Saturday 14 March 2020

Asian Openbill Stork (Uyir Magazine)


Openbill Stork
அலகு நீண்ட பறவை வகைகளில் நத்தைக்கொத்தி நாரை தனித்துவம்மிக்கது ஆகும்.  சில நேரம் இப்பறவையை பார்க்கும்பொழுது செங்கால் நாரை(white stork) ஒத்து காணப்படும்.  செங்கால் நாரையின் பிளவு இல்லாத அலகின் சிகப்பு நிறம்  வேறுபடுத்தி காட்டுகிறது. நீர் நிலைப் பறவையான நத்தை குத்திநத்தைக்கொத்தி நாரை, பெயருக்கு ஏற்றாற்போல் நத்தையை முதன்மை உணவாக உண்டு வாழ்கிறது.

இந்தியாவில் வாழக்கூடிய பறவையாகும். நத்தைக்கொத்தி நாரை பொதுவாக இடப்பெயர்ச்சி செய்யாது. தேவைப்படும்பொழுது மட்டும் வலசை செல்லும். நன்கு வளர்ந்த நாரையின் அலகு நடுவில் பிளவு இருப்பதை பார்க்கலாம். வளர்ந்து வரும் இளம்பறவைகளுக்கு இந்த பிளவு இருக்காது.  ஆண்-பெண் இரண்டும் ஒன்று போலவே இருக்கும்.  இனப்பெருக்க காலத்தில் நல்ல வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்க்க முடியும்.


எப்பொழுதும் அமைதியாக நீர் நிலைகளில் நின்று கொண்டு இருக்கும். பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் நாங்கள் பார்த்தபொழுது அப்படியே இருந்தன. மஞ்சள் மூக்கு நாரை, கரண்டிவாயன் போன்ற பறவைகள் கூட்டமாக இருந்த இடத்தில் ஒன்று-இரண்டு நத்தைக்கொத்தி நாரைகள் மட்டுமே இருந்தது. அதனால் அதிகம் இந்த பறவையை கவனிக்காமல் கூட்டமாக இறை தேடி கொண்டிருந்த மற்ற பறவைகளை பார்த்து கொண்டு இருந்தோம்.

நத்தைக்கொத்தி நாரைகள்  அதிகமாக வேறு பகுதியில் உள்ளதாக நண்பர் தீபக் அன்று இரவு தெரிவித்தார். அடுத்த வாரம் பெரும்பாக்கத்தில் சுற்றி இருக்கும் பகுதிகளில் வலம் வந்தோம். நத்தை குத்தி நரை அதிகம் இருந்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு பறவையுடன் ஒன்று கலந்துவிட்டோம்.


Uyir Magazine
பறவைகளின் முதல் எதிரி மனிதர்கள் என்பது மீண்டு இங்கு நிரூபணமாகியது. பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தின் தொடர்ச்சியான இந்த இடமும் வீடுகளால் நிரம்பியுள்ளன. நத்தை குத்தி நாரை இருக்கும் இடமும் நீரால் சூழப்பட்டுள்ளன. அங்கு  எந்நேரமும் வீடு வருவதற்கான நிலையிலேயே உள்ளது. சுற்றி இருக்கும் சுவரில்தான் இந்த பறவைகள் நின்று கொண்டு இருக்கிறது.

மதியம் பன்னிரென்டு மணியவில் அங்கு சென்றபொழுது. மூன்று பறவைகள் நீரிலும், மற்ற பறவைகள் சுவரிலும் நின்று கொண்டு இருந்தது. இரை தேடலை  நிறுத்தி உச்சி வெயிலில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்ததை பார்த்தோம். அந்த இடம் முழுவதும் நத்தை ஓடுகளால் சூழ்ந்து காணப்பட்டன. மனிதர்கள் அருகாமையில் இவை பழகி இருந்தது... நத்தைக்கொத்தி நாரை நின்று இருந்த இடத்தின் பின்புறம் இருக்கும் வீட்டிற்கு செல்லும் மனிதர், இந்த பறவையின் மிக அருகிலேயே  சென்றாலும் இவை பறக்காமல் நின்று இருந்தது ஆச்சரியத்தை தந்தது.

நாங்கள் பறவை அருகில் செல்லாமல், சிறிது தொலைவில் இருந்த புல்வெளியில் அமர்ந்து  நீண்ட நேரம் அதன் செயல்களை கவனித்ததில், ஓய்வில் இருந்த ஒரு நாரை கீழ் இருந்து பறந்து சென்று சுவரில்  நின்றது. சுதாரித்து அதனை கவனிக்க தொடங்கினோம். சுவரில் நின்று எதையோ தொலைந்ததை தேடுவது போல் நீரை உற்று பார்த்து கொண்டிருந்து. அப்பொழுது நத்தை அதன் பார்வையில் இருந்து தப்பவில்லை. சில நிமிடங்களில் அடுத்த பக்கம் இருக்கும் நீரில் இறங்கி நத்தை ஒன்றை பிடித்த மகிழ்ச்சியில் மீண்டும் சுவரில் வந்து நின்று கொண்டான. இப்பொழுது நாங்கள் நரையை உற்று பார்க்க தொடங்கினோம்.

பிளவுபட்ட அதன் அலகில் நத்தையை வைத்து உடைக்கவில்லை அதற்கு மாறாக உள்ளே இருக்கும் நத்தையை மட்டும் உறுஞ்சி எடுத்து விழுங்கிவிட்டது. ஓட்டில் இருந்து எப்படி எடுத்தது என்று இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது. அதிக நேரம் எல்லாம் எடுக்கவில்லை இரண்டு நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. இப்பொழுது எங்கள் பார்வையில் நத்தை ஓடு மட்டுமே இருந்தது. உணவை பிடிப்பதும்  அதனை சாப்பிடுவதும் நிமிடங்களில் முடிந்துவிட்டன. ஆனால் மஞ்சள் மூக்கு நாரை(Painted Stork) மீனை முழுங்க குறைந்தது ஐந்து நிமிடத்தில் இருந்து எட்டு நிமிடம் வரை எடுத்து கொள்வதையும் ஒருஇடத்தில் பார்த்தோம்.


பத்துக்கும் மேற்பட்ட நத்தைக்கொத்தி நாரைகள் இங்கு இருந்தன. வேறு எந்த பறவையும் இந்த இடத்தில பார்க்க முடியவில்லை. சாலையின் எதிர் புறம் இருந்த நீர் நிலையில் நீலத் தாழைக் கோழி, சிகப்பு ஆட்காட்டி, பவள கால் உள்ளன, மஞ்சள் வாலாட்டி போன்ற பறவைகளை பார்க்க முடிந்தது. இவற்றில் ஒன்று கூட இந்த பக்கம் வரவில்லை. நத்தைக்கொத்தி அந்த பக்கம் செல்லவில்லை. பவள கால் உள்ளனை பார்த்தபொழுது அதிர்ச்சியாக இருந்தது.. அதற்கு ஒரு கால் இல்லாமல் மற்றோரு காலில் தாவி தாவி குதித்து இரையை தேடியது.

இங்கு அனைத்து நத்தைக்கொத்தி நாரைகளும் சாதுவான நிலையிலேயே காணப்பட்டது. பொதுவாக நத்தைக்கொத்தி நாரைகள் எந்தவித குரலும் எழுப்பாது. வெகு நேரம் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தபொழுது இரண்டு நபர்கள் நாரைகள் இருந்த சுவற்றில் எதையோ தேடி கொண்டே நடந்தார்கள். இங்கு நாரையும், நத்தையும் தவிர ஒன்றுமே இல்லையே என்று நினைத்து அந்த நபர்களிடம் கேட்டால் நத்தை எடுக்க வந்து உள்ளோம் என்றார்கள்.

Perumbakkam Lake

நாரைகள் உணவான நத்தைகளை எடுக்க மனிதர்கள் வருகிறார்கள் என்பது தெரிந்தது. நத்தை குறைந்தால் நாரைகள் இங்கு வருவதை நிறுத்தி கொள்ளும். ஏற்கனவே இவற்றின் வாழிடம் அழிப்பு, இப்பொழுது இரையும் களவாடினால் நாளைடைவில் இந்த இனம் குறைந்து வரும் என்பதில் சந்தேகமேயில்லை. இதற்குள் நாரைகள் அனைத்தும் அங்கிருந்த பறந்து விட்டன. அந்த இடத்தின் பின்புறம் இருக்கும் வீட்டிற்கு சென்ற நபரை பார்த்து பறக்காத நாரைகள் இந்த மனிதர்களை பார்த்து பறந்துவிட்டன.

உயிரினங்களின் வாழ்வை அழிக்கும் நகரமயமாக்கலின் பாதிப்பை அந்த நேரத்தில் எங்களால் முழுமையாக உணர்ந்துகொள்ள முடிந்ததுடன் நத்தை கொத்தி நாரைகளின் முதன்மையான நடைத்தைகளையும் அறிந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

--செழியன்.ஜா




No comments:

Post a Comment