக்காக மட்டுமே உள்ளது. தமிழகத்தில் எண்ணற்ற பறவை வகைகள் உள்ளன ஆனால் அவற்றை உள்ளூர் மனிதர்களின் துணையில்லாமல் பதிவு செய்யமுடியாது அதனால் பறவை நோக்குதல் பொழுது போக்கு இவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நினைப்பு தோன்றிய கணத்தில் ஆரம்பித்த தொடர்.

தொடர்ந்து பறவைகளை பாருங்கள் நாளடைவில் அவை உங்களுக்கு  ஒரு நல்ல பொழுதுபோக்காக மாறுவதை அறிந்துகொள்விர்கள். உங்களை சேர்ந்தவர்களுக்கும் அறிமுக படுத்துங்கள். பறவை நோக்குதல் தொடரை புத்தகமாக கொண்டு வரும் நினைப்பும் இருக்கிறது.

அழகிய தமிழில் எழுதியதற்கு நன்றி.

அன்புடன்
செழியன்

அன்புள்ள செழியன்,

'
பறவை நோக்குதல்' புத்தகமாக வெளிவருதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் அதிகமானோரிடம் சென்று சேரும். வாழ்த்துகள் :)
நான் 'Wipro' வில் நடைபெற்று வரும் 'பறவை நோக்குதல்' வகுப்புகளில் பங்கெடுத்து வருகிறேன். வகுப்பறை + களப்பயிற்சி எனக் கலந்து சொல்லித்தரப்படுகிறது. சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

நான் இங்கு பறவை நோக்குதலில் ஈடுபடுபவர்களை கவனித்தவரை அனைவரும் வனவுயிர் புகைப்பட ஆர்வலர்களாகவே உள்ளனர். எல்லோரும் கேமரா-சகிதமாக, புள்ளினங்களை புகைப்படம் எடுப்பதிலே தான் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலும் அதிலே தான் மனநிறைவும் அடைகின்றனர் என்று தெரிகிறது. ஆக இதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலோரின் நோக்கமும் இதுபோல தான் உள்ளதா?

நாம் பார்க்கும் பறவைகளை பதிவு செய்வதற்காக புகைப்படம் எடுப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பறவை 'நோக்குதலின்' சாரம் இதுவல்ல அல்லவா? இதுபற்றி உங்கள் கருத்தை அறிய விழைகிறேன்.

நன்றி,
ஜனா.

அன்புள்ள ஜனார்த்தனன்,

பறவை பார்த்தல், பறவைகளை புகைப்படம் எடுத்தல் இரண்டும் ஒன்றுகொன்று தொடர்பு இருக்கிறது என்றாலும் புதியவர்கள் பறவை நோக்குதலில் ஈடுபடும்பொழுது கேமராவை, தேர்வு எழுதும்பொழுது எப்படி புத்தகத்தை வெளியே வைத்துவிடுகிறோமோ அதே போல் கேமராவை வீட்டிலேயே வைத்துவிட்டு செல்லவேண்டும்.

இல்லை எடுத்து செல்வோம் என்பவர்களை இப்படி நினைத்து கொள்வேன்.  கல்யாண மண்டபத்தில் புகைப்படம் எடுப்பவர்க்கும் கல்யாண வீட்டிற்க்கும் உணர்வுபூர்வமான உறவுகள் இருக்காது ஆனால் கல்யாண மண்டபம் முழுவதும் அவர்தான் அங்கும், இங்கும்  கானப்படுவார். கல்யாணம் முடிந்து அவர் வெளியே சென்றால் கல்யாணத்தை பற்றி எந்தவித பேச்சும் இருக்காது அவரிடம் அடுத்து வேறு எங்கு, எப்போ கல்யாண என்பதில் மட்டும்  எண்ணம் இருக்கும். ஆனால் கல்யாணத்திற்கு வந்தவர்கள், முடிந்து சென்றால் அதை பற்றியே பேசுவார்கள், விவாதிப்பார்கள், நிறை குறைகளை மனம்திறந்து சொல்லுவார்கள்.

புதியவர்கள் பறவை பார்க்க செல்லும்பொழுது தொலைநோக்கி, குறிப்பேடு, பறவை கையேடு இருந்தால் போதும் பறவை பார்த்த பிறகு அதை பற்றி பேசுவதும், விவாதிப்பதும் அந்த பறவையை இன்னும் நுணுக்கமாக தெரிந்து கொள்ள வழிவகுக்கும். அதை விட்டு புதியவர்கள் படம் எடுக்க மட்டும் பறவை பார்க்க செல்வேன் என்பவர்கள் கல்யாண மண்டபதில்  புகைப்படம் எடுப்பவர்கள் போல்தான் இவர்களுக்கு பறவை முக்கியம் இல்லை படம் தான் முக்கியம்.

புதியவர்கள் இரண்டு வருஷம் பிறகு கேமராவை, 40 சதவிகிதம் பறவை பார்த்தலில் பயன்படுத்தி கொள்ளவேண்டும். அனுபவம் நிறைந்த சுற்றுச்சூழல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் அவர்கள் இன்றும் புகைப்படம் எடுக்காமலே பறவை, விலங்குகள் பார்த்துவருவது குறிப்பிடத்தக்கது.

அன்புடன்

செழியன்

அன்புள்ள செழியன்,

திருமணத்தில்  புகைப்படம் எடுப்பவர்கள்-பறவை நோக்குதலில் புகைப்படம் எடுப்பவர்கள் அருமையான ஒப்பீடு. நானும் காமிரா வாங்கும் எண்ணத்தை தற்போதைக்கு ஒத்திவைத்துள்ளேன். தற்போது தொலைநோக்கி (Nikon 10X40) மட்டும் வாங்கியுள்ளேன்.
தங்கள் email மூலம் 'ஆட்காட்டி' உங்களுக்கு பிடித்தமான பறவை என்று ஊகிக்கிகிறேன். அழகான பறவை. அதன் ஒலியும் கேட்பதற்கு இனிமையாகவே இருக்கிறது :)
இதுவரை நான் பார்த்த சொற்ப புள்ளினங்களில், அரசவால் ஈ பிடிப்பான் என்னை மிகவும் கவர்ந்திருந்தது :)

அன்புடன்,
ஜனா

3 comments:

  1. அற்புதமான வலைப்பக்கம் இது! இந்த சம்பாஷணையும் பறவை நேசத்துக்கு ஆரோக்யமான ஒன்று! காமிரா கோணத்தை விட முதலில் வெறும் கண்களில் பார்க்கும் கோணமே நமக்கும் பறவைகளுக்குமான பிணைப்பை உருவாக்கும்!

    ReplyDelete
  2. Glad to see the emails posted. Hope it helps. Thanks for sharing your insights Chezheyan. :)

    ReplyDelete