Thursday 26 April 2018

புத்தகம் – தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்


பறவைகள் தொடர்பாக புத்தகங்கள் சிறிது சிறிதாக அதிகரித்து வரத்தொடங்கி உள்ளது. அப்படி வந்துள்ள ஒரு புது புத்தகம் “தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்”- ஆசிரியர் ஏ.சண்முகானந்தம், முனைவர் சா.செயக்குமார். தமிழகதில் உள்ள அணைத்து பறவை காப்பிடங்கள்(சரணாலயம்)  பற்றி மிக விரிவாக தெரிந்துகொள்ள வந்திருக்கும் முதல் புத்தகம் என்று சொல்லலாம்.

பறவை காப்பிடங்கள் உள்ளே நுழைவதற்கு முன், தமிழ் நூலில் பறவைகள் பற்றிய குறிப்புகள், பண்டைய வரலாற்றில் பறவைகள், பறவை ஆய்வு, நீர்நிலை, தாவரங்கள் என்று நீண்ட கட்டுரைகள் நமக்கு பல சுவாரசியமான தகவல்களை தருகிறது.

ஒரு இடத்தில் பறவைகளை “புள்ளினங்கள்” என்று ஏன் அழைக்கிறோம் என்பதை  ஆதாரத்துடன் அதுவும் “புள்” என்ற சொல் பறவைகளையே குறிக்கிறது என்று விவரித்து இருப்பது மிக நன்று. இதை படிக்கும் வரை நானும் இதன் முழுகாரணம் தெரியாமல் இருந்தேன்.

“தமிழர் பாடலில் வலசை பறவையும் இன்றைய அறிவியல் பார்வையில் வலசையும்” என்ற கட்டுரையில் இன்னும் முழுமையாக பறவைகளின் வலசை பற்றிய தகவல்களுக்கு, பதில் கிடைக்கவில்லை என்றாலும் அந்த காலத்தில் வலசை பறவைகள் பற்றி, தமிழ் பாடலில் குறிப்பிட்டு உள்ளதை, பல பாடலுடன் தெரிந்துகொள்ள முடிகிறது.

தமிழகத்தில் இருக்கும் பறவை காப்பிடங்கள் பற்றி கொடுத்திருக்கும் தகவல்களுடன் காணப்படும் அழகிய படங்கள், புத்தகத்தின் மாஸ்டர் பீஸ் என்று கூட சொல்லலாம். புத்தகமும் உயர்ந்த தரத்தில் உருவாக்கியுள்ளனார். முதல் 89 பக்கம் வரை எண்ணற்ற தகவல்கள் கலவையாக தந்துள்ளனர். அவை நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள உபயோகப்படும்.

இப்பொழுது நாம் பறவைகள் சரணாலயங்கள் உள்ளே, இல்லை இல்லை பறவை காப்பிடங்களுக்குள் நுழையப்போகிறோம். ஏன் சரணாலயம் என்று சொல்லாமல், காப்பிடங்கள் என்று சொன்னேன் என்பதற்கு புத்தகத்தின் 79ம் பக்கத்தில் பதில் உள்ளது.

புத்தகத்தில் ஓவ்வொரு பறவை காப்பிடங்களும் கீழே இருப்பது போல்  விவரித்து உள்ளனர் :

பறவை காப்பிடங்கள் பெயர்காரணம்,

பரப்பளவு,

அங்கு காணப்படும் மற்றும் வரக்கூடிய பறவைகள்,

அங்கு இருக்கும் சிக்கல்கள்,

காப்பிடத்தை பார்க்க ஏற்ற மாதங்கள் என்று ஒரு நீண்ட பட்டியலுடன் ஒவ்வொரு பறவை காப்பிடங்களும் தொடங்கி, முடிகிறது.

இதுவரை நீங்கள் பார்த்துள்ள பறவை காப்பிடங்கள் பற்றி இன்னும் அதிக தகவல்களை தெரிந்துகொள்ள இந்த புத்தகம் உதவும்.

வாருங்கள் வெள்ளோடு பறவைகள் காப்பிடங்கள் உள்ளே ஒரு ரவுண்டு சுற்றி வருவோம். கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, நத்தைகுத்தி நாரை, கூழைக்கடா போன்ற பறவைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களுக்கு தெரிகிறதா? அங்கே பாருங்கள் வெள்ளை அரிவாள் மூக்கன் ஒன்று பறந்து அதன் கூட்டிற்கு செல்கிறது. ஒரே ஒரு குருட்டு கொக்கு, அமைதியாக நின்று கொண்டிருப்பதை பார்க்கும்பொழுது வயல்வெளி ஓரங்களில் பார்த்தது நினைவுக்கு வருமே? போதும் மீதியை புத்தகத்தில் படித்துவிடுங்கள்.

புத்தகத்தில் ஆங்காங்கே இருக்கும் பெட்டி செய்திகளில் பறவை, விலங்கு பற்றிய தகவல்கள் கொடுத்திருப்பது, நூனுக்கமாக அவற்றை அணு உதவுகிறது. உதாரணமாக இரலை(Blackbuck) பற்றி பார்த்துவிடுவோம். இரலை என்பது மான் போன்று கானபட்டாலும் மான் வகை இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை கொம்பு விழுந்து மீண்டும் வளர்வதில்லை. இந்தியாவுக்கே உரிய சிறப்பினங்களில்(Endemic) வெளிமானும் ஒன்று இதுபோல்  இன்னும் சுவாரசியமான தகவல்கள் இரண்டுபக்கத்துக்கு உள்ளது.

பால்பாண்டி இல்லாத கூந்தன்குளமா என்பதுபோல் திருப்புடை மருதூர் பறவைகள் புகலிடத்திற்கு “நாராம்பூ” என்ற பறவை மனிதர். பறவைகளை பாதுகாப்பதில் முழு அர்பணிப்புடன் செய்துவருகிறார். காப்பிடங்கள் பற்றி மட்டும் இல்லாமல் பறவைகள் புகலிடம் பற்றி மிக நீண்ட கட்டுரை உள்ளது.

புத்தகத்தின் கடைசியில் பல முக்கிய தகவல்கள் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பறவைகள் கூடும் முக்கிய இடங்கள்,

வருடத்தின் முக்கிய சுற்றுச்சூழல் நாட்கள்,

பறவை தமிழ் பெயர்கள்,

தமிழகம் தவிர மற்ற மாநில பறவை காப்பிடங்கள்,

பறவை காப்பிடங்கள் செல்லும்பொழுது கடைபிடிக்க வேண்டியவைகள்,

முக்கிய் இணையதளங்கள் என்று முழு தகவல் களஞ்சியமாக புத்தகம் இருப்பதால், பல ஆண்டுகள்  இதற்காக உழைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம். அதனால் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தக லிஸ்டில் இவற்றையும் சேர்த்துவிடுங்கள்.


-செழியன்.ஜா 

No comments:

Post a Comment