Monday 25 December 2017

10th சென்னை பறவை பந்தயம்



பறவை பந்தயம் என்ற வார்த்தை பறவைகளை பந்தயம் விடுவார்கள் என்ற அளவிலேயே இரண்டு வருடம் முன்பு தெரிந்து இருந்தது. ஆனால் அதற்கு நேர் எதிர் செயல் என்று தெரிந்து பிறகு இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வது என்ற முடிவால் தயாராகிவிட்டேன்.

ஆரம்பத்தில் இதை ஆரம்பித்தபோது நிறைய பேர்கள் எந்த இடத்தில் இருந்து பந்தயம் நடத்துவீர்கள், எந்த மாதிரியான பறவைகள் பந்தயத்தில் இருக்கும், எவ்வளவு துரம் அதன் இலக்காக இருக்கும் என்ற கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததாக மெட்ராஸ் நேட்சுரல் சொசைட்டி (Madrs Natural Socity) Vice President திரு.விஜயகுமாருடன்  பேசும்பொழுது இடையில் தெரிவித்தார்.

சுருக்கமாக சென்னை பறவை பந்தயம் பற்றி ஒரு சில வார்த்தைகள் : பல குழுக்களாக பிரிந்து சென்னை மற்றும் அதை சுற்றி இருக்கும் இடங்களில் பறவைகளை பார்த்து அதன் எண்ணிக்கையை பதிவு செய்து சமர்பிக்கவேண்டும். மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் எந்த குழு சிறந்தது என்று அறிவிப்பார்கள். இந்த நிகழ்ச்சியை மெட்ராஸ் நேட்சுரல் சொசைட்டி மற்றும் HSBC இணைந்து நடத்துகிறது.

நாமதலை கோழி 
காலை சரியாக 6 மணிக்கு சோழிங்கநல்லூர் ஜங்ஷனில் சந்திப்பது என்ற தகவலை என்னுடைய குழுவில் இருப்பவர்களுக்கு தெரியபடுத்திவிட்டேன்.

சொல்லியபடியே காலையில் வந்துவிட்டார்கள். எல்லோரும் அப்பொழுதுதான் முதல்முறையாக பார்த்துகொள்வதால் சிறிது அறிமுகத்திற்கு பிறகு எங்களுடைய இலக்கான முட்டுக்காடு, கேளம்பாக்கம் கடைசியாக பெரும்பாக்கம் சென்று முடிப்பது என்ற திட்டப்படி, வண்டிகள் முட்டுக்காடு நோக்கி சென்றது.

முட்டுக்காடு பாலத்தின் நடுவில் வண்டியை நிறுத்தி விட்டு கடலை நோக்கி பார்வையை செலுத்தியதில் நிறைய கடல் வாழ் பறவைகள் எங்கள் முன்பு பறந்துகொண்டிருந்தது. பெரிய கடல் குருவி (ஆலா)(Caspian Tern),. பெரிய கடல் குருவி எங்களுக்கு மிக அருகிலேயே பறந்து கொண்டு இருந்தது. உருவத்தில் பெரியதாக காணப்படும் இவை இந்தியாவுக்கு குளிர்காலத்தில் வலசை வரும் பறவையாகும். இந்தவகை பறவைகளை நாம் வேறு எங்கும் காணமுடியாது என்பதால் ஆர்வமாக பார்த்தோம்.

அரைமணிநேரம் கடந்து பிறகு அங்கிருந்து கிளம்பிய எங்கள் வண்டி கேளம்பாக்கம் சென்று நின்றது. இரண்டு பக்கமும் நீரால் சூழ்ந்திருப்பதால் எண்ணற்ற நீர்நிலை பறவைகள் ஒரே இடத்தில் பார்க்கலாம் உதாரணமாக கருந்தலை கடற்காகம்(Black Headed Gull), மஞ்சள் மூக்கு நாரை(Painted Stork), கூழைக்கடா(Pelican), மடையான்(Pond Heron), சிறிய நீர்காகம்(Little Cormorant), சிறிய மற்றும் பெரிய கொக்கு(Little and Great Egret), பவளக்கால் உள்ளான்(Black Winged Stilt), மீசை ஆலா(Whiskered Tern), அரிவாள் மூக்கன்(White Ibis) இன்னும் இன்னும் நிறைய என்று எங்கள் கணக்கெடுப்பு நீண்டுகொண்டேன் சென்றதில் மகிழ்ச்சி.

கோண மூக்கு உள்ளான் 
கருந்தலை கடற்காகம் ஆனந்தமாக நீரில் நீந்தி கொண்டிருந்தது, ஒரு மஞ்சள் மூக்கு நாரை தனியாக வெகுநேரம் நின்று எதையோ யோசித்து கொண்டிருந்தது. முக்குளிப்பான் மட்டும் மூழ்கி மூழ்கி சென்றது, எப்பொழுதுமே கூட்டமாக இருக்கும் கூழைக்கடா அங்குள்ள ஒரு பாறையின் மேல் நின்றுகொண்டு மற்றும் நீரில் நீந்தி கொண்டு இருப்பதை பார்க்கமுடிந்தது. இங்கு வாத்து வகைகளை அதிகம் பார்க்க முடியவில்லை. கடல் அருகில் இருப்பதால் கடல் பறவைகளே அதிகம்.

எங்களுடைய குழுவில் புதியவர்களும் இருந்ததால் அவர்களுக்கு பறவைகள் வகைகள், நீர்நிலை, ஊர்ப்புறத்து, வலசை பறவைகள் என்று ஆரம்ப பறவை நோக்குதலை சொன்னதால் புரிந்துகொண்டார்கள். எடுத்த உடனே பறவை கணக்கெடுப்பு என்று அவர்கள் கடுப்பாகி பறவை நோக்குதலில் இருந்து விலகிவிட கூடாது என்று நினைத்து அடிப்படைகளை சொன்னோம். நாளின் முடிவில் அவர்கள் உற்சாகமாகி என்ன மாதிரியான புத்தகம் மற்றும்  தொலைநோக்கி வாங்கவேண்டும் என்று கேட்டதில் அவர்கள் ஆர்வம் தெரிந்தது.

ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்திற்க்கு மேல் கேளம்பாக்கத்தில் இருந்து, பறவைகளை பார்த்து கணக்கெடுத்து முடிக்கும்பொழுது அனைவரும் தேநீர் சாப்பிடவேண்டும் என்று சொன்னதால் அங்கு இருந்து கிளம்பி கேளம்பாக்கம் பிரதான சாலையை அடைந்து அவர் அவர்களுக்கு தேவையானதை சாப்பிட்டு முடித்துவிட்டு, அடுத்து பெரும்பாக்கம் என்று சொன்னபொழுது எங்களுடன், வண்டியும் உற்சாகமாக செல்ல ஆரம்பித்தது.

பெரும்பாக்கம் 
முதலில் எங்களுடைய திட்டத்தில் கேளம்பாக்கம் முடித்துவிட்டு சத்தியபாமா காலேஜ் உள்ளே இருக்கும் பறவைகளை பார்ப்பது அடுத்து பெரும்பாக்கம் செல்லுதல் என்ற திட்டத்தில் சிறிய மாறுதல் ஆகி பெரும்பாக்கம் சென்றுவிட்டோம் காரணம் காலேஜ் பர்மிசன் கடைசிநேரத்தில் வாங்காததால் இந்த நிலை.

மீண்டும் சோழிங்கநல்லூர் ஜங்ஷனுக்கு வந்து இடது புறம் திரும்பினால் இடது புறமே பெரும்பாக்கம் ஏரி நீண்டு காணப்படும். சாலையின் நடுவில் டோல் பூத்து ஒன்று இருக்கும். நீர் உள்ள ஏரி, வாத்து வகைகளுக்கு வரப்பிரசாதும் என்பதால் பெரும்பாக்கம் அப்படியே இருந்தது. நீர்நிலை பறவைகளில் பெரும்பாலும் சிறிய நீர்காகமே நம்மை வரவேற்கும். இங்கும் அதுபோலவே. தண்ணிற் நடுவில் இருக்கும் சிறய மரக்கிளையில் தங்கள் இறக்கைகளை விரித்து அமர்ந்து இருந்து எங்களை வரவேற்றது. எங்கள் குழுவில் இருக்கும் ஒரு புதியவர் சிறிய நீர்காகத்தின் இறக்கை கிளையில் மாட்டிகொண்டிருகிறது என்று தெரிவித்தார். அப்படி இல்லை என்று அவருக்கு தெரிவித்து நீர்காகங்களின் இயல்புகளை சொன்னோம்.

இங்கு நிறைய வாத்து வகைககளை பார்த்ததில் இதுவரை பார்க்காமல் வந்து கொண்டிருந்த எங்களுக்கு உற்சாகமாகவும் அவைகளை குறிப்பு எடுப்பது, அதன் வகைககளை புத்தகத்தின் துணையுடன் அடையாளம் கண்டுபிடிப்பது மற்றும் படம் எடுப்பது என்று சுறுசுறுப்பாக செயல்பட்டு கொண்டிருந்தோம்.

உன்னி கொக்கு 

இங்கு ஊசிவால் வாத்து(Northern PinTail), நீலச் சிறகி(Garganey), தட்டைவாயன் (Northern Shovler)  , Comb Duck, புள்ளி மூக்கு வாத்து(Spot Billed Duck), சீழ்கைச் சிறகி(Lesser Wishtling Duck).  சீழ்கைச் சிறகி(Lesser Wishtling Duck) போன்ற வாத்துகள் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தது. ஊசிவால் வாத்து நிறைய கரையோரமாக அமர்ந்து இளைப்பாரி கொண்டிருந்த்து. கரையின் மறுபுறம் மஞ்சள் மூக்கு நாரைகள் கூட்டமாக மற்றும் அதன் உடன் போட்டி போட்டுகொண்டு பவளக்கால் உள்ளான்(Black winged Stilt) நடு நடுவே இருந்தது. பவள கால் உள்ளான் ஒரே கூட்டமாக பறந்து ஓர் இடத்தில இருந்து மறு இடத்தில அமரும் அழகை பார்த்துகொண்டிருந்தோம். 
   
இரண்டு Comb Duckகை பெரும்பாக்கத்தில் பார்த்தோம். இந்த வாத்து தமிழ்நாட்டிற்கு வலசை வராது. ஆனால் நாங்கள் பெரும்பாகத்தில் பார்த்தது உண்மையில் ஆச்சரியமே அதனால் இந்த வாத்துதான் எங்களின் Birds of Day ஆகும். 

நீங்கள் பெரும்பாக்கம் செல்லும்பொழுது, டோல் பூத் தாண்டி சென்று இடது புறம் திரும்பினால் இந்த ஏரியின் தொடர்ச்சியாக சிறு நீரால் சூழப்பட்டு ஒரு சிறு இடம், வலது புறம் இருக்கிறது. அங்கு இந்த வாத்தை பார்க்க முடியும். அங்கு அதை தவிர நிறைய வாத்துகள் நீந்திகொண்டு இருக்கிறது.

நிறைய பறவைகளை பார்த்து குறிப்பு எடுத்ததில் எங்களின் கணக்கெடுப்பு வளர்ந்துகொண்டே வந்தது. அதிகம் பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் தொடர் உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருந்தோம். எங்கள் குழுவில் புதியவர்களும் கேட்டு தெரிந்து கொண்டு வேகமாக செயல்பட்டு கொண்டிருந்தார்கள்.

காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்த எங்கள் பறவை பயணம், பெரும்பாகத்தில் முடிக்கும் பொழுது மணி11.30. எவ்வளவு பறவைகள் பார்த்திருக்கோம் என்று எங்கள் குறிப்பேட்டில் பார்த்தபொழுது 54 வகையான பறவைகளை பார்த்து, அவற்றின் எண்ணிக்கையில் 600 தாண்டி இருந்ததை பார்த்தபொழுது எல்லோரும் போதுமான அளவில் தங்கள் உழைப்பை செலுத்தியிருகிறார்கள் என்று தெரியவந்தது.

ஊசிவால்  வாத்து 

உதாரனதிற்கு சில பறவைகள் :

கரண்டிவாயன் (Spoon Bill) ,நத்தைகுத்தி நாரை( Open Bill Stork), சாம்பல் நாரை(Grey heron), அரிவால் மூக்கன்(Black headed Ibis), நீலத் தாழைகோழி(Purple Swamphen), உள்ளான் வகைகள் (Sandpiper), பஞ்சுருட்டான்(Bee Eater), வென்புருவ வாலாட்டி(White Browed Wagtail), கரிச்சான்(Black Drongo), சின்னான் (BulBul) , கருப்பு வெள்ளை மற்றும் வெண்கழுத்து மீன்கொத்தி  ( Pied and White throat kingfisher).

இந்த இடத்தில கருப்பு வெள்ளை மீன்கொத்தி பறவையை பற்றி ஒரு செய்தி – செங்குத்தாக நீரின் மேல் தன் இறக்கையை வேகமாக அடித்துகொண்டு ஒரே இடத்தில நின்று கீழே தண்ணிரில் மீன்கள் இருக்கிறதா என்று பார்க்கும். அப்படி தெரிந்தால் நீச்சல் வீரர்கள் போல் ஒரே நேரடி டைவ், அப்படியே மீனை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடும். ஒரு முறை நேரில் பார்த்துவிட்டால் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவீர்கள். 

அனைவரும் மாலையில் சந்திப்போம் என்ற பேச்சுடன் கலைந்து சென்றோம். மாலை நிகழ்ச்சி அண்ணா பல்கலைகழகத்தில் இருக்கும் TAG அரங்கில் நடந்தது. பள்ளி பிள்ளைகளும் தங்கள் சீருடையுடன் இதில் கலந்துகொண்டிருப்பது ஆச்சரியமே. அவர்களை ஊக்கபடுத்தவேண்டும் என்று மெட்ராஸ் நேட்சுரல் சொசைட்டி அமைப்பு, அவர்களுக்கு பறவை புத்தகங்களை கொடுத்து உற்சாகபடுத்தியது.

நிகழ்ச்சியில் தொழிற்சாலைகளுக்காக மரங்கள் அழிப்பதால் ஏற்ப்படும் அழிவுகள் பற்றி நடந்த நாடகம் மிக அருமையாக இருந்தது. மற்றும் நாங்கள் பார்த்த Comb Duck பற்றி திரு சாந்தாராம் அவர்கள் ஒலிபெருக்கியில் அறிவித்தது எங்கள் குழுவுக்கு உற்சாகம் தந்தது. இரவு உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஒரு பறவை நோகுதலில் சந்திப்போம் என்று வார்த்தையை தந்துவிட்டு நிகழ்சியில் இருந்து கிளம்பியாச்சு.

இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்தி முடித்த மெட்ராஸ் நேட்சுரல் சொசைட்டி சேர்ந்த திரு.K.V சுதாகர், திருவிஜயகுமார், திரு.சாந்தாராம் அவர்களுக்கு மிக்க நன்றி. 

Lakshmi, Sharan, Arun, Yogananthan, Mani, Vijayakumar,  Masilamani -taken by chezheyan

-செழியன்

No comments:

Post a Comment