Thursday 8 June 2017

பறவை நோக்குதல்- 11: (Wetland Birds)




பறவைகளை அதிகமாக ஒரே இடத்தில் பார்ப்பதற்கு சிறந்த வழி நீர் நிலை அருகில் பார்க்க செல்வதே அதிகம் சுற்றி அலையை வேண்டியதில்லை. ஆரம்பத்தில் சிறுவர்களை பறவை பார்க்க அழைத்து செல்லும்பொழுது நீர் நிலை அருகில் அழைத்து சென்றால் மகிழ்வார்கள்.
நீர் புலப் பறவைகள் என்றால்?

பறவை நோக்குதல்- 7 பகுதியில் Waders பறவைகளை பற்றி பார்த்தோம். கால் மற்றும்  விரல்கள் நீளமாக, நீரில் அல்லது  நீர் ஓரங்களில் இருக்கும் சேற்றை கிளறி, இரையை தேடும் பறவைகள் என்று பார்த்தோம். இவையும் நீர் புலப் பறவைகள்தான் ஆக இவை தவிர வேறு நீர் புலப் பறவைகள் என்பது என்ன ?

எதையும் சிறு உதாரணம் கொண்டு பார்த்துவிட்டால் சுலபமாகிவிடும்.

எதற்கும் ஒரு முறை பறவை நோக்குதல்-7 தொடரில் Wader பறவைகள் பற்றி படித்துவிடுங்கள் இந்த கட்டுரை இன்னும் சுலபமாக இருக்கும். Bird Watching-7 Wader Birds

உதாரணம்:

மீன்கொத்தி மற்றும் மஞ்சள் மூக்கு நாரை இவை இரண்டும் நாம் நீர் ஓரங்களில் அதிகம் பார்க்க முடியும். இதில் மீன்கொத்தியை நாம் Wader என்று சொல்ல முடியுமா என்றால் இல்லை என்று சொல்வோம் காரணம் Wader அடையாளங்கள் இவற்றுக்கு இல்லை. ஆனால் இவை இரண்டும் நீர் புலப் பறவைகள் என்று உறுதியாக சொல்ல முடியும்.

அதாவது Wader பறவைகளுடன் மீன் கொத்தி, வாத்து வகை பறவைகளும் கலந்தே இருக்கும் இவை அனைத்தும் சேர்ந்தே நீர் புலப் பறவைகள் ஆகும்.

நம்முடைய  Life Listல் அதிகம் நீர் நிலை பறவைகளே இருக்க காரணம் அதிகம் அலைச்சல் இல்லாமல் ஒரே இடத்தில் அதிக பறவைகளை பார்ப்பதே. புதியவர்கள் அரம்பத்தில் நீர் நிலை அருகில் கவனம் செலுத்துங்கள் வெளி உலகில் (காடு, வயல்வெளிகள் அருகில்) அதிகம் தேடி, தேடி பறவைகளை பார்க்க முடியவில்லை என்ற கவலை இங்கு இருக்காது.

நீர் நிலைகளை (Wetland) பற்றி சிறு வரலாற்றை தெரிந்து கொண்டு மேலே செல்வோம்:

ராம்சர் ஒப்பந்தம் (Ramsar Convention) :

ஈர நிலப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் போன்றவை தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகெங்கிலும்
நிறைய உள்ளது.  ஈர நிலப் பகுதிகளின் அமைப்பை, சுற்றுச்சூழலை, உயிரினங்களை அதன் தன்மையில் இருந்து மாறாமல், அழியாமல் பாதுகாக்க உலகளவில் பல நாடுகள் ஒன்றிணைந்து இரான்(Iran) நாட்டில், ராம்சர்(Ramsar) என்ற இடத்தில் முதல் முறையாக 2nd Feb 1971ம் வருடம் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ராம்சார் ஒப்பந்தம் என்று பெயர்.

இந்த ஒப்பந்தம் மூலம் உலகளவில் ஒவ்வொரு நாட்டில் உள்ள முக்கிய ஈர நிலப் பகுதிகளை கண்டறிந்து அவற்றுக்கு ராம்சர் அந்தஸ்த்து பெற்ற நீர் நிலப்பகுதி என்று வழங்குவார்கள். அப்படி அங்கீகாரம் பெறப்பட்ட நீர் நிலைகளுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து அங்குள்ள தாவரம், விலங்குகள், மற்ற உயிரினங்கள், சுத்த தண்ணீர் போன்றவற்றை அதன் தன்மையை கெடாமல் போற்றி பாதுகாக்க வழிவகை செய்யப்படுகிறது. மற்றும் அங்கு எந்த வித கட்டுமானமும் வராமல், வளர்ச்சி என்ற பெயரில் இடத்தை ஆக்கரமித்தால் அவற்றை தடுப்பதற்கு ராம்சர் அமைப்பு நடவடிக்கை எடுக்கிறது. 

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இந்த மாநாடு நடைபெறும். ஒவ்வொரு முறையும் வேறு வேறு நாட்டில் நடைபெறுகிறது. அடுத்து துபாயில் நடைபெறும். எங்கு நடந்தாலும் தலைப்பு ஒன்றுதான்-ராம்சர் ஒப்பந்தம்(Ramsar Convention) என்ற பெயரிலேயே நடைபெறும். 

இந்தியாவில் இதுவரை 26 ஈர நிலத்திற்கு ராம்சர் அந்தஸ்த்து கிடைத்துள்ளது.  தமிழ்நாட்டில் ஒரே ஒரு இடத்திற்கு, கோடியக்கரைக்கு (Point Calimer Wildlife & Bird Sanctuary) மட்டும் ராம்சர் அந்தஸ்த்து(Ramsar Site) பெறப்பட்டுள்ளது.

உலகளவில் இதுவரை மொத்தம் 2231 ஈர நிலப்பகுதிகள், ராம்சர் அந்தஸ்த்துடன் உள்ளது. அதிக அளவில ராம்சர் அந்தஸ்த்து பெற்ற நாடாக UK உள்ளது. அங்கு 170  ஈர நிலங்கள் இந்த அமைப்பின் கீழ் வருகிறது. 

ராம்சர்(Ramsar) அந்தஸ்த்து பெற்ற இடம், தவறாக பயன்படுத்தினால் அதனை அமைப்பின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்யமுடியும். சென்னையில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கு ராம்சர் அந்தஸ்து கிடைத்திருந்தால் இப்பொழுது இருப்பதுபோல் கட்டிடங்கள் சதுப்புநிலத்திலேயே வருவது தடைப்பெற்றிருக்கும்.

ராம்சர் (Ramsar) என்ற இடத்தில் முதல் முறையாக மாநாடு நடைபெற்றதால் அந்த இடத்தின் பெயரே ஒப்பந்தத்திற்கு வைத்துவிட்டார்கள். இன்றுவரை உலகில் எங்கு மாநாடு நடந்தாலும் இந்த தலைப்பின் பெயரிலேயே நடைபெறுகிறது.

உலக ஈர நிலம் நாளாக( World Wetland Day) 2nd FEB  கொண்டாடப்படுகிறது. இந்த தேதியில்தான் முதல் முறையாக இரானில் மாநாடு நடைபெற்ற நாளாகும். போதும் ஈர நிலங்கள் என்று நீங்கள் சொல்வது புரிகிறது. இங்குதான் நாம் பறவைகளை பார்க்க போகிறோம். வாருங்கள் பறவைகள் உலகத்திற்கு செல்வோம்.


நீர் நிலை பகுதிகள் :

சதுப்பு நில பகுதிகளை தவிர்த்து குளம், ஏரி, குட்டை, அணை பகுதிகள், கண்மாய், ஓடை, வாய்க்கால், வயல்வெளிகள் போன்ற  பகுதிகளில் நீர் நிலை பறவைகள் காணப்படும். நீர் நிலை பறவைகளின் முக்கிய உணவான மீன், நண்டு, புழு, பூச்சி போன்றவை இப்பகுதியில் நிறைய கிடைக்கும்.

நீர்புலப் பறவைகள் (Wet land Birds) :


அ.  வாத்து வகைகள் (Duck,  Goose  and  Swans)


. Waders பறவைகள் 


இ. மற்ற பறவைகள் 


புள்ளி வாத்து - மாசிலாமணி
Bar Headed Goose - Wikipedia
அ. வாத்து வககைகள் (Duck, Swans and Goose) :

வாத்து என்றவுடன் உடனே நம் வீட்டருகில் ஓட்டி செல்லும் வாத்துகள் நினைவுக்கு வரலாம். தட்டி, தட்டி, அசைந்து, அசைந்து நடந்து செல்வதை பார்த்திருப்போம். பெரும்பாலும் இவை பறந்து செல்வதை பார்த்திருக்க மாட்டோம். உண்மையில் பல ஆயிரம் கிலோமீட்டர் பறந்து செல்லும் திறமை உள்ளவை. ஐரோப்பாவில் இருந்து, இமயமலை உயரத்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் வாத்துகள் உண்டு. நன்கு பறக்கும் திறமை உள்ள பறவை தான் வாத்துக்கள்.

பொதுவாக அணைத்து வாத்துகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தெரிந்தாலும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மூன்று வகைகள் பார்க்க முடியும். அன்ன பறவை பற்றி கேள்வி பட்டிருப்போம் அப்படி இருக்கிறதா என்றால் இருக்கிறது என்று சொல்லலாம்.

Duck, Swans and Goose வேறுபாடுகள்:

பொதுவாக இப்பறவைகளை வாத்து என்ற பொது பெயரில் அழைக்கப்பட்டாலும் இவற்றில் நிறைய வேறுபாடுகள் உண்டு.

1. Duck-Goose-Swan இவை மூன்றும் ஒரே குடும்பம் என்றாலும் gooseசை விட Duck சிறியதாக இருக்கும். நிறம் என்று பார்க்கும்பொழுது Duck நிறைய நிறங்களில் உண்டு மற்றும் எடுப்பாக தெரியும். Goose நிறம், எடுப்பாக காணப்படாது. Goose ல்– சிறய முதல் பெரிய உடல் அமைப்பு கொண்ட வகைகள் உண்டு.

2. உணவு பழக்கவழக்கத்தில் வேறுபாடு உண்டு goose நீரில் இருக்கும் பாசி போன்ற சைவ உணவையே உண்ணும்சில சமயம் பூச்சிகளை உண்ணும். ஆனால் Duck சிறு பூச்சிகள், மீன்கள் ஆகியவற்றை சாப்பிடக்கூடியவை. 

3. Gooseக்கு Duckகைவிட நீண்ட கழுத்து. பெரும்பாலும் Goose வலசை செல்ல கூடிய பறவை மற்றும் “V” வடிவில் பறந்து செல்வதை பார்க்கமுடியும்.  பெரும்பாலான Duck வலசை செல்லாது. Duck அலகு பெரியதாக காணப்படும். 

4. Swan: அன்னம் நிறைய தடவை இந்த பெயரை கேள்வி பட்டிருப்போம் மற்றும் நம் புலவர்கள் இவற்றை பற்றி நிறை எழுதியுள்ளார்கள். ஆனால் இந்தியாவில் இந்த பறவை இல்லை. அன்னம் பறவை முழு வெண்மை நிறத்தில் இருக்கும். ஆஸ்திரேலியாவில் கருப்பு அன்னப்பறவை உண்டு.

மிக குறைந்த வகைகளே அன்னத்தில் உண்டு. இதன் கழுத்து மற்ற இரண்டு, Goose, Duck விட மிக நீண்டு இருக்கும். கழுத்து “S” வடிவில் இருப்பதை பார்க்க முடியும். மிக அழகான பறவைதான் அன்னப்பறவை.

இனிமேல் நீங்கள் வாத்து வகைகளை பார்க்கச்செல்லும்பொழுது Duck, Goose போன்றவற்றை சுலபமாக பிரித்து பார்க்கமுடியும் என்று நினைக்கிறன்.  

ஆ. Waders பறவைகள் :

Cattle Egret- Masilamani
Flamingo-Masilamani
நீண்ட கால் மற்றும் விரல்கள் உடைய பறவை  Wader ஆகும்.

பவள கால் உள்ளான்(Black Winged Stilt), ஆட்காட்டி(Lapwing), உப்புகொத்தி(Plover), உள்ளான் வகைகள்(Sandpiper), மஞ்சள் மூக்கு நாரை(Painted Stork), அரிவாள் மூக்கன்(White ibis), கரண்டி வாயன்(Spoon Bill), மடையான்(Pond Heron), கொக்கு(Egret), நத்தை குத்தி நாரை(Open Bill Stork), இரா கொக்கு(Night Heron), பூநாரை(Flamingo) இதுபோல் நிறைய பறவைகளை நீர் நிலை அருகில் பார்க்க முடியும்.

இ. மற்ற பறவைகள் :
மீன்கொத்தி(Kingfisher), பஞ்சுருட்டான்(Bee-eater), தகைவிலான்(Barn Swallow), பனை உழவரான்( Palm Swift) இது போல் நீர் நிலை அருகில் நிறை பறவைகளை பார்க்கமுடியும்.
இந்தியாவில் இருக்கும் 1262பறவைகளில் நீர்புலப் பறவைகள் மொத்தம் 600 பறவைகள் மேல் இருக்கும், அதில் தமிழ்நாட்டில் 150மேல் காணப்படுகிறது. 

நீர்புலப் பறவைகள் இருக்கும் இடத்திற்கு மேலே கழுகு, பருந்துகள் பறந்து கொண்டிருப்பதை பார்க்கமுடியும். இப்பறவைகள் நீர் நிலை பறவைகள் இல்லையென்றாலும், நீர்நிலைகளில் இவற்றுக்கு இரை கிடைப்பதால் இவற்றையும் சேர்த்தே பார்த்துவிடலாம்.

வேட்டையாடி பறவைகள் பெரும்பாலும் சிறு பறவைகள், எலி, ஓணான் போன்றவற்றை கொன்று சாப்பிடும் பழக்கம் உடையது. நீர் நிலை அருகில் நிறைய பறவைகள் இருப்பதால் இவற்றுக்கு சுலபமாக இரை கிடைக்கிறது.

கரும் பருந்து(Black Kite):

நீர் நிலை மேல் பறந்துகொண்டிருப்பதை பார்க்க முடியும். அதிகம் நம் கண்ணில் படக்கூடிய பறவைதான் கரும் பருந்து.

சேற்றுப் பூனைப் பருந்து(Marsh Harrier) :

வெளிநாட்டில் இருந்து வலசை வரும் பருந்து ஆகும் குளிர்காலங்களில் இவற்றை நீர் நிலை அருகில் மற்றும் வரண்ட நிலங்களிலும் பார்க்க முடியும். திருநெல்வேலி அடுத்து இருக்கும் வறண்ட நிலத்தில் அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. அதன் அருகிலேயே மஞ்சள் மூக்கு ஆட்காட்டி பறவை காணப்பட்டது.

வல்லூறு(Shikra):

வேட்டையாடி பறவையான இவை, புறா வளர்ப்பவர்கள் வீடு அருகில் பார்க்க முடியும். இவற்றை நான் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் நீர் நிலை அருகில் பார்த்துள்ளேன். நம் வீட்டு அருகிலும் சுலபமாக பார்க்க கூடிய பறவைதான் ஷிக்ரா.

கருடன்(Brahminy Kite): 

சென்னையில் இப்பறவையை பார்ப்பது அரிது. நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் சுலபமாக பார்க்க முடிகிறது. கருடனை முதன் முதலாக பெங்களூரு பானர்கட்டா உயிரியல் பூங்காவில் இருக்கும் ஒரு மரத்தில் அமர்ந்திருந்ததை  பார்த்தேன்.

விரால் அடிப்பான் (osprey)

இப்பறவையும் நீர் நிலைப் அருகில் பார்க்கமுடியும்.

வாலாட்டி பறவைகள்:

Wagtail - wikipedia
வாலாட்டி பறவைகள் சிலவற்றை நீர் நிலை அருகில் பார்க்க முடியும். வாலை மேலும், கீழுமாக ஆட்டுவதை பார்த்து தமிழில் வாலாட்டி பறவை என்ற பெயர்.

கருப்பு வெள்ளை வாலாட்டி அல்லது வெண்புருவ வாலாட்டி(White Browed Wagtail) பறவையை நீர் ஓரங்களில் இருக்கும். இவற்றை பெரும்பாக்கம் ஏரியில் பார்த்துள்ளேன். மின்கம்பியில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.

இவை தவிர நிறைய வாலாட்டி பறவைகள் உண்டு:


கடல் பறவைகளும் நீர்புலப் பறவைகள்தான் ஆனால் அவற்றை பெரும்பாலும் கடற்கரை 

அருகில் பார்க்கமுடியும். கடல் பறவைகள் பற்றி தனி கட்டுரையாக பார்ப்போம்.



சுருக்கமாக:

1. Goose Duckகைவிட பெரியதாக இருக்கும். 

2. Duck நிறைய நிறங்களில் இருக்கும் மற்றும் பளிச் என்று தெரியும். அலகு பெரியதாக இருக்கும்.

3. Gooseல் பெரும்பாலும் வலசை செல்லும். Duckல் பெரும்பாலும் வலசை செல்லாது.

ராம்சர் ஒப்பந்தம்:

தமிழ்நாட்டில் கோடியக்கரை ராம்சர் அங்கீகாரம் பெற்ற இடமாகும்.


நீர் நிலைகளில் உள்ள பறவைகள்:

1.Duck-Goose போன்ற வகைகளை பார்க்கமுடியும்

2.Waders பறவைகள் இருக்கும்.

3.கழுகு, பருந்து, வாலாட்டிபறவை, மீன்கொத்தி போன்ற பறவைகள் நம் பார்வைக்கு கிடைக்கும்.


-செழியன்

lapwing2010@gmail.com
  

No comments:

Post a Comment