Sunday 2 June 2019

Tiger census 2019 - புலிகள்: 2019


நிறையப் புள்ளி விவரங்கள் இந்தியாவில் எடுக்கப்படுகிறது அதில் அதிகம் மக்கள் கவனத்திற்கு வருவது இரண்டு மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புலிகள் கணக்கெடுப்பு ஆகும். மக்கள் தொகை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், புலிகள் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறுகிறது.

2006ஆம் வருடத்தில் இருந்து புலிகள் கணக்கெடுப்பு  நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்று இன்னும் அதன் முடிவுகள் வெளியிடவில்லைஅதற்குச் சொல்லப்படும் காரணங்கள், நிறையத் தகவல்கள் சேகரித்து உள்ளதால் அதனைச் சரிபார்ப்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்றும், புதிதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ள சில மாநிலங்களிடம் இருந்து புள்ளிவிவரம் கிடைப்பதற்குத் தாமதமானது அதனால் புதிய அரசாங்கம் அமைந்த பிறகே(ஜூன்2019) வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சொல்லப்படுகிறது.

இந்த முறை புலிகள்  சரணாலயங்கள் இருக்கும் 18 மாநிலங்களுடன், புதிதாகக்  குஜராத், நாகாலாந்து, மணிப்பூர்  மூன்று மாநிலங்களைச் சேர்த்து புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது மற்றும் ராயல் பெங்கால் புலி ஒரிசா மாநிலத்தில் நடமாடுவதைப் பதிவு செய்து உள்ளனர். இதற்கு முன்பு இங்கு பார்க்கப்பட்டதற்காகான் பதிவுகள் இல்லை.
Photo-Kalyanvarma

இதுவரை நடைபெற்ற கணக்கீட்டின் முறையைவிட 2018 கணக்கீடு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் மிகச் சரியாக எத்தனை புலிகள் இந்தியக் காடுகளில் நடமாடிக் கொண்டிருக்கிறது என்ற தகவல் கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் முதல் முறையாக பங்களாதேஷ், பூட்டான், நேபாள் போன்ற நாடுகளும் தங்கள் இந்திய எல்லைப் பகுதிகளில் நடமாடும் புலிகள் கணக்கெடுப்பில் பங்கெடுத்தது

புலிகள் கணக்கெடுப்பு 2010ம் ஆண்டு நடைபெற்றபொழுது  புலிகள் குறைந்து வருவதின் அறிகுறியை அந்த புள்ளிவிவரம் தெரிவித்தது. புலிகளை ஏன் பாதுகாக்க வேண்டும்? ஏன் அவை குறைந்து வருகிறது? குறைவதால் என்ன தீமை? மற்ற உயிரினத்திற்கு இல்லாத மரியாதை, கவனம் ஏன் புலிகளுக்கு மட்டும் உண்டு? மற்ற உயிரினத்தின் (பறவைகள்,பூச்சிகள், விலங்குகள்) புள்ளி விவரம் ஏன் வெளியே  இந்தளவுக்குத் தெரியவில்லை? என்ற நிறையக் கேள்விக்கு ஒரே பதில் உணவு சங்கிலியில் உச்சத்தில் இருப்பவை புலி, இவை காட்டில் அதிகமாக இருக்கிறது என்றால் மற்ற உயிரினங்கள் சிறப்பாக உள்ளது.

புலிகள் காட்டில் குறைந்து காணப்படுகிறது என்றால் அதற்குத் தேவையான இறை அங்கு இல்லை அல்லது குறைந்து வருகிறது. புலியோட இறைகளான மான், காட்டு எருது, காட்டுப் பன்றி போன்றவற்றுக்குத் தேவையான உணவு காட்டில் குறைந்தால் அல்லது கிடைக்காமல் போனால் அவை பெருகுவதில்லை அதனால் புலிக்குத் தேவையான இறை  கிடைப்பதில் சிக்கலால் அவை குறைந்து வருகிறது.

இதை விடப் புலிகள் குறைந்ததற்கு மிக முக்கிய காரணம்-வேட்டையாடுதல். லட்சத்திற்கு மேல் இருந்த புலிகளின் எண்ணிக்கையை ஆயிரத்திற்கு மாற்றிய பெருமை மனிதனையே சேரும்.

2012 முதல் 2017 வரை மொத்தம் 506 புலிகள் இறந்து உள்ளன. இதில் இயற்கையாக 308 புலிகளும், 123 புலிகள் வேட்டையாடியதன் மூலமாகவும், 39 புலிகள் இரயில் மற்றும் வாகன விபத்தால், 90 புலிகள் கடத்தும்பொழுது  சாகடிக்கப்பட்டுள்ளது.  
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழமையான புலிகள் சரணாலயம் Palamau Tiger Reserveவில் 2016க்கு பிறகு புலிகள் நடமாட்டத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கடந்த 2014 கணக்கெடுப்பில் அங்கு மூன்று புலிகள் மட்டுமே உள்ளது என்ற நிலையில் இப்பொழுது  அந்த மூன்று புலி எங்கே என்ற கேள்வி எழும்பியுள்ளது.

2015 வருடத்தின் தொடக்கத்தில் (20-ஜனவரி-2015) அன்றய இந்தியச் சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவாத்கர் வெளியிட்ட புலிகள் பற்றிய புள்ளிவிவரம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறதுகடந்த நான்கு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஏறக்குறைய 30% அதிகரித்து உள்ளது , எண்ணிக்கை 1706ல் இருந்து 2226ஆக உயர்ந்துள்ளது .

ஒரு சிறிய புள்ளிவிவரத்தை(Statistics) பார்ப்போம்:

இந்தியா முழுவதும் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை

2006               2010               2014               2018

1411               1706             2226                   ?

அதிகமாகப் புலிகள் பெருகி உள்ள மாநிலங்கள் மொத்தம் ஐந்து அதில் தமிழ்நாடும் வருகிறது :

State                          2006               2010               2014               2018

Tamil Nadu                 76                  163                 229                   ?
Karnataka                  290                  300                 406
Madhya Pradesh        300                  257                 308
Utrakahand                178                  227                 340
Maharashtra               103                 169                  190

பரவலாக எல்லா மாநிலத்திலும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து இருந்தாலும் புலிகளின் காடு என்று அழைக்கப்படும் சுந்தர்பன் காட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை சிறிது அளவே உயர்ந்து காணப்படுகிறது அதற்கு முக்கிய காரணம் புலிகளின் உணவுகள் அங்குக் குறைந்து வருவதே ஆகும். தற்போது சுந்தர்பன் காட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 70ல்இருந்து 76ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் ஆறு புலிகள் மட்டும் 2014 கணக்கீட்டின்படி அதிகரித்துள்ளது.. 2018 புதிய புள்ளிவிவரம் வந்தபிறகே தற்போதைய நிலை தெரியவரும்.

புலிகள் உயர்ந்து வந்தாலும் ஒரு சில மாநிலங்களில் குறைந்து வருகிறது. வேட்டையாடியதால் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த முறை 10 புலிகளாக இருந்து தற்சமயம் 3ஆகக் குறைந்துள்ளது.

புலிகள் பெரும் அளவில் குறைந்து வந்ததால் 1972ல் Project Tiger என்ற திட்டத்தை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள 3000 புலிகளில் இந்தியாவில் மட்டும் 2226(2014 புள்ளிவிவரம்) புலிகள் உள்ளது அதாவது  70% இந்தியாவில் மட்டுமே உள்ளது.

இந்தியாவில் மொத்தம் 50 புலிகள் காப்பகம் உள்ளது அதில் 50தவதாக இணைந்த  புலிகள் காப்பகம் ஆந்திராவில் உள்ள Kamlang Tiger Reserve ஆகும். (2018ல் இணைந்தது.)
Photo- Kalyanvarma

 தற்பொழுது வலம் வந்துகொண்டிருக்கும் புலிகளின் வகைகள்:

1.Bengal Tiger
2.Siberian Tiger
3.Malayan Tiger
4.South Chinese Tiger
5.Indo-Chinese Tiger
6.Sumatra Tiger

தமிழகத்தில் உள்ள புலிகள் சரணாலயங்கள் :

திருநெல்வேலி,களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயம் 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து ஆணை மலை புலிகள் காப்பகம்(கோவை)2008ஆம் ஆண்டும், முதுமலை புலிகள் சரணாலயம்(நீலகிரி) 2011ஆம் ஆண்டும் கடைசியாக  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்(ஈரோடு) 2013ஆம் ஆண்டும் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுகிறது. இந்த அளவுக்கு முயற்சி எடுத்ததால் மட்டுமே தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவிலேயே ஐந்து இடத்திற்குள் வர முடிந்தது.

இந்தியாவில் மட்டும்தான் பூனை குடும்பத்தில் இருக்கும் முதல் மூன்று வகைகள் உண்டு. சிங்கம்-புலி-சிறுத்தை ஆகும். சிவிங்கை புலி இந்தியாவில் இருந்தது, அதனை மொத்தமாக அழித்த இன்னொரு பெருமை மனிதர்களைச் சேரும். சிவிங்கை புலி தமிழகத்தில் நடமாடியதை தியடோர் பாஸ்கரன் அவர்கள் பதிவு செய்து உள்ளார்.

புலிகள், சூழ்நிலையைச் சமன்படுத்தும் முக்கிய விலங்கு அவற்றை அதிகப்படுத்துவதின் மூலம், நாம் வாழும் இப்புவியில் தொடர்ந்து நம்மால் வாழ முடியும். அவை அழிவதின் அல்லது அழிப்பதின் மூலம் நாம் நம் வாழ்கையை மட்டும் இல்லாமல் எதிர்கால மனிதர்களின் வாழ்கையையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்றே பொருள்.


செழியன்.ஜா

lapwing2010@gmail.com

1 comment:

  1. அதன்(சிவகங்கை புலி) புகைப்படம் உள்ளதா அண்ணா???

    ReplyDelete