Tuesday 28 February 2017

பறவை நோக்குதல்- 9 - Raptors



கருடன்-விக்கிபீடியா
இரைகொல்லிகள்(Raptors) என்றால் ? 

பறவை நோக்குதலில் இரைகொல்லிகள்(Birds of Prey) என்று அழைக்கப்படும் கழுகு, பருந்து, வல்லூறு, ராஜாளி, வைரி, பாறு கழுகுகள், ஆந்தை போன்ற பறவை வகைகளுக்கு என்று தனி பிரிவே உள்ளது. இவை அனைத்தையும் ராப்டர்ஸ் (இரைகொல்லிகள்) என்று பொது பெயரில் ஆங்கிலத்தில் அழைப்பதுண்டு. இவ்வகை பறவைகள் உணவுக்காக மற்ற விலங்குகளை கொன்று சாப்பிடும் பழக்கமுடையது (உதாரணம்: எலி, தவளை, பாம்பு, ஓணான், மீன், சிறு பறவை, பறவை குட்டிகள் போன்றவற்றை சாப்பிடும்). பறவை நோக்குதலில் இவ்வகை பறவைகளை தனித்து கவனிக்கப்படுகிறது. இரைகொல்லிகள் பறவைகளுக்கு என்றே நிறைய ஆங்கில புத்தகங்கள் தனியாக வெளிவந்துள்ளது.

இரைகொல்லிகள் பறவைகளை பார்ப்பதற்கென்றே நிறைய பறவை சங்கங்கள், தனி மனிதர்கள் உண்டு. இவ்வகை பறவைகளை தொடர்ச்சியாக பார்த்து அராய்ச்சி செய்வதற்கு உலகம் முழுவதும் நிறை அமைப்புகள் செயல்படுகிறது. பறவை நோக்குதலில் நாம் இவ்வகை பறவைகள் கண்டிப்பாக எதிர் கொள்வோம். காரணம், நாம் செல்லும் இடங்களில் பருந்து, வல்லூறு, வைரி போன்ற இரைகொல்லிகள் பறவைகளை காணமுடியம். அதனால் இவ்வகை பறவைகளை தெரிந்து கொண்டால்தான் நம்மால் சுலபமாக இனம் காண முடியும்.


இரைகொல்லிகள் பறவைகளை நாம் சிங்கம்,புலி (நான்கு கூர்மையான பற்கள், இரையை கச்சிதமாக பிடித்து இழுக்க நகங்கள்) போன்றவற்றுடன் ஒப்பிடலாம் காரணம் மற்ற விலங்குகள் போல கொன்று சாப்பிடும் பழக்கமுடைய உயிரினங்கள் இவைகளும் ஆகும். காகம் கூட மாமிசத்தை உண்ணும் ஆனால் அவை இரைகொல்லிகள் வகைகளில் வராது காரணம் இரைகொல்லிகள் என்பதற்கு சில அடையாளங்கள் உள்ளது அவற்றையும் பார்த்துவிடுவோம்.

இரைகொல்லிகள்(Raptors) அடையாளங்கள் :

1. முனை வளைந்து மிக மிக கூர்மையான அலகு (நம் பல் இருக்கும் உறுதி போல் அதன் அலகு உறுதியானது) 

2. அதேபோல் பலம் வாய்ந்த கால் நகங்கள்- வளைந்து மிக கூர்மையாக இருக்கும் இரையை பிடித்து தூக்கிச் செல்ல. 

3. கண் பார்வை – (பேச்சு வழக்கில் நாம் இவருக்கு கழுகு பார்வை என்று சொல்வோம்)  உண்மையில் மனிதனைவிட எட்டு மடங்கு மிக கூர்மையான பார்வைத்திறன்.

இரைகொல்லிகள் பறவைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம்:

A. Hawk

     1. Kite - கருடன்
            2. Osprey - விரால் அடிப்பான்
            3. Eagle- பருந்து, கரும் பருந்து, பாம்பு பருந்து, குடுமி பருந்து etc...
            4. Falcon- வல்லூறு, ராஜாளி
            5. Buzzards – வைரி
            6. Harriers- பூனைப் பருந்து, சேற்று பூனைப் பருந்து.

B. VULTURE - பாறு கழுகு

C. OWL - ஆந்தை

உலகில் உள்ள அணைத்து இறைகொல்லிகள் பறவைகளும் மேலே உள்ள மூன்று பிரிவுக்குள் வந்துவிடும்.அதென்னே முதல் பிரிவில் நிறைய உட்பிரிவு உள்ளது போல் இருக்கிறதே என்று கேட்பீர்கள்? அதனால் அவற்றையும் அதன் தொடர்ச்சியாக மற்றதையும் பார்த்துவிடுவோம்.

ஊர் பருந்து -விக்கிபீடியா
HAWK-  என்பது பொது பெயராக வைத்து இவற்றின் கீழ் கழுகு, பருந்து, கருடன், வல்லூறு, வைரி, ராஜாளி, விரால் அடிப்பான் போன்ற அனைத்து பறவைகளும் வருகிறது. இதில் சிறிய உருவம் முதல் பெரிய உடல் அமைப்பு கொண்ட பறவைகள் வரை பார்க்கமுடியும்.
கழுகு, பருந்து, ராஜாளி, விரால்அடிப்பான் போன்ற ராப்டர்ஸ் பறவைகளுக்கு ஒன்றுக்கு ஒன்று  வித்தியாசங்கள் உண்டு

உதாரணம்:
கருடன் (அ) பருந்து(Kite)- பரந்த இறக்கை அமைப்பு அதன் முனையில் நான்கு விரல்கள் போல் நீண்டு  காணப்படும். அதன் வால் பகுதி இரண்டாக பிளவு பட்டிருக்கும்.

கழுகு(Eagle)- இதற்கும் மிக பரந்த இறக்கை அமைப்பு. அதன் முனை, விரல்கள் போல் நீண்டு காணப்படும்.

வல்லூறு(Falcon)- சிறிய பறவை, புறா அளவில் காணப்படும். இதன் இறக்கை பூமரங்கு கருவி போல் இருக்கும் அதன் முனை கூர்மையாக காணப்படும்.

இப்படி ஒவ்வொரூ பறவை வகைகளுக்கும் அதன் இறைகேர்ப்ப அதன் உடல், இறக்கை, வால் அமைப்பு அமைந்திருக்கும். பறவை நோக்குதல் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் தொடர்ச்சியான செயல்பாட்டில் இவற்றை கண்டுபிடிப்பீர்கள்.

செந்தலை கழுகு- விக்கிபீடியா
VULTURE-  பாறு கழுகுகளை பிணம்தின்னி கழுகுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் ஒன்பது வகையான பாறு கழுகுகள் உள்ளன அதில் நான்கு தமிழ்நாட்டில் உள்ளது. தமிழக முழுவதும் காணப்பட்ட பாறு கழுகுகள் இன்று நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்றே இடத்தில் மட்டுமே  சிறிய எண்ணிக்கையில் பார்க்க முடியும்.

பாறு கழுகுகள் மிக பெரிய அழிவு நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் கால்நடை விலங்குகளுக்கு தரப்படும் வலிநிவாரண மருந்தான டைக்லோபினாக்(Diclofenac)மருந்து. அந்த மருந்தை உண்ட மாடு மற்றும் விலங்குகள் இறந்தபிறகு அவற்றை பாறு கழுகுகள் சாப்பிடுவதால் அவற்றின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு இறந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த மருந்தை பயன்படுத்தாதீர்கள் என்று கோவை அருளகம் அமைப்பை சேர்ந்த சு.பாரதிதாசன் அவர்கள் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார். அவரின் வலைத்தளம் – www.arulagam.org  

இறந்த விலங்குகளை மட்டும் சாப்பிடுவதால், காட்டில் இறந்த நிலையில் இருக்கும் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் உண்டு காட்டை சுத்தமாக வைத்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் கால் நகம் பருந்து, கருடன் போல் இருக்காததற்கு காரணம் இரையை பிடித்து கொன்று சாப்பிடுவதில்லை இறந்த விலங்குகளை மட்டுமே சாப்பிடும் பழக்கம் உடையவை அதனால் கால் அமைப்பு இயற்கையாகவே அப்படி அமைந்துள்ளன.

புள்ளி ஆந்தை -விக்கிபிடியா
OWL - ஆந்தை அபசகுனமான பறவை என்று அனைவரும் சொல்வதை கேட்டே பழகிவிட்டோம் ஆனால் அவை உண்மையில்லை என்றாலும் இன்றும் பேய் படங்களில் பாழடைந்த மண்டபத்தில் இவற்றை காண்பிப்பார்கள். இரவு நேர ஹீரோவான நம்ம ஆந்தையார், தன் கழுத்தை 360 டிகிரி திருப்பும் என்று சொல்லுவார்கள் ஆனால் உண்மையில் அதில் முக்கால் பாகம் மேல் மட்டுமே தன் கழுத்தை முழுவதும் சுழற்றி பார்க்கும் திறன் உடையது.

தமிழகத்தில் பத்துக்கும் மேற்ப்பட்ட ஆந்தை வகைகளை பார்க்க முடியும். நான் சுலபமாக சொல்லிவிட்டேன் பார்க்க முடியும் என்று உண்மையில் ஒரே சில ஆந்தைகளை பார்ப்பது மிக கடினம். புள்ளி ஆந்தை(Spotted owl) வேண்டுமென்றாலும் சிறிது முயற்சியில் பார்க்கலாம்.

முக்கியமான ஆந்தை வகைகள்:

கூகை(Barn Owl), சிறிய ஆந்தை (Scops Owl), கொம்பன் ஆந்தை(Horned Owl). புமான் ஆந்தை (Brown Fish Owl), வேட்டைக்கார ஆந்தை (Brown Hawk Owl), சிறிய புள்ளி ஆந்தை(Spotted Owl), சிறுகாதன் ஆந்தை(Short eared Owl), பழுப்பு காட்டு ஆந்தை (Brown Wood Owl).


இரைகொல்லிகள்(Raptors) பறவைகளுக்கு இரண்டு விதமான செயல்திறன் உண்டு:

பகலில் வேட்டையாடும் பறவை மற்றும் இரவில் வேட்டையாடும் பறவை என்ற செயல்திறன். 

1. ஆந்தை - இரவு நேர பறவையாகும் (Nocturnal – Night flying)

2. Hawk, Vulture போன்றவை பகல் நேர பறவைகள் ஆகும். (Diurnal- Day flying)

உலகில் மொத்தம் இதுவரை 572 Raptors பறவை வகைகளை பதிவு செய்திருக்கிறார்கள். இதில் 333 பறவை வகைகள் பகல் நேர(Day flying)பறவைகள் ஆகும். 

இந்தியாவில் மொத்தம் 106 (Raptors) பறவை வகைகள் உள்ளது. இதில் 72பறவை வகைகள் (பருந்து, கருடன், வல்லூறு, ராஜாளி, விரால் அடிப்பான், பாறு கழுகுகள்) பகல் நேர (Day Flying)பறவையாகும். மீதி 34 வகை பறவைகள் ஆந்தை வகைகள் இரவு நேர(Night Flying) பறவைகள் ஆகும்.

பகல் மற்றும் இரவு நேர பறவைகளைப் பற்றி பார்ப்போம்:

கரும் (அ) ஊர் பருந்து (Black Kite) :
ஊர் பருந்து- விக்கிபீடியா
இந்தியா முழுவதும் காணப்படும் பறவையாகும். நம் வீட்டின் மாடியில் இருந்து வானில் பார்த்தால் பெரும்பாலும் இந்த கரும் பருந்து பறந்து கொண்டிருப்பதை பார்க்கமுடியும். பழுப்பு நிறத்தில் இருக்கும். சென்னை பள்ளிகரணை சதுப்பு நிலத்தில் இவ்வகை பருந்தை நிறைய பார்க்க முடியும். மீன், கோழி, ஆடு, மாடு அறுக்கும் இடங்களிலும் தவறாமல் இடம்பெறும். இறந்த உயிரினங்களை கூட சாப்பிடும். ஆண், பெண் இரண்டும் இணைந்து கூட்டை அமைக்கும். பகல் நேர வேட்டையாடி பறவையாகும்.
புள்ளி ஆந்தை-Photo-OWL Page
புள்ளி ஆந்தை (Spotted Owl) :

மைனா அளவு இருக்கும் புள்ளி ஆந்தை. பெரும்பாலும் ஜோடியாகவே காணப்படும். இவற்றை நான் வேடந்தாங்கலில் பார்த்தபொழுது இரண்டு, மூன்று புள்ளி ஆந்தை ஜோடிகள் ஒரே மர கிளையில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். அதில் ஒரு ஆந்தை கண்ணை திறப்பதும் மூடுவதும் என்று என்னை கண்காணித்து கொண்டே இருந்தது.
புள்ளி புள்ளியாக வெள்ளை நிறத்தில் உடல் முழவதும் இருக்கும். ஆண், பெண் ஒன்று போலவே காணப்படும். சிறு உயிரியான எலி, தவளை, ஓணான் போன்றவற்றை சாப்பிடும். இனபெருக்க காலத்தில் ஒரே இரவில் நிறைய எலிகளை சாப்பிடும். இந்தியா முழுவதும் இவற்றை பார்க்க முடியும். கொஞ்சம் முயற்சி செய்தால் இரவில் உங்கள் வீட்டு தோட்டத்தில் காணலாம்.

பாறு கழுகுகள் (Vulture) :

தமிழகத்தில் நான்கு வகையான பிணம்தின்னி (அ) பாறு கழுகுகள் மிக குறைந்த எண்ணிகையில் காணப்படுகிறது.

A. வெண் முதுகு பாறு கழுகு- White backed Vulture
 
B. மஞ்சள் பாறு கழுகு- Egyptian Vulture

C. நீண்ட அலகு பாறு கழுகு- Long billed Vulture

D. செந்தலை பாறு கழுகு- Red Headed Vulture

இதில் வெண் முதுகு பாறு கழுகை பார்ப்போம்:

வென்முதுகு கழுகு - விக்கிபிடியா
தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் காணப்படும் பறவையாகும். பெரும்பாலும் பாறு கழுகுகளின் தலை, கழுத்து பகுதிகளில் முடிகள் இல்லாமல் காணப்படும். இவற்றுக்கும் அவ்வாறே. முதுகு பகுதி வெண்மை நிறத்தில் இருப்பதால் வெண் முதுகு கழுகு என்ற பெயர். வானில் மிக உயரத்தில் மிதந்து கொண்டே ஏதாவது இறந்த உடல் இருக்கிறதா என்று நோட்டம் விட்டுக்கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

தமிழ் நாட்டில் பரவலாக காணப்பட்ட இந்த கழுகு அழிவின் நிலையில் உள்ளதால் நீலகிரி பகுதியில் மட்டும் இன்று உள்ளது, முடிந்தால் நீலகிரி செல்லும்பொழுது முயற்சி செய்து பார்த்துவிட்டு வரவும்.

வலசை பருந்து மற்றும் ஆந்தைகள் (Migration Raptors) :

கொக்கு, வாத்து, நாரை மட்டும்தான் வலசை வரும் என்றில்லை ராப்டர்ஸ்-ல் சில வகைகள் வெளி நாட்டில் இருந்து வலசையாக இந்தியாவுக்கு வருபவை ஆகும். அதில் சில ராப்டர்ஸ் பறவைகள் இந்தியா வழியாக வேறு நாட்டிற்கு செல்லும். உதாரணம்: அமுர் வல்லூறு (Amur Falcon). மங்கோலியாவில் இருந்து தென்னாப்பிரிக்க வரை செல்கிறது, வழி-இந்தியா நாகலாந்து

.
Amur Falcon பற்றிய தமிழ் கட்டுரை:


amur falcon route- conservation india
ஏறக்குறைய 30 (ராப்டர்ஸ்) பறவை வகைகள் இந்தியாவுக்கு வலசையாக வருகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

கூகை - விக்கிபீடியா
விரால் அடிப்பான்- Ospery

சேற்று புனைப் பருந்து- Eurasian Marsh Harrier

புனைப் பருந்து- Palled Harrier

பூஞ்சைப் பருந்து- Booted Eagle

பருந்து- Montagu’s Harrier  

வைரி- Common Buzzard

சிவப்பு வல்லூறு- Common Kestrel

சிறு காதன் ஆந்தை- Short Eared owl 

(ஆந்தை வகைகளில்தமிழ் நாடு வரை வரக்கூடிய ஆந்தைதான் சிறு காதன் ஆந்தை. இவை தவிர இரண்டு வகையான ஆந்தை இந்தியாவுக்கு வருகிறது ஆனால் அவை எல்லாம் வடமேற்கு இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும்) 

சிறு காதன் ஆந்தை - wikipidea
மேலே இருப்பவை எல்லாம் தமிழ்நாட்டிலேயே பார்க்க முடிகிற பருந்து, ஆந்தை வகைகள் ஆகும். இதைத் தவிர நிறைய வலசை பருந்துகள் வட கிழக்கு, வட மேற்கு, மத்திய இந்தியா என்று வர கூடியதாகும். அவற்றை பற்றி சொல்லலாமா என்று நான் கேட்டால் போதும் போதும் என்று நீங்களே சொல்லிவிடுவீர்கள்.

தமிழ் நாட்டில் பறவை பார்க்க செல்லும் பொழுது இந்த இரைகொல்லிகள் வகைகள் எல்லாம் பார்க்க முயற்சி செய்யுங்கள்:

தமிழ் நாட்டில் மொத்தம் 25  வகைக்கு மேலான ராப்டர்ஸ் பார்க்க முடியும் அதில் சிலவற்றையாவது கண்டிப்பாக பாருங்கள்

கரும் (அ) ஊர் பருந்து- Black Kite
சிறிய கருந்தோல் பருந்து- Black winged kite
வல்லூறு- Shikra
சேற்று புனைப் பருந்து- Eurasian Marsh harrier
கருடன்- Brahminy kite
புள்ளி ஆந்தை- spotted Owl
காட்டு ஆந்தை- Jungle Owl
கூகை- Barn Owl
கொண்டை (பாம்பு) பருந்து- Crested Serpent Eagle
 
இந்திய அரசாங்கம் இறைகொல்லிகள் பறவைகளை காப்பாற்றுவதற்க்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை Conservation of Migratory Birds of Prey in Africa and Eurasia என்ற அமைப்புடன் போட்டுள்ளது இதன் நோக்கம் அழிவில் இருக்கும் கழுகு, பருந்து, பாறு கழுகுகள் போன்றவற்றை காப்பாறுவதே முக்கிய நோக்கமாகும்………………

Link: 

 
                                                                     -தொடரும் 

-செழியன் 

lapwing2010@gmail.com


5 comments:

  1. Your article on Raptors motivating me to work more work on this birds.
    Nicely written
    Thanks Mr.Chezheyan

    ReplyDelete
  2. Excellent article Chezheyan, Sir. Enjoyed reading it.
    Kind regards - chandru

    ReplyDelete
  3. நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!

    BTW, raptor என்ற ஆங்கிலப் சொல்லுக்கு இரைவாரிப் பறவை/ இரைபிடிப் பறவை என்ற தமிழ் வார்த்தைகள் உண்டு :-)

    ReplyDelete
  4. நன்றி மாசிலாமணி,சந்துரு சார் மற்றும் தகவல்களுக்கு நன்றி ராம்ஜி சார்

    ReplyDelete
  5. good and collective information.thanks

    ReplyDelete