"சூழலியலையும், சூழலியல் தரும் வாழ்வியலையும் அனுபவித்து உணர்ந்தவர்களே மகிழ்ச்சியான மனிதர்கள்!"
புழு பூச்சிகளை கண்டதுமே ஒரு வித அருவருப்பும் பயமும் ஏதோ காணக்கூடாத ஒன்றை கண்டது போன்ற உணர்வும் நம்மில் பலருக்கு தோன்றும். இன்னும் சிலரோ அதனை அடித்துக் கொள்ளாமல் விடமாட்டார்கள். ஆனால் சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் அவர்களுடைய இந்த "எனைத் தேடி வந்த சிற்றுயிர்" என்ற நூலை ஒருமுறை வாசித்து விட்டீர்கள் எனில் எந்த பூச்சிகளையும் கண்டு அருவருப்பும் பயமும் தோன்றாது. அடித்துக் கொள்ளவும் மாட்டோம். மாறாக பூச்சிகளின் அருகில் அமர்ந்து அதனை கூர்ந்துக் கவனிப்போம்! அதன் அழகை ரசிப்போம்! ஏன்? கைப்பேசியை எடுத்துக் கொண்டு வித விதமாக புகைப்படம் எடுக்க தொடங்கி விடுவோம்.
நம் வீடுகளில் தற்செயலாகவோ இல்லை தினமுமோ வந்து கொண்டிருக்கக் கூடிய பூச்சிகளை ஒரு உயிராகக் கூட நாம் நினைத்திருக்க மாட்டோம். ஆனால், இந்நூலின் ஆசிரியர் அவருடைய வீட்டில் மற்றும் பொது இடங்களில் கண்ட பூச்சிகளை அழகாக புகைப்படம் எடுத்து அதனைப் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொண்டு அழகிய நூலாக உருவாக்கியுள்ளார். இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் அழகானவற்றை கவனிக்காமல் விடுவதால் தான், தேவையில்லா சுமைகளை நம் தலையில் சுமந்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த இயற்கையை, இயற்கை கொடுத்த உயிர்களை ரசிக்கத் தொடங்கி விட்டோமெனில் இப்பூவுலகில் மகிழ்வாக வாழலாம்.