Monday 29 May 2017

இயற்கை நடை - IIT Madras



ENTRANCE
630 ஏக்கர் இடம் என்று ஒருவர் சொல்லும்பொழுது பெரியதாக தெரிந்தாலும் அங்கு நடந்து சுற்றும்பொழுது மட்டுமே அதன் பிரம்மாண்டத்தை உணரமுடியும். இந்தியாவில், தமிழ்நாட்டை தவிர வேறு ஒரு மாநிலத்தில் இருந்து ஒருவரை நேரடியாக இங்கு அழைத்து வந்து வெளியே அனுப்பாமல் இரண்டு நாள் தங்கவைத்து, பிறகு அவரிடம் நீங்கள் இருப்பது தென்மாநிலங்களிலேயே உள்ள  மிக பெரிய நகரத்தில் இருக்கிறீர்கள் அதுவும் அமைச்சர்கள் வாழும் பகுதியில் என்று சொன்னால், அவர் நம்மை ஒரு மாதிரியாக பார்ப்பதற்கு வாய்ப்புண்டு. ஆமாம் சென்னை IITயில் நீங்கள் புதியவர்கள் என்றால் இப்படியே உணர்வீர்கள்.


மரங்கள், மான்கள், நரிகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் ஏரி இவற்றின் இடையே கல்வி நிலையம். படிக்கும் மாணவர்களின் மனநலம் அமைதியாக இருக்கும் என்பதற்கு சாட்சியாக கல்வி நிலையத்தின் ஆரம்பத்தில் இருக்கம் பலகையே உதாரணம். 

பறவைகள் பார்ப்பது என்பது ஒருவித பொழுதுபோக்கு என்றாலும் இயற்கை நடை செல்வது அணைத்து உயிரினங்களையும் ஒருசேர பார்த்து செல்ல முடியும். அதுவும் கூடவே ஒருவர் வந்து அனைத்தை பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தால் சொர்கம்தான். IIT-மெட்ராஸ் இயற்கை நடையில் அப்படியே எங்களுக்கு அமைந்ததுவிட்டது. 

காலை 6.30மணிக்கு இருபது பேர் IIT மெட்ராஸ்-டெல்லி அவன்யு முன்பு ஒன்று சேர்ந்தோம். Dr. Susy Varughese நடுவில் வந்து அனைவருக்கும் ஹாய் என்று சொன்னார். IITயில் பேராசரியராக பணிபுரிகிறார். இயற்கை நடைக்கு ஏற்பாடு செய்தவர் மற்றும் எங்களுக்கு அனைத்தையும் எடுத்து சொன்னவர். ஒரே கொண்டாட்டமான மனநிலையிலேயே இருப்பதை பார்க்கமுடிந்தது. மணி ஏழு ஆனவுடன், ஆரம்பிக்கலாமா? என்று சொல்லிவிட்டு நின்றிருந்த இடத்தில் இருந்தே ஆரம்பித்தார்.
ஒரு ஆண் குயில் ஆல மரத்தில், மரத்திலோ நிறைய சிறு சிறு பழங்கள், அதைவைத்து இங்கு எந்த வகையான பறவைகள் இந்த பழங்களை சாப்பிடும் என்று சொல்லிக்கொண்டே கீழே விழுந்திருக்கும் பழங்களை எடுத்து காண்பித்தார். தொடர்ந்து அருகில் உள்ள மரங்களை பற்றி சொல்லிக்கொண்டே வந்தார்.

Asian Koyel
புள்ளி மான்கள் நம்முடன் நடந்து வருவதை பார்க்க முடிகிறது. நான் உள்ளே வரும்பொழுது நடை பாதையில், மான்கள் காலை நடை சென்றுகொண்டிருந்தது. ஓர் இட வாழ்வியான வெளிமான்களை பார்க்க முடியவில்லை. அதிக அளவில் குரங்குகள் தரையிலும், மரத்திலும் நடந்து கொண்டிருந்தது. கோடை என்பதால் பறவைகளை நிறைய பார்க்கமுடியவில்லை என்றாலும் குக்குருவான், மரங்கொத்தி போன்றவற்றின் குரலும், அவை அமர்ந்திருந்த மரங்களையும் பார்த்தோம். சில பேர் படம் எடுத்து கொண்டிருந்தார்கள். 

உள்ளேயே மிக பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. கோடையிலும் வற்றாமல் நீர் இருப்பது பறவைகளுக்கு நிச்சயம் நன்மை தரும். இராகொக்கு பறவையை வேடந்தாங்கலுக்கு அடுத்து அதன் வாழிடத்தில் இங்கு தான் பார்க்கிறேன். அதிகம் இல்லையென்றாலும் இரண்டுக்கு மேல் இருந்தது. ஒரு பாம்புதாரா பறவை (நயன்தார அல்ல) கரை ஓரத்தில் தன் இறகுகளை விரித்து காயவைத்து கொண்டிருந்தது. தன் கழுத்தை நீட்டியும் “S” வடிவில் மடித்தும் விளையாடிக் கொண்டிருந்தது. 

மரங்களை பற்றி நிறைய சொல்லி கொண்டிருந்தார்கள் எனக்கு இதுதான் முதல் இயற்கை நடை என்பதால் மரங்களை பற்றி உன்னிப்பாக கவனித்துகொண்டிருந்தேன். ஆல, அரச, புங்க மரம், புளிய மரம், படர் கொடிகள் அங்கு இருக்கும் பூச்சிகள் போன்றவற்றை பற்றி மற்றவர்கள் சொல்லி கேட்கும்பொழுது சுலபமாக மண்டையில் ஏறிவிடுகிறது. இத்தனைக்கும் தாவரவியல், (Botany)  ஒரு பாடமாக எடுத்து படித்துள்ளேன் ஆனால் ஒன்று தெரியவில்லை எனக்கு.

ஒரு புதர், அவற்றை காண்பித்துவிட்டு இங்குதான் ஆறுமணி குருவி(Indian Pita) இறை தேடும், இன்னும் சில பறவைகளை இங்கு பார்த்துள்ளேன் இவற்றை அகற்றி விட்டால் இந்த பறவைகளின் வாழிடம் என்ன ஆகும் என்று விளக்கி கொண்டிருந்தார் Dr.Susy Varughes. எல்லோரும் அவர் சொல்வதை கவனித்துகொண்டிருந்தோம். அங்குள்ள அனைத்தையும் மிக தெளிவாக தெரிந்து வைத்துள்ளார். மரங்களை பற்றி சொல்லி கொண்டிருக்கும்பொழுதே வானில் கரும் பருந்து பறந்து செல்வதை காண்பித்தார்.

நிறைய மனிதர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. திரு.சந்துரு, திரு.குமார், திரு.அரவிந்த், கிஷோர் மற்றும் அவர்களின் தோழர்கள், ஷரன், விகாஸ், பள்ளி மாணவர்கள் என்று சுற்றி வந்துகொண்டிருந்தோம்.

பறந்து கொண்டிருந்த பறவைகளை பார்ப்போம்: மூன்று கருப்பு-வெள்ளை மீன்கொத்தி(Pied Kingfisher),பாம்புதாரா(Darter), அரிவாள் மூக்கன்(White Ibis), கூழைகடா(Pelican), கரும்பருந்து(Black Kite) பறந்து கொண்டிருந்தது. குக்குருவான் மரத்தில் அமர்ந்து இருந்து பறந்து சென்றது. தவிட்டு குருவிகள் அதிக அளவில் பறந்து அங்கும் இங்கும் செல்வதை பார்க்க முடிந்தது.

உள்ளேயே கோவில் இருக்கிறது அதன் வழியாக சென்று நாம் ஏரியை அடைய முடியும். போகும் வழியில் நிறைய மரங்கள் வர்தா புயலால் சாய்ந்து- விழுந்திருப்பதை அனைவரும் பார்த்தோம். சில பெரிய மரங்கள் வேரோடு விழுந்திருப்பதை பார்க்கும்பொழுது ஆச்சரியாமாக இருந்தது. சந்திரசேகர் சார் அவர்கள், விழுந்திருக்கும் மரங்களில் ஆணி வேறே பார்க்க முடியவில்லையே என்று சொன்னார். அவை உண்மையும் கூட. எப்படி இவ்வளவு பெரிய மரங்கள் விழுந்தது என்று கேள்வி வருகிறது.

Snake Skin
IIT உள்ளே இருக்கும் மற்றவற்றை பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்- மிக அழகான (Running Race Ground) ஓடு தளம் இருக்கிறது. உலகளவில் எப்படி இருக்குமோ அதே போல் இருக்கிறது. சிலர் அதில் நடந்து, ஓடி கொண்டிருந்தார்கள். அங்கு நிறைய மரங்கள் அதில் இருக்கும் பூச்சிகளை பார்த்துகொண்டிருந்தோம். சாப்பிட இரண்டு உணவகங்கள் இருக்கிறது சரியான விலையில் உணவு கிடைப்பது சிறப்பு. சுற்றி வந்த பிறகு சந்திரசேகர் சார் அங்கு அழைத்து சென்று தேவையானவற்றை வாங்கிகொடுத்தார். யாருக்கும் அழுத்தம் கொடுக்காமல் என்ன தேவையோ அதை அவர் வாங்கியது கற்றுகொள்ளவேண்டிய பண்பாகும்.

உள்ளே முழுவதும் நடந்து செல்வது என்பது முடியாத காரியம். வண்டி இருந்தால் மட்டுமே சாத்தியம். அங்கு இருப்பவர்களுக்கான வீடுகள், வங்கி, உணவகங்கள் விளையாட்டு மைதானம் இருக்கிறது. வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க கடைகள் உள்ளதா என்று தெரியவில்லை.

ஒரு இடத்தில் பாம்பின் தோல் காணப்பட்டது. பாம்பு சட்டை உரித்து உள்ளது என்றும் இதை சொல்லுவார்கள். அதைப்பற்றி Dr.Susy Varughes விரிவாகவே சொன்னார். ஆனால் இவை எந்த பாம்பின் தோல் என்று சந்தேகம் இருந்தது இதற்கு சந்திரசேகர் சார் பதில் சொன்னார் எல்லாவற்றை பற்றியும் இவருக்கு தெரிந்து இருக்கிறது இவரிடம் இருந்து நிறைய கற்றுகொள்ள முடியும்.

மரம் ஒன்றில் இருந்த எட்டுகால் பூச்சியை அனைவரும் பார்த்து கொண்டிருந்தார்கள். மர கலரிலேயே இருந்ததால் மிக அருகில் சென்று பார்க்கும்பொழுதும் தெரியவில்லை. அவற்றை படம் எடுத்து பெரியதாக்கி பார்க்கும் பொழுது மட்டுமே தெரிந்தது.

நிறைய பேர் நடைபயிற்சியில் இருந்தார்கள். நடப்பதற்க்கு இடம் இல்லை என்று சொல்லமுடியாத அளவுக்கு இடம் விசாலமாக இருப்பதால் கடற்கரை அருகில் சென்று நடக்கவேண்டும் என்ற கவலை இவர்களுக்கு இல்லை. 

உள்ளே செல்ல நிறைய வழிகள் இருந்தாலும் அவ்வளவு சுலபமாக உள்ளே செல்லமுடியாது. யாரவது நமக்கு தெரிந்தவர்கள் இருந்தால் மட்டுமே சென்று வரமுடியும். Dr.Susy Varughes முயற்சியில் MNS உறுபினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயற்கை நடைக்கு முயற்சியெடுத்த -Dr.Susy Varughes மற்றும் MNSக்கு மிக்க நன்றி.    

-செழியன்

lapwing2010@gmail.com

 


2 comments:

  1. I have been acquianted with the campus for last 15 years.. Almost 50% of the greenery is gone for hostels, residences, new departments. Sadly, with the increase in concrete, the secured feeling is gone.. I could walk on the roads in the midnights 12 years back.. I doubt that now.

    ReplyDelete
  2. You have disclosed the beauty of IIT Madras campus to the world including Chennai people.
    Good narration...

    ReplyDelete