Thursday 1 March 2018

சென்னை நகரத்தில் ஒரு காடு

 


பேருந்து, விமானம், இரயில் இவற்றின் சத்தத்திற்கு நடுவில் ஒரு காடு தன் இயல்பு நிலையில் அதுவும் அமைதியுடன் இருப்பது ஆச்சரியமே. கிண்டி சிறுவர் பூங்கா அனைவரும் அறிந்ததே. ஆனால் அவற்றை ஒட்டி தொடங்கும் காடு பற்றி பெரும்பாலானோர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. மான், நரி, இரலை, அலங்கு, எண்ணற்ற உள்ளநாட்டு-வெளிநாட்டு பறவைகள் என்று அனைத்தையும் அதன் வாழ்விடத்தில் பார்ப்பதற்கு ஏற்ற இடன் இந்த சிறு காடு.

குளிர் காலம் தொடங்கியபொழுது வலசைபறவைகள் வரும் நேரம் என்று கிண்டி காட்டிற்குள்  சென்று பார்த்து வரலாம் என்று முறையாக அனுமதி பெற்று எட்டு பேர் கொண்ட குழுவாக ஒரு காலைபொழுதில் காட்டிற்குள்ளே சென்றோம். மழையும் எங்கள் கூடவே  வந்ததால் மழைகாட்டில் வலம் வருவதுபோல் இருந்தது. நம்முடன் ஒரு வழிகாட்டி வருவார் அவர் முன்னே செல்ல நாம் அவர் பின்னால் சென்றால் போதும். அனைத்தையும் காட்டிவிடுவார்.

Barbet
கிண்டி காட்டில் என்ன உள்ளது – மிக பெரிய குளம், பரந்த புல்வெளிகள், உயர்ந்த-அடர்தியான மரங்கள், ஆங்கங்கே மான்கள் செல்லும் வழிதடம், நரி செல்லும் வழிதடம் என்று வழிகாட்டி பலகைகள் காணப்படுகிறது. அப்பொழுது நமக்கு மான், நரி இங்கு செல்கிறதா என்று உன்னிப்பாக பார்க்கவைக்கிறது. உயரத்தில் சென்று பார்பதற்க்கு ஏற்றாற்போல் உயர கோபுரம் என்று முழுமையான, மனநிறைவுடன் நடந்து சுற்றி வருவதற்கு ஏற்ற இடம்.

ஒரு இரலை துரத்தில் மேய்ந்து கொண்டிருப்பதை வழிகாட்டி காண்பித்தார். பைனாகுலர் வழியாக உற்று நோக்கினால் அவையும் எங்களை பார்துகொண்டிருப்பது தெரிந்தது. எவ்வளவு  எச்சரிக்கையாக உள்ளது என்று நினைத்துகொண்டோம். இரலை என்பது மான் வகை அல்ல ஆனால் மான் போலவே இருக்கும். இதன் கொம்புகள் விழுந்து, மீண்டும் வளராது. மிக அழகான விலங்கு தான் இரலை.

தொடர்ந்து பறவைகள் குரல் கொடுத்து கொண்டே இருப்பதால் அதன்  குரல்களை கேட்டுகொண்டே செல்லலாம். ஒரு வால்காக்கைக் குரல்தான் முதலில் எங்களை வரவேற்றது. ஒரு பெண் குயில் எங்களுக்கு மிக அருகில் இருந்த மரத்தில் இருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஆண் குயிலை பார்ப்பது போல் பெண் குயிலை பார்ப்பது சிறிது கடினமே. வேண்டும் அளவுக்கு பார்த்து நகர்ந்தோம். பச்சைக்கிளிகள் தன் குடும்பத்துடன் அங்கும் இங்கும் பறந்து ஒரு கொண்டாட்டமாகவே வாழ்கையை நடத்துவது தெரிந்தது.


காட்டில் செல்லும்பொழுது கவனமாக ஒவ்வொரு அடியையும் வைக்கவேண்டும். இல்லையென்றால் நிறைய சிறு உயிரினங்கள் நம் காலடியில் மிதிபட்டு இறக்கவாய்ப்புண்டு. அப்படி ஒரு இடத்தில் கால் வைக்க முற்பட்டபொழுது, மிக நீண்ட மண்புழு மெதுவாக நகர்ந்து சென்றுகொண்டிருந்ததை பார்த்து காலை பின்னால் வைத்தோம். குணிந்து அவற்றின் நடவடிக்கையை பார்த்து கொண்டிருந்தோம். எந்த வித பர பரப்பும் இல்லாமல் நம்மை சுற்றி இருபவர்களை பற்றி கவலையில்லாமல் ஊர்ந்துகொண்டிருந்தது. இன்னொரு இடத்தில் நத்தை அதே போல் எங்கள் வழித்தடத்தில் இருந்தது. உண்மையை சொல்லவேண்டும் என்றால்  நாங்கள்தான் அதன் வழித்தடத்தில் இருந்தோம். கையில் எடுத்து பார்த்து, பிறகு கீழே அதன் போக்கிலே விட்டுவிட்டோம்.

கிண்டி காட்டில், நிறை பறவைகளை பார்க்கலாம். நீங்கள் பறவை ஆர்வலர் என்றால் உங்களுக்கு கிண்டி காடு சொர்கம் என்றே சொல்லவேண்டும். நூறு பறவை இனங்கள் மேல் பார்க்கமுடியும். குக்குருவான் பறவை, பார்க்க மிக அழகான நிறத்தில் இருக்கும். பச்சை நிற உடல், கருப்பு அலகு, சிகப்பு, மஞ்சள் நிறம் என்று ஒரு கலவையான நிறத்தில் இவற்றை பார்க்கலாம். அதே போல் அரசவால்ஈபிடிப்பான் பறவையை பார்க்கும்பொழுது இந்த கேள்விகள் உங்களுக்கு கண்டிப்பாக தோன்றும், எப்படி இந்த நீண்ட வாலை வைத்துகொண்டு எப்படி பறக்கிறது மற்றும் மரத்தில் அமர்கிறது என்று ஆச்சரியபடுவிர்கள். நிறைய இரை கொல்லி பறவைகளை பார்பதற்கு ஏற்ற இடம் கிண்டி காடு. இரை கொல்லி பறவைகள் அனைத்தும் பார்பதற்கு ஒன்று போலவே தெரிந்தாலும் நிறை வேறுபாடுகள் அவற்றுள் உண்டு.

மழை கொஞ்சம் அதிகம் வந்தபொழுது ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டோம். அருகில் இருந்த ஒரு மரத்தில் வல்லூறு ஒன்று மழையில் ஆனந்தமாக அமர்ந்து இருந்தது. மழையை பார்த்து ஒதுங்கவில்லை, முழு மழையிலும் நனைந்த பிறகே தன் சிறகை பட படவென அடித்து நீரை வெளியேற்றியது. உடம்பை சுழற்றி ஒரு திருப்பு திருப்பி சுறு சுறுப்பு அடைந்ததை அருகில் இருந்து பார்த்ததில் எங்களுக்கும் சுறுசுறுப்பு வந்துவிட்டது.

காட்டில் விலங்கு, பறவை மட்டும் இல்லாமல் மரங்கள் நமக்கு நிறை பாடங்கள் சொல்லித்தரும். சீதாபழம் மரங்கள் அதிகம் உள்ளே உண்டு. உயர்ந்த மரங்கள், குட்டையான மரங்கள், சிறு செடிகள் என்று பள்ளியில் தாவரவியல் பாடம் படித்த நினைவு வருகிறது. நிறை மனிதர்கள், நிறை கணவகளுடன் இங்கு வருகிறார்கள். சிலர் பறவைகளை பார்க்க. சிலர் வன்னத்துபூச்சிகளை பார்க்க, சிலர் மரங்களை பார்வையிட, சிலர் விலங்குகளை பார்க்க, இன்னும் சிலர் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்க என்று வருகிறார்கள்.


ஈ அளவு உள்ள ஒரு தவளை, தாவி தாவி செல்வதை பார்த்தபொழுது, பெரியதாகவே பார்த்த பழகிய நம் கண்கள், இவற்றை மிக உன்னிப்பாக பார்க்கவைக்கிறது. சிறு உயிரிணங்கள் இந்த உலகுக்கு எவ்வளவு முக்கியம். இந்த பூவுலகை இவை எந்த அளவுக்கு உயிர்ப்புடன் வைக்கிறது என்று தெரியவருகிறது. உதாரணம்- பூச்சிகள், வண்டுகள், வண்ணத்துபூச்சிகள், ஊர்வன என்று ஒரு தனி உலகமாகவே கிண்டி காடு உள்ளது.

காடு எனபதால் உள்ளே எதுவும் சாப்பிட கிடைக்காது. அதனால் தண்ணிர், பிஸ்கட் எடுத்து சென்று விட்டால் நன்றாக இருக்கும். நம்மை பயமுறுத்தும் விலங்கு எதுவும் இல்லாததால் ஜாலியாக சுற்றிவரலாம். வாய்ப்பு இருந்தால் மான், அலங்கு, இரலை, நரி என்று அனைத்தும் பார்க்க முடியும். கடந்த முறை சென்றபொழுது நரி ஒன்று எங்கள் வழித்தடத்தில் படுத்துகொண்டிருந்தது. நாங்கள் மெதுவாக ஒதுங்கி அவற்றை பார்த்து படங்களை எடுத்துகொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் நரி எங்களை பார்த்துவிட்டதால் ஓடி மறைந்தவிட்டது.

சென்னையில் இப்படி ஒரு காடா? அதுவோம் முக்கிய இடத்தில் என்று குழுவில் புதிதாக வந்தவர்கள் ஆச்சரியபட்டார்கள். இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு கூட இப்படி ஒரு காடு இருப்பது தெரியாமல் உள்ளது. கிண்டி பூங்கா செல்ல என்ன டிக்கட்டோ அதே தொகைதான் இந்த காட்டை சுற்றி பார்க்கவும்.

மனழுத்தும் நிறைந்த இந்த வாழ்கையில், வார இறுதியில் எங்கையாவது போவதற்கு பதில் கிண்டி காட்டிற்கு சென்று வாருங்கள். புதிய மனிதா பூமிக்கு வா என்பது போல் புதிய மனிதர்களாக திரும்பி வருவீர்கள். பெரியவர்கள் மட்டும் இல்லாமல் சிறுவர்களையும் அழைத்து செல்லுங்கள். செல்போன், தொலைகாட்சி தொல்லையில் இருந்து சிறுவர்களுக்கு நல்ல மாற்றமாக இருக்கும்.


-    செழியன். ஜா
          
lapwing2010@gmail.com 

அரசவால் ஈபிடிப்பான் 

No comments:

Post a Comment