Friday 14 April 2017

முதுமலையில்



பெங்களூர், மைசூர், பந்திப்பூர், முதுமலை இந்த வழியாக மதியம் ஒரு மணியளவில் முதுமலையில் இருந்தேன். ஆரவாரம் அதிகம் இல்லை தனியார் வண்டிகளும் கானுலா அழைத்து செல்வதற்கு, வந்து இறங்கும் அனைவரையும் கூப்பிடுகிறார்கள். அரசும் அழைத்து செல்கிறது. இது போல் செல்லும் உலா நம்மால் பெரியதாக ஒன்றும் பார்க்க முடியாது என்றாலும் அங்கு வருபவர்களுக்கு இது மட்டுமே ஒரே வழி. 

பெரும்பாலும் இந்த கானுலா buffer Zone என்று சொல்லப்படுகிற இடத்தில்தான் நம்மை அழைத்து செல்கிறார்கள். Core Zone செல்லவேண்டும்மென்றால் அதற்கு முறையான அனுமதி பெற்று செல்லவேண்டும். பறவை பார்க்க உதகை செல்லும்பொழுது வழியில் தென்பட்டதால் நின்றுவிட்டேன்.

மான் கூட்டங்கள் நிறை காட்டில் பார்க்க முடிவது புதியவர்களுக்கு நிச்சயம் சந்தோஷம் தரக்கூடியது. யானையை பார்த்த உடன் ஆரவாரம் ஆனால் அவை கும்கி யானை அல்லது வளர்ப்பு யானைகள் என்று தெரிந்த பின் அமைதியானார்கள். வண்டி ஓட்டுனர் ஆங்காங்கே நிறுத்தி செல்கிறார். மான்கள் அதிகம் தென்பட்டதால் இங்கு புலி தென்படுமா என்று ஆவல் எல்லோருக்கும் இருந்தது.

இரவு ஒன்பது மணிக்கு மேல் சாலையில் வண்டியில் செல்வது தடை செய்ப்பட்டுள்ளது அவை நிச்சயம் விலங்குகளுக்கு நன்மை தரக்கூடியது. சீரான சாலை என்பதால் வண்டிகள் வேகமாக செல்கிறது. இரவிலும் அதே போல் சென்றால் நிறைய விலங்குகள் அடிப்பட அதிக வாய்ப்பு உண்டு. ஆங்காங்கே, கிழே இறங்காதிர்கள், யானை கடக்கும் வழி, புலி செல்லும் வழி, விலங்குகளுக்கு உணவு அளிக்காதிர்கள் என்று அறிவிப்பு பலகைகள் காணப்படுகிறது.

தனியார் மற்றும் அரசு வண்டிகள் வேறு வேறு பாதைகளில் வருபவர்களை காணுலா அழைத்து செல்கிறது. மாலையில் நாம் முதுமலையில் இருந்தால் புள்ளி மான்கள் சாலைக்கே வருவதை பார்க்கமுடியும்.



கலைக்கூடங்கள் மற்றும் பசுமை கடைகள் இருந்தும் மூடி இருப்பதால் அங்கு வரும் பார்வையாளர்கள் வண்டி எடுக்கும் வரை சும்மா அமர்ந்து இருப்பதை தவிர வேறு வழி இல்லை. நான் கலைக்கூடம் இருக்கும் கதவு அருகே சென்று கைவைத்ததால் திறந்து கொண்டது. உள்ளே சென்னை அருங்காட்சியத்தில் இருப்பது போல் விலங்குகள் பாடம் செய்து வைக்கபட்டுள்ளது, சில புகைப்படங்களும் இருப்பதை பார்க்க முடிந்தது.

Common Coot Nest
மதியம் என்பதால் உணவுக்கு என்ன செய்வது? இதற்காகவே அங்கு சிறு சிறு கட்டிடங்கள் தங்குவதற்கு உள்ளன அங்கு உள்ள பணியாளர்களிடம் சொல்லிவிட்டால் கானுலா சென்று திரும்பியவுடம் சுட சுட மதிய உணவு பரிமாறப்படுகிறது. அருகிலேயே ஆறு ஓடி கொண்டிருப்பதால் இறங்கி கால் நனைக்கலாம், மான்களை அருகில பார்க்க முடிகிறது. வேறு ஏதாவது விலங்குகள் வருமா என்ற உணர்வுடம் பார்த்து கொண்டே இருந்தேன் மான்களை தவிர வேறு எதுவும் பார்வைக்கு இல்லை.

Common Coot
முதுமலையில் இருந்து இரண்டு வழியில் உதகைக்கு செல்ல முடிகிறது. ஒன்று முப்பதி ஆறு கிலோமீட்டரில் செல்ல முடியும் ஆனால் அணைத்து வண்டிகளும் நேர் பாதையிலேயே அதிக கிலோமீட்டர் வழியிலேயே அதாவது கூடலூர் சென்று உதகை செல்கிறது காரணம் மலை ஏறுவதற்கு இதுவே சிறந்து ஆக இருக்கிறது. 

உதகையில் நாமக்கோழி (Common Coot) ஒன்று கூட்டில் உள்ள தன் குஞ்சுகளுக்கு உணவை தரும் காட்சியை பார்க்க முடிந்தது. முதுமலையில் புள்ளி மான்களை, காட்டு சூழலில் அதிகம் பார்க்க முடிவது மட்டுமே சிறப்பு  அதனால் இந்த  சிறு உலாவில் அதிகம் பார்க்க முடியவில்லை என்றாலும் இதுபோல் சென்று வருவது நகரத்தின் நரக வாழ்கை முற்றிலும் மறந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம். 

போய் வாருங்கள்,  மான்கள் உங்களுக்காக காத்துகொண்டிருக்கிறது ..........................

-செழியன்

lapwing2010@gmail.com


No comments:

Post a Comment