Sunday, 1 May 2016

இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுங்கள்..



உலகம் ரொம்பவும் கெட்டுப்போய்விட்டது.. அப்போதெல்லாம் இப்படி இல்லை.. சித்திரையில் வெய்யில் கொளுத்தியது..  ஆடியில் காற்றடித்தது.. ஐப்பசியில் அடைமழை பெய்தது.. கார்த்திகையில் தூறல் இருந்தது.. மார்கழியில் குளிரடித்தது.. இப்படி எழுபது, என்பது வயது பெரியவர்கள் இன்றும் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  இதில் எந்த சந்தேகமும் இல்லை.  அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையிலும் உண்மைதான். ஆனால் இன்றைய குழந்தைகளிடம் இயற்கையை பற்றி நம்மில் எத்தனை பேர் பேசுகிறோம்..? எத்தனை குழந்தைகளுடைய வீட்டில் வாங்கி வைக்கும் காய்கறிகளின் பெயர்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்..?  அவர்கள் தினமும் சாப்பிடும் அரிசி சோறு எதிலிருந்து வந்தது என்பதுகூட அவர்களுக்கு சரியாக தெரியாது.  இதற்கு அவர்களை குற்றம் சொல்லி பயன் இல்லை.  எல்லாவற்றுக்கும் காரணம் நாம்தான்.. 

Photo-Kalyan Varma
ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும், உரலையும், உலக்கையையும் அறியாத இன்றைய இளையதலைமுறையினர் அரிச்சுவடிகளில்கூட இவற்றை பற்றி படிப்பதில்லை. அணிலும், ஆடும், இலையும், ஈயும், உரலும், ஊதலும் எல்லாம் இடம்பெற்றிருந்த அரிச்சுவடி புத்தகங்கள் இன்று காலத்தின் ஔட்டத்தில் எங்கோ தொலைந்துபோயிருக்கின்றன.. உடுத்தும் உடையும், உண்ணும் உணவும், குடிக்கும் நீரும், சுவாசிக்கும் காற்றும் எங்கிருந்து வந்தன என்பதை பற்றிய உணர்வே இல்லாமல் இயற்கையை வாசிக்கத்தெரியாத ஒரு தலைமுறைதான் இன்று வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.. பிச்சிப்பூவையும், செம்பருத்தியையும், மருதாணியையும், மரிக்கொழுந்தையும் பற்றி எதுவுமே தெரியாத தலைமுறைதான் இது.. மஞ்சளும், இஞ்சியும் என்ன என்று தெரியாத இவர்கள் சாப்பிடுவது எதுவோ அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையான விழிப்புணர்வு கூட இல்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் இந்த பூமியில் வாழ்க்கையின் இனிமையான இளம்பருவத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

எத்தனை பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளுக்கு யானையையும், புலியையும் பற்றி சொல்கிறார்கள்..?  அடுத்த அறையிலும், மேல்மாடியிலும் இருக்கும் குழந்தைகளை அலைபேசியில் அல்லவா சாப்பிட அழைக்கிறார்கள் இன்றைய அம்மாக்கள்..?  அறிவியல் முன்னேற்றம் இங்கே துஷ்பிரயோகம் அல்லவா செய்யப்படுகிறது? ஒரு நாளில் எத்தனை  நிமிடங்கள் அப்பா, அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசுவதற்காக செலவழிக்கிறார்கள்..?  தாய்மண்ணையும், தாயின் மடியின் சுகத்தையும் அறியாமல் வளரும் இன்றுள்ள இளையதலைமுறை எப்படி அந்த மண்ணையும், தாயையும் நேசிப்பவர்களாக இருக்க முடியும்..?  எத்தனை குழந்தைகளுக்கு இன்று புல்வெளிகளையும், அவற்றில் பறந்து திரிந்த தட்டான்பூச்சிகளையும், பட்டாம்பூச்சிகளையும் பிடித்து விலையாடத்தெரியும்..? மாறாக அவர்கள் கம்ப்யூட்டரில் துப்பாக்கிகளோடு எதிரியை சுட்டுக்கொல்வதிலும், வீழ்த்துவதிலும் அல்லவா தங்கள் இளமை பருவத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்..?  நெருஞ்சி முள் குத்த குத்த ஔடி விளையாடிய காலம் எல்லாம் காணாமல் போய்விட்டது இன்று..!  பொன் வண்டை பிடித்து தீப்பெட்டிக்குள் அடைத்துவைத்து அதற்கு அரிசி ஊட்டிவிட்டு அதை சாப்பிடச்சொன்ன கதைகளை எத்தனை அப்பா, அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் சொல்லியிருக்கிறார்கள்..? காகத்துக்கு காலையில் சாப்பிடுவதற்கு முன்பு நாம் எத்தனை பேர் நம் குழந்தைகளிடம் அவற்றுக்கு சோறு போட்டுவிட்டு வரச்சொல்கிறோம்..?  குளிர்சாதனப்பெட்டிகளையும், துணி துவைக்கும் இயந்திரங்களையும், ஏர் கண்டிஷனையும் பார்க்கும் இந்த தலைமுறைக்கு மண்பானை தண்ணீரின் சுகமும், விசிறி காற்றின் இன்பமும், ஆற்றங்கரையில் தோய்க்கும்  கல்லில் துணியை தோய்ப்பதில் உள்ள ஆனந்தமும் எப்படி தெரியும்..? இன்றுள்ள குழந்தைகள் வானத்தில் வரும் நிலாவையாவது பார்த்திருப்பார்களா என்றால் அதுகூட சந்தேகம்தான்.. மின்னும் நட்சத்திரங்களும், நீல நிற வானமும், அதில் ஔடி விளையாடும் வெண்மையான மேகங்களும் எல்லாம் இவர்களுக்கு இணையதளத்தில் மட்டும்தான் பார்க்க தெரியும்.. 
 
photo-kalyan varma
சிறிய சிறிய பட்டன்களை அழுத்தி கணினியில் பெரிய பெரிய உலகங்களை கணினி திரையின் வழியாக பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தலைமுறை நாளை வளர்ந்து ஆளாகும்போது, விசாலமான இந்த உலகத்தில் சுருங்கிப்போன மானுட வடிவத்தில் பிறந்த இயந்திரங்களாகத்தான் வாழ்வார்கள்.. சக மனிதர்களின் வேதனைகளை இவர்களால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்..? இந்த உலகம் நாளை நல்லபடியாக இருக்க வேண்டும் என்றால் அது இன்றைய இளம் தலைமுறையால் மட்டும்தான் முடியும். சொத்து சுகங்களையும், காரையும், பங்களாக்களையும் சேர்த்துவைப்பதில் என்ன பயன் இருக்கிறது..? யாருக்காக சேர்த்துவைக்கிறார்களோ அவர்கள் இந்த பூமியில் நாளை அவர்களுடைய காலத்தில் வாழமுடிந்தால்தானே அவர்களின் தாய், தந்தையர் சேர்த்துவைத்துவிட்டுச்சென்ற சொத்து சுகத்தால் பயன் இருக்க முடியும்..?  இருப்பதற்கு பூமியே இல்லாமல் போகும்போது காரும், காசும் பணமும் இருந்து என்ன பயன்..? இதை இன்றைய பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இயற்கையை வாசிக்கக் கற்றுக்கொடுக்க  வேண்டும். இயற்கையை சுவாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். தெருவில் இரங்கினால் போக்குவரத்து நெரிசலையும், வீட்டுக்குள் இருக்கும்போது கம்ப்யூட்டர் என்ற மாயாஜால உலகத்தையும், சாப்பிடுவதற்கு பிசாவையும், பர்கரையும், குடிப்பதற்கு பாட்டில் தண்ணீரையும், உடுப்பதற்கு உடம்பை சிறைப்படுத்தும் நவநாகரீக ஆடைகளையும், வாழ்வதற்கு எல்லாவிதமான வேலைகளையும் செய்துதரும் இயந்திரங்களையும் மட்டுமே பார்த்து வளரும் இந்த கால குழந்தைகள் நாளை பெரியவர்களாகும்போது பெரிதாக இந்த பூமியை காப்பாற்றுவதற்கு என்று எதை சாதித்துவிடப்போகிறார்கள்..? அதனால் இன்றே இப்போதே இன்றுள்ள பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.. இயற்கையை நேசிப்பதற்கும்,, கண்டுணர்ந்துகொள்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்புகளை நாம்தான் ஏற்படுத்தி தரவேண்டும்.. 

கணினியின் முன் 24மணிநேரமும் உட்கார்ந்துகொண்டு விளையாடும் குழந்தைகளை பல்லாங்குழியை நோக்கியும், தாயக்கட்டத்தை நோக்கியும் திருப்பி விடுங்கள். அவர்களை வெளியில் மண்ணில் இறங்கி விளையாட விடுங்கள்.  அப்போதுதான் புல்லையும், பூச்சிகளையும் பற்றி அந்த குழந்தை அனுபவித்து அறிந்துகொள்ள முடியும்.. பசுமையான சூழலை அவர்களுக்கு காட்டுங்கள்..  புல்வெளிகளை அவர்களுக்கு காட்டிக்கொடுங்கள்.. அரசமரத்தையும், வேப்பமரத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்..  வீட்டு சமையலறைக்குள் அவர்களை அழைத்து சென்று அஞ்சரைப்பெட்டிக்குள் இருக்கும் அத்தனை மருத்துவகுணமுடைய பொருள்களையும் அவர்களுக்கு காட்டிக்கொடுங்கள்.. தாளிக்கும் கடுகில் இருந்து வாசனையின் அரசனான ஏலத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள்..  வெளியில் ஔடியாடி விளையாடி துளசியையும், தும்பைப் பூவையும், தட்டான்பூச்சியையும், தும்பியையும் அப்போதுதான் அவர்கள் அறிந்துகொள்வார்கள். 
 
இயற்கையை நேசிப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையில் நேசமுள்ளவர்களாக இருக்க முடியும்.. காக்கையும், குருவியையும் தெரிந்துகொள்ளாமலேயே வளரும் அவர்களுடைய பால பருவத்தை பெரியவர்களாகிய நாம் திருடிக்  கொண்டிருக்கிறோம்.. சத்துப்பற்றாக்குறையைப்போல இயற்கை சூழல் பற்றிய உணர்வின் பற்றாக்குறை இன்றைய குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.. இதை சரிசெய்வதற்கான மருத்துவம் பெரியவர்களாகிய நம் கையில்தான் இருக்கிறது..  இயற்கையை எப்போது நேசிக்கவும், சுவாசிக்கவும் தெரிகிறதோ அப்போதுதான் ஒரு குழந்தைக்கு உடல்நலமாகவும், மனநலமாகவும், படைப்பாற்றல் மிக்கவராகவும் வருங்காலத்தில் வாழமுடியும்..  

Photo-Kalyan Varma
தோட்டம் போடுங்கள்.. அதில் பூத்து சிரிக்கும் பூக்களை பார்க்கும்போது நம் உடலும் நலம் பெறுகிறது. மனமும் நலம் பெறுகிறது..  மரங்களையும், எல்லாவகையான செடிகளையும், பழங்களையும், வீட்டில் தோட்டம் போட்டு தாவரங்களை நட்டு வளருங்கள். அவற்றோடு உங்கள் குழந்தைகளும் வளர்வார்கள். இலைகளையும், பூக்களையும், கூழாங்கற்களையும், கிளிஞ்சல்களையும் பொறுக்கி விளையாட அவர்களை அனுமதியுங்கள். மரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகளை குழந்தைகளுக்கு நேரில் அழைத்துசென்று அவற்றின் பெயர்களையும் அவற்றின் பெயர்களையும் குணங்களையும் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துச்சொலுங்கள்.. வளரும் செடிகளோடும், வளர்ந்துநிற்கும் மரங்களை குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்ல  வேண்டும்..  வாரத்துக்கு ஒரு தடவையாக மலைகள், வனங்களுக்கு அவர்களை அழைத்து செல்லுங்கள்..

மரங்களையும், செடிகளையும், மரங்களையும், புழுக்களையும், பூச்சிகளையும்,  பறவைகளையும், விலங்குகளையும் குழந்தைகளுக்கு நேரில் காட்டி அவற்றின் பெயர்களை சொல்லிக்கொடுத்து அவற்றின் குணநலன்களை பற்றியும் கூறவேண்டும். மார்க்கெட்டுக்கு கூட்டிச்சென்று அங்கேயிருக்கும் காய்களையும், பழங்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்க வேண்டும். அவைகள் எங்கு விளைகின்றன என்றும் எடுத்துக்கூற வேண்டும்.  முடிந்தால் சுற்றுலா செல்வதைப்போல நம் சொந்த கிராமங்களுக்கு பொங்கல்விடுமுறையில் குழந்தைகளை கூட்டிச்சென்று வயல்வெளிகளையும், கிணறுகளையும் அவர்களுக்கு காட்டவேண்டும். குளங்களையும், ஏரிகளையும், ஆற்றையும், அதன் கரையில் வளர்ந்திருக்கும் ஆலமரங்களையும், அரசமரத்தையும், நாவல் மரங்களையும் அவர்களுக்கு காட்ட வேண்டும். மணல்தரையில் கிளிஞ்சல்களையும், சங்குகளையும் பொறுக்கி எடுத்து விளையாட அவர்களுக்கும் ஒரு வாய்ப்பை அவர்களின் இளம் வயதில் ஏற்படுத்தித் தரவேண்டும். 

வீட்டிலேயே இடமில்லை என்றாலும்கூட தொட்டிகளிலேயே செடிகளை நட்டுவைத்து வளர்த்து ஒரு அழகான தோட்டம் போட அவர்களையும் அதில் ஈடுபடுத்த வேண்டும். காடுகளுடன் உள்ள மலைப்பகுதிகளுக்கும், கடற்கரை பகுதிகளுக்கு அவர்களை ஒருவருடத்துக்கு ஒரு தடவையாவது கூட்டிக்கொண்டுபோய் இயற்கையின் வெவ்வேறுவிதமான பரிணாமங்களின் அற்புதங்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.  பிறந்த நாள், தீபாவளி, பொங்கல், புதுவருடம் போன்ற சிறப்பு நாள்களில் இயற்கையை பற்றிய புத்தகங்களையும், குறுந்தகடுகளையும் அவர்களுக்கு பரிசாக தந்து இயற்கையின் பக்கம் அவர்களை அழைத்துவர வேண்டும்.  கை லென்சுகளையும், பைனாக்குலர்களையும், டெலஸகோப்பையும், கேமராவையும் அவர்களுக்கு பழக்கப்படுத்தித் தரவேண்டும்.

மூங்கில் காடுகள் நடத்தும் இசைக்கச்சேரியையும், அதற்கு தாளம் போடும் வண்டுகளின் முனகல்களையும் அவர்கள் கேட்டு ரசிப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.   கடலலைகளின் ஔசையில் எழும்பி விழுந்து மறுபடியும் எழும்பி எழும்பி வரும் படகுகளின் நாட்டியத்தை அவர்களுக்கு காட்டித்தர வேண்டும். குயில்கள் பாடலையும், கிளிகளின் கொஞ்சலையும் அவர்கள் அறிந்துகொண்டால் பிறகு போலியான கணினி திரைகளை தேடி அவர்கள் ஒருகாலும் ஔடமாட்டார்கள்.  காலை இளம் கதிரின் வெளிச்சக்கீற்றுக்கள் ஏற்படும் சுகத்தை அவர்கள் அனுபவிக்க அனுமதியுங்கள்..   

தென்றல் தாலாட்டும் தென்றல் தலை வருடிவிட்டு தென்னங்கீற்றுகளின் அழகை அவர்கள் கண் குளிர காண வாய்ப்பு தாருங்கள்..  முடிந்தால் வாரவிடுமுறைகளில் இரவுநேர நட்சத்திரங்களையும், நிலாவையும் கண்டு ரசிக்க அவர்களை அழைத்து செல்லுங்கள்.. உங்கள் குடும்பத்தில் இளமைக்கால கிராம வாழ்க்கையின் அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். சூரிய குடும்பத்தைப் பற்றியும் அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.. 

photo-Kalyan varma
நம்மோடு சக உயிரினங்களாக வாழ்ந்து வந்த உயிரினங்களை போற்றி பாதுகாத்த நம் முன்னோர்கள் பின்பற்றிய வழிகளில் முடிந்ததை அவர்களையும் பின்பற்ற ஊக்குவியுங்கள். காலையில் காகத்துக்கு சோறு படைத்தல், குருவிகளுக்கும், புறாக்களுக்கும் அரிசி மணிகளையும், கிண்ணத்தில் நீரையும் வைப்பது, வீட்டுவாசலில் அரிசிமாவால் கோலம் போடுவது போன்ற செயல்களை அவர்கள் செய்ய சொல்லி பழக்கிவிடுங்கள்.. வீட்டு தோட்டம் போட்டு அவர்களுக்கு பிடித்தமான பூச்செடிகளையும், காய்கறி செடிகளையும் அவர்கள் கையாலேயே நட்டு வளர்க்க சொல்லுங்கள்.  இதை பெருமையாக எல்லோரிடமும் சொல்லுங்கள்..  கேக்குகளுக்கும், ஜாம்களுக்கும் பதிலாக தேனையும், கடலை மிட்டாயையும் அவர்களுக்கு வாங்கிக்கொடுங்கள். ஊரில் நடக்கும் திருவிழாக்களுக்கு அவர்களையும் அழைத்துசெல்லுங்கள். அவற்றில் ஒருசிறிய அளவாவது இயற்கையின் போற்றுதல் இருக்கும்.. 

பிறகு என்ன..? இயற்கை இன்றைய இளம் தலைமுறையால் வருங்காலத்திற்கும் பாதுகாக்கப்படும்.. காசு பணத்தை அவர்களாகவே கூட சம்பாதித்துக் கொள்வார்கள்.  காசு பணத்துக்காக இன்று நாம் இயற்கையை அழித்துவிட்டால் அதை யாராலும் மீட்டுக்கொண்டுவர முடியாது..  இயற்கையை நேசிக்க கற்றுக்கொண்ட இன்றைய குழந்தைகள் நாளை பூமியை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள்.. 

                                             
                                                                                                                  -சிதம்பரம் இரவிச்சந்திரன்

Friday, 18 March 2016

Late comers to VedanthaankaL





காலை 6.40 தாம்பரம் பஸ் நிலையத்தில் ஏலக்காய் டி குடித்து கொண்டிருந்தேன் அடுத்து செங்கல்பட்டு நோக்கி செல்வதற்கு. வேடந்தாங்கல், மிக பழமையான பறவைகள் சரணாலயத்தை பார்ப்பதற்கு மார்ச் மாதம்தான் என்னால் முடிந்தது.சென்னையில் இருந்து சிறிது தொலைவு மட்டுமே உள்ளதால் அனைவரும் சென்று வரலாம் ஆனால் அப்படி யாரும் செல்வதில்லை என்பது பஸ்சில் அங்கு செல்லும்பொழுது தெரிந்துகொள்ளலாம்.

ஐம்பது ரூபாய் டிக்கெட் எடுத்து விட்டால் செங்கல்பட்டு வரை சென்று வரலாம். வேடந்தாங்கலுக்கு தாம்பரத்தில் இருந்து பஸ் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் செங்கல்பட்டில் இருந்து நாற்பது நிமிடத்திற்கு ஒரு பஸ் உள்ளது என்று இணையத்தில் தேடும்பொழுது தெரிந்து கொண்டேன். நாற்பது நிமிட பஸ் எல்லாம் கப்சா என்று செங்கல்பட்டில் நீங்கள் நிற்கும்பொழுது உணர ஆரம்பித்து விடுவீர்கள்.நானும் அப்படியே.

8.15 மணிக்கு செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் இறங்கிய உடனேயே பஸ் விசாரணை அதிகாரிடம் சென்று வேடந்தாங்கல் செல்வதற்கு எந்த பஸ் என்ற கேள்விக்கு 8.15 ஒரு பஸ் கிளம்பும் என்றார் அப்பொழுது மணி 8.17. பஸ் நிலையம்  முழுவதும் வலம்வந்தேன் பயன் இல்லை மிண்டும் அதே அதிகாரிடம் வந்து கேட்டேன்.ஒரு நடத்துனர் 8.15 பஸ் இல்லையினா அடுத்து 9.40க்கு தான் பஸ் என்ற பதில் எரிச்சலை தந்தாலும் வேறு வழி என்ன என்று  கேட்டதற்கு, நீங்க மதுராந்தக பஸ்சில் ஏறி பட்டாளம் கூட்ரோடில் இறங்கி ஷேர் ஆட்டோவில் செல்லவேண்டும் ஆனாலும் ஒரு சிக்கல் ஷேர் ஆட்டோ வேடந்தாங்கல் வரை செல்லாது என்ற குண்டையும் போட்டார்.

MAN vs WILD Bear Grylls அடிக்கடி ஒரு வாசகத்தை சொல்லுவார் நாம் ஒரே இடத்தில் இருக்ககூடாது போயிட்டே இருக்கவேண்டும் என்ற வாசகத்தை பின்பற்றி போயிட்டே இருப்போம், அங்கே சென்று பார்த்துகொள்ளலாம் என்று மதுராந்தக பஸ்சில் அமர்ந்தேன். 9.00 மணிக்கு பட்டாளம் கூட்ரோடில் இறக்கிவிட்டார்கள். சென்னை to திருச்சி மெயின் ரோட்டில் மதுராந்தகதிற்க்கு முன்பு உள்ளது பட்டாளம் கூட்ரோடு. நிறைய ஷேர் ஆட்டோ இருந்தாலும் எதுவும் வேடந்தாகளுக்கு செல்வதில்லை என்ற முடிவோடு இருந்தார்கள். கேட்டதற்கு பத்து பேர் சேர்ந்தார்கள் என்றால் போகலாம், இதுவரை என்னை தவிர வேறு ஒருவரையும் இல்லை என்பதுதான் நிஜம்.இதற்காக காத்திருந்தால் செங்கல்பட்டில் இருந்து 9.40 பஸ்ஸே வந்துவிடும்.அங்கு இருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தான் வேடந்தாங்கல் என்ற பலகையை பார்த்து, தனியாக செல்ல எவ்வளவு என்று கேட்டேன்.200 ரூபாய் என்பதை 180க்கு முடிவாகி 9.30க்கு வேடந்தாங்கல் என்னை வரவேற்த்தது 

சீசன் நேரத்தில் கூட போக்குவரத்து மிக மோசம் என்பதையே பஸ்சில் செல்லும்பொழுது தெரிகிறது. இதை தான் முதல் பத்தியில் கடைசி வரியாக எழுதியிருகிறேன் அங்கு யாரும் செல்வதில்லை என்பதை ஒரு பத்து பேர் கூட  ஷேர் ஆட்டோவில் சேரவில்லை.என்பது உணர்த்துகிறது


ஐந்துரூபாய் மட்டுமே பெரியவர்களுக்கு உள்ளே செல்ல, கேமரா இருபத்தைந்துரூபாய் ஆக முப்பது ரூபாயுடன் பார்த்துவிடலாம்.நீர் நிறைந்து இருப்பதால் ஏகப்பட்ட பறவைகள் காணப்படுகிறது அதில் மிக அதிகமாக மஞ்சள் மூக்கு நாரைகளே நிறைந்து இருக்கிறது.நான் உள்ளே சென்றபொழுது பறவை நோக்கும் ஒரு குருப் வெளியேறி கொண்டிருந்தது.ஏறக்குறைய இருபது பேருக்கு மேல் இருப்பார்கள் வயதோ இருபதுகுள்ளே, அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.எல்லோருடைய கையிலும் குறிப்பெடுக்க தாள்கள், அதில் பறவைகளின் படங்களும் இருந்ததை அவர்கள் வேகமாக வெளியேறும்பொழுது பார்க்க முடிந்தது.

மஞ்சள் மூக்கு நாரைகள் (Painted Stork)

சிறிய நீர்காகம் (Little cormorant)

கூழைக்கடா (Pelican)

கரண்டிவாயன் (Spoon Bill)

அரிவாள் மூக்கன் (White ibis)

வக்கா (Night Heron)

மடையான் (Pond Heron)

மரங்கொத்தி பறவை (Wood Pecker)

பணங்காடை (Indian Roller)

இரட்டை வால் குருவி (Black Drongo)

வென்மார்பு மீன்கொத்தி (White Throated Kingfisher)

உன்னி கொக்கு(Cattle Egret)

சிறிய கொக்கு(Little Egret)

உள்ளே நூழைந்தவுடன் இரட்டை வால் குருவி என்னை வா என்று வரவேற்று உள்ளே செல் என்றது.மஞ்சள் மூக்கு நாரைகள் மொத்தமாக ஏரியை குத்தகை எடுத்தது போல் இருந்தது.பார்க்கும் இடம் முழுவதும் மஞ்சள் மூக்கு நாரைகளே.சிறிய நீர் காகங்கள் அதனுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கிறது. நிறைய பள்ளிகளில் இருந்து சிறு பிள்ளைகளை ஆசிரியர்கள் அழைத்து வருகிறாகள்.என்ன வேடிக்கை என்றால் வரும் ஆசிரியர்களில் யாருக்கும் ஒரு பறவையின் பெயர் கூட தெரியவில்லை ஆமாம் ஒரே ஒரு பறைவையின் பெயர் கூட தெரியவில்லை என்ற நிலை, பள்ளியில் சுற்றுச்சூழல்,காட்டு விலங்கு,பறவை என்ற பாடமே இல்லாததை இவர்கள் எல்லாவற்றையும் கொக்கு, கோழி என்றே பிள்ளைகளுக்கு சுட்டி காட்டி வருவதில் தெரிகிறது.



என் அருகில் இருந்த வாத்தியார் அதோ பறவைகள் பார், கொக்கு பார்  என்றே சொல்லி கொண்டிருந்தார். பிள்ளைகளும் பெயரை கேட்கவில்லை என்பது வாத்தியார்க்கு வசதியாக இருந்தது.இது போல் பிள்ளைகளை அழைத்து வரும்பொழுது குறைந்த பட்சம் ஒரு சில பறவைகளின் பெயர்களையாவது ஆசிரியர்கள் தெரிந்து கொண்டு வந்தால் பிள்ளைகள் பார்க்கும் பறவையின் உண்மையான பெயர் சொல்லிக்கொடுப்பதால், பிள்ளைகள் மனதில் பதிந்து அவை தவறான பெயர் பதியாமல் இருப்பதற்கு உதவும். 
 
நாம் நடந்து போகும் வழியின் வலது பக்கத்தில் நிறைய பறவைகள் படமும் அதன் அருகில் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களும் இருப்பதை ஒரு ஆசிரியர்களும் பார்த்து படிக்கவே இல்லை அப்படியாவது சில பறவைகள் பெயர்கள் தெரிந்து கொண்டிருக்கலாம்.
வேடந்தாங்கலில், நம் கண்ணுக்கு அருகில் இருக்கும் மரத்தில் மஞ்சள் மூக்கு நாரைகளும்,அதற்கு அப்பால் இருக்கும் மரத்தில் கூழைக்கடாகளும் அதன் பக்கத்தில் இருக்கும் மரத்தில் நீர்காகங்களும் பாகம் பிரித்து கொடுத்து இருப்பது போல் அமர்ந்திருந்தன.எந்த பறவைகளுக்கும் இடயே சண்டையோ,போட்டியோ கொஞ்சம் கூட இல்லை என்பது ஆச்சரியம்.


மஞ்சள் மூக்கு நாரைகள், பறப்பதும்,சிறு மரக்கிளைகளை எடுத்து வருவதும் அதனை கொண்டு கூடு அமைப்பதும், இந்த தொடர்நிகழ்ச்சியை பார்ப்பது பறவை ஆர்வலர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தரும்.நிறைய மஞ்சள் முக்கு நாரைகள் முட்டை இட்டுயிருப்பதை பார்க்க முடிந்தது.ஆங்கில பெயரான painted stork என்பதை வர்ண நாரை என்று மொழி பெயர்கிறார்கள் அது தவறு, ஆங்கில பதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு, மஞ்சள் மூக்கு நாரை அல்லது சங்குவளை நாரை என்றே தமிழில் அழைப்பது சரி என்று ஒரு கட்டுரைகளில் படித்திருக்கிறேன்.

பறவைகளை அவதனிக்க ஒரே ஒரு நேர் பாதை மட்டும் உள்ளதால், கால் வலி,உடம்பு வலி என்பதே இல்லை போக்குவரத்தால் வரும் உடம்பு வலி மட்டுமே உண்டு. நிறைய இருக்கைகள் அம்ரவதற்கு இருப்பதால் பெரியவர்களும் சென்று வரலாம், குடிநீர் சுவையாகவே உள்ளது. சிறிது நேரத்தில் பள்ளி பிள்ளைகளை அமர வைத்து சாப்பிட சொல்லிவிட்டார்கள். காலையில் நிறைய கனவுகளோடு கிளம்பிய பிள்ளைகள் வித விதமான உணவுகளை பிரித்து சாப்பிட தொடங்கிவிட்டார்கள் ஒரு பிள்ளை முட்டையை கொண்டுவந்திருப்பதை பார்க்க முடிந்தது.சுற்றி பார்க்க வேறு எதுவும் அங்கு இல்லை, ஒரே நேர் பாதை மட்டுமே, எவ்வளவு நேரம் தான் ஒரே மாதிரி பறவைகளை பார்த்து கொண்டிருப்பது என்று பிள்ளைகளுக்கு போர் அடிப்பதால், சாப்பிட்டு விட்டு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

நிறைய கூழைக்கடாகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது பருந்துகள் கூட்டமாக பறப்பது போல் இருந்தது.உயரமான கோபுரம் இருப்பதால் வேடந்தாங்கல் முழுவதும் பார்க்க முடிவது தான் மிக சிறந்ததாக இருக்கிறது.கோபுரத்தில் இருக்கும் தொலைநோக்கி அன்று இல்லாததால் அவற்றைக் எதிர் பார்த்து வருபவர்கள் இங்கு இருக்குமே இங்கு இருக்குமே என்று கூட வருபவர்களிடம் சொல்லி, பறவைகளை கிட்ட பார்க்கலாம்னு வந்தால் இப்படியாகிவிட்டதே என்று என்னிடம் பைனாகுலரை வாங்கி அவர்களும், அவர்களின் பிள்ளைகளும் பார்த்தார்கள் அதில் ஒருவர், என்ன பைனாகுலர் இவ்வளவு கனமாக உள்ளது என்று இரண்டு,முன்று முறை என்னிடம் கேட்டு விட்டார்.  

கரண்டிவாயனை தேடுவது சிரமமாக உள்ளது மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வேடந்தாங்கலில் காணப்படுகிறது. கடைசியில் இரண்டு கரண்டிவாயனை பார்த்து விட்டே அங்கு இருந்து கிளம்பினேன். அரிவாள் மூக்கன் சொல்லி கொள்ளும்படி பறந்து கொண்டிருந்தது. நிறைய மடயான்களை பார்க்க முடிகிறது.நாம் நிற்கும் இடத்தில இருக்கும் தண்ணீரிலேயே மடையன்கள் சாதுவாக நின்றுகொண்டுயிருகிறது. நானும் ஒரு மணிநேரத்திற்கு மேல் அவற்றை கவனித்து கொண்டிருந்தேன் அமைதியாக நீரையே பார்த்து கொண்டிருந்தது. எதை நினைத்து நின்று கொண்டிருகிறது என்று தான் தெரியவில்லை.

முன் வரிசையில் உள்ள ஒரு மரத்தில் இருக்கும் பறவைகளை பற்றி என் நினைவில் இருப்பதை பதிவிடுகிறேன். மேற்புரதில் ஒரு சங்குவளை நாரை (மஞ்சள் மூக்கு நாரை) தன் குட்டிகளுக்கு உணவை தந்து கொண்டிருக்கிறது, பக்கத்தில் ஒரு மஞ்சள் முக்கு நாரை கூடு அமைப்பதற்காக மர கிளைகளை கொண்டுவருவதும் செல்வதுமாக காரியத்தில் சரியாக செயல்பட்டுகொண்டிருந்தது. நான் பார்த்தபொழுது ஏறக்குறைய கூடு பாதிக்கு மேல் தயார் நிலையில் இருந்தது. பின் புறம் நிறைய, வளர்ந்து வரும் மஞ்சள் முக்கு நாரைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தது. மரத்தின் கீழ் ஒரு மடையானும் பின்னால் இராகொக்கும் நின்று, என்னத்தை பார்க்குமோ, எதையோ பார்த்து கொண்டே இருந்தது.ஒரு சில கூழைக்கடாகளும் இருந்ததை பார்க்க முடிந்தது. அதிகமான கூழைக்கடாகள் முதல் வரிசையில் உள்ள மரத்தில் இல்லாமல் பின் பக்கம் இருக்கும் மரத்தில் அமர்ந்து இருந்ததை பைனாகுலர் இருந்தால் துல்லியமாக பார்க்கலாம்.

கோபுரத்தில் இருந்து பார்க்கும்பொழுது பறவை சரணாலயத்திற்கு பின் பக்கம் உள்ள வயல்வெளிகளில், ஒரே ஒரு மாடு புற்களை மேய்ந்து கொண்டிருந்தது மற்றும் நிறைய உன்னி கொக்குகள் அதில் காணப்பட்டது.சிறிய கொக்குகள் அதிகமாக சரணாலயத்தில் இருப்பதை காணமுடிகிறது உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே சிறிய கொக்கையும் உன்னி கொக்கையும் பிரித்து அவதனிக்க முடியும். பறவை அவதனிப்பவர்கள் சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள். சரணாலயம் மிக அமைதியாக இருப்பதால் பறவைகள் சத்தம் மட்டுமே கேட்க முடிகிறது. சிறிது நேரம் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தேன், வித்தியாசமா சத்தத்தை கேட்டு நான் அமர்ந்து இருந்த இடத்தில இருந்த மரத்தை மேல் நோக்கி பார்த்தேன் மரங்கொத்தி பறவை ஒன்று தனியாக கிளைகளை விட்டு,விட்டு தாவி கொண்டிருந்தது. உயரத்தில் இருந்ததால் என்னிடம் இருந்த மொபைல் கேமராவில் படம் சரியாக விழவில்லை.வீட்டில் சரிபார்த்த பிறகே கேமெராவை எடுத்து சென்றேன் ஆனால் அங்கு மெமரி கார்டு விளையாட்டு காண்பித்து விட்டது.அதனால் இங்கு இருக்கும் படம் எல்லாம் மொபைலில் எடுத்தவையே.
 
பறந்து செல்லும் மஞ்சள் மூக்கு நாரை



வேடந்தாங்கல் நீர்

தண்ணீர் இருக்கும்வரை பறவைகள் இருக்கும், ஏறக்குறைய ஜூன் மாதம் வரை பார்வையாளர்கள் வருவார்கள், பிறகு சரணாலயத்தை மூடிவிடுவார்கள் அதன் பின் வரும் பார்வையாளர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை, இதற்காக தான் வந்திருக்கிறோம் என்று சொல்பவர்களை உள்ளே முழுவதும் செல்ல விடாமல் ஆரம்பத்தில்லேயே நின்று பார்க்க அனுமதிப்பார்கள். இவையெல்லாம் வெளியே இருப்பவர்களிடம் பேசி தெரிந்து கொண்டேன். 

அப்படி, இப்படி சுற்றி முடித்து விட்டு வெளியே வந்தேன். ஒரு பெண்மணி தர்புஸ் சாப்பிடுங்கள் என்று கூப்பிட்டார்கள் எவ்வளவு என்பதற்கு பத்து ரூபாய்தான் ப்ரஷ்ஷாக தருகிறேன் என்று சொன்னதால் சாப்பிட்டு விட்டு, இளநீர் ஒன்று தாருங்கள் என்றேன் இதன் விலையை நான் கேட்கவில்லை அதான் தர்புஸ் சாப்பிட்டோமே என்ன அதிகமாக சொல்லவிட போகிறார்கள் என்று குடித்து விட்டேன் பிறகு நாற்பது ரூபாய் என்று சொன்னார்கள்.சென்னையிலேயே இருபது, இருபத்தைந்து தான் என்பதற்கு பின், இருபத்தைந்து தந்து வியாபாரத்தை முடித்தேன் அவரிடமே பஸ் எப்பொழுது வரும்? இப்பொழுது வரும். சொல்லியபடி வந்ததுதான் ஆச்சரியம், ஏறி அமர்ந்தேன் ஊரைச்சுற்றி காண்பித்து விட்டுதான் செங்கல்பட்டில் இறக்கிவிட்டார்கள்.போன வழிலேயே வீடு வந்து சேர்ந்தபொழுதுதான் ஒரு உண்மை தெரிந்தது அடுத்த தடவை வண்டியில்லாமல் செல்லக்கூடாது என்று. 

                                                                                                                                             -செழியன்
                                       
         




  

Wednesday, 20 January 2016

சு.தியடோர் பாஸ்கரன்

காலில் அடிபட்டதால் முழு ஓய்வில், இந்த நேரத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் காட்டுயிர் புத்தகங்களை ஒரு சேர படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.சோலை என்னும் வாழிடம்,தாமரை பூத்த தடாகம், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,வானில் பறக்கும் புல்லெல்லாம்,மொழிபெயர்ப்பு-கானுறை வேங்கை,தொகுத்த நூல்-மழை காலமும் குயில் ஓசையும்,மற்றும் இணையத்தில் சில கட்டுரைகள். 

ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதியிருந்தாலும்.எந்த இடத்திலும் புள்ளிவிவரங்களை சரியாகவே குறிப்பிடுகிறார்.ஒரு நாட்டின் பரப்பளவில் 33% காடுகளாக இருக்க வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் அவை 17.5% இருப்பதாக பல்வேறு கட்டுரைகளில் காணமுடிகிறது.அணை கட்டுவதாலும்,காடுகளில் பாதை அமைப்பதிலும்,தேயிலை பயிர் இடுவதற்கு, காகிதம் மற்றும் சுரங்கம் என்ற பெயரிலும் காட்டை பிரித்து அழித்து விட்டார்கள்.செயற்கை கோள் எடுத்த படத்தில் 17.5%க்கும் குறைவாகவே காட்டின் அளவு இருப்பதாக குறிப்பிடுகிறார்.

நாம் பார்க்கும் பறவைகள் அனைத்திற்க்கும் தமிழ் பெயர் இருப்பதை சுட்டி காட்டி, தமிழ் பெயர்களையே தாம் பார்த்த பறவைகளுக்கு எழுதியுள்ளார்.சிங்கவால் குரங்கு என்பது ஆங்கில பதத்தின் நேரடி மொழிபெயர்ப்பு அதன் தமிழ் பெயர் என்ன என்று ஒரு கட்டுரையில் கேள்வியோடு நிறுத்தி பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதிய ஒரு கட்டுரையில் அவை சோலை மந்தி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு அவர் தமிழ் பெயரை தேடி சென்றிருக்கிறார் என்று புலப்படுகிறது.

ஆறுகளை இணைப்பதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று தெரியாமல் நாட்டில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்று சொல்வது, சுதந்ததிர தின உரையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இதை பற்றி எதுவும் சொல்லாதது ஆறுதலாக இருக்கிறது என்று ஒரு கட்டுரையிலும், தமிழில் காட்டுயிர் பற்றிய எழுத்துகள் வருவது இல்லை அதிலும் பெரும்பாலான பத்திரிகைகள் அபூர்வ விலங்கு,வெளிநாட்டு பறவை என்றே பெயர் தெரியாத பறவைகளுக்கு குறிக்கப்படுவது, காட்டுயிர் கலைச்சொற்கள் இல்லாமல்போனதின் வெளிப்பாடே என்று குறிபிடுகிறார். சித்த மருத்துவர்கள் இருப்பதால் மரங்களின் பாரம்பரிய பெயர் காப்பாற்றப்படுவது இப்போதைக்கு ஆறுதல் என்று சொல்வது உண்மையிலும் உண்மை.இதே வரிகளை மா.கிருஷ்ணனின் மழைக்காலமும் குயிலோசையும் நூலின்  முன்னுரையிலும் குறிப்பிடுகிறார்.

தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து கட்டுரைகளும் ஏறக்குறைய காட்டுயிர், மரங்கள், ஆறுகள், மலைகள், கழிமுகங்கள்,சோலை காடுகள், பாலை காடுகள், வேட்டையாடிகளால் உயிரினங்கள் குறைந்தது, அணுஉலை நிறுவுவதால் ஏற்படும் ஆபத்துகள், அரசாங்கத்தால் உருவாகும் அணைகள் ஏற்படுத்தும் இடம் அழிப்புகள், சுரங்கம் என்ற பெயரில் ஏற்படும் காட்டழிப்பு, தேயிலை பயிரால் ஏற்படும்  இழப்புகள்,பறவைகளின் தமிழ் பெயரை பயன்படுத்தாமல் இருப்பது,எந்த அரசாங்கமும் சுற்றுச்சூழலை பற்றி தேர்தல் அறிக்கையில் சொல்லாதது இப்படி அணைத்து செய்திகளையும் ஒரு சேர அறிந்துகொள்ள முடிகிறது.

ஒரு மனிதர் இந்த அளவுக்கு காட்டை நேசிக்க முடியுமா என்று அனைத்து கட்டுரைகளையும் படித்துமுடித்தபோது உணரமுடிகிறது. காட்டுயிர் சம்பதமாக படிப்பவர்கள் தாங்கள் முழுநேரமாக காட்டுயிர் ஆய்வில் இருப்பார்கள் ஆனால் தான் பார்த்த வேலைக்கும் இதற்கும் சமந்தம் இல்லாத ஒருவர் வாழ்நாள் முழவதும் செலவுசெய்து கொண்டியிருகிறார் என்பதுதான் ஆச்சரியம்.

இவர் கட்டுரையின் முதல் வரியே மேற்கொண்டு முழுவதும் படிக்க வைத்துவிடும்.எப்படி இளையராஜாவின் பாடல் வெற்றி, பல்லவி ஆரம்பிப்பதற்கு முன்பு வரும் இசையே பாடலின் கொண்டாதத்தை சொல்லிவிடுமோ அதேபோல்தான்  இவரின் ஆரம்ப வரி. தான் போய் இறங்கும் இடத்தை துல்லியமாக பதிவு செய்துவிடுகிறார்.அவரோட முதல் வரிகளை பார்ப்போம்.... 
 
முதுமலையிலிருந்து கல்லட்டி வழியாக ஊட்டி செல்லும் சாலையில் மசினகுடிக்கருகே சீக்ரட் ஐவரி (Secret ivory)விடுதியை நாங்கள் அடைந்தபொழுது மாலை ஐந்து மணியாகிவிட்டது.

மார்ச் 2004 பெரியார் புலிகள் சரணாலயத்தின் உட்பகுதியில்,வனத்துறைக்கு சொந்தமான ஒரு சிறிய குடிலில் நாங்கள் மூவரும் அமர்ந்திருந்தோம். 

கடந்த ஜனவரி முதல் நாள்,காலை ஆறரை மணிக்கு ஒரு ஜீப்பில் பந்திப்பூர் சரணாலய்திற்குள் நுழைந்தோம்.

ஒவ்வொரு வருடப்பிறப்பையும் காட்டில் கழிக்கும் குடும்ப வழக்கதிற்கேற்ப அந்த ஆண்டு குடகிலுள்ள பிரம்மகிரி மலைக்கு செல்ல தீர்மானித்தோம்.மதியம் பெங்களுரை விட்டுப் புறப்பட்டு,இருட்டியபின் இவ்விடுதியை அடைந்தோம்.

மா.கிருஷ்ணன் சந்திப்பை இப்படி தொடங்குகிறார் 1962ஆம் வருடம் சென்னை எட்வர்ட் எலியட்ஸ் சாலையிலுள்ள(இன்றைய ராதாகிருஷ்ணன் சாலை) அவரது பெருங்குளம் இல்லத்தில் நான் மா.கிருஷ்ணனை முதன் முறையாக சந்தித்தேன். சட்டையில்லாமல், வெற்றுடம்புடன் லுங்கியைக் கட்டிக்கொண்டு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்துகொண்டிருந்தார்.

பெரியார் சரணாலயத்திலுள்ள காட்டுயிரைக்காண ஏரியில் ஒரு சிறு படகில் சென்று சுற்றிவிட்டுத் திரும்பிகொண்டிருந்தோம்.

ஒரு கட்டுரையில் ஆப்ரிக்காவில் உள்ள The Great Rift Valley பற்றி விவரித்துவிட்டு ஒரே சமயத்தில் பத்து இலட்சம் பூநாரைகள்(Flamingos) கூடும் இடமான நக்கூரா பறவை சரணாலயத்தை பார்ப்பதற்கு செல்வதை இப்படி தொடங்குகிறார் ஒரு சனிக்கிழமை அதிகாலையில் நான் நைரோபியை விட்டுப் புறப்படும்போது பொழுது புலர ஆரம்பித்து விட்டிருந்தது. இவருக்கு வழிக்காடியாகவும், காரோடியாகவும் வரும் கினாரா, ஒரு வார்த்தை மட்டும் பேசுபவர் இவர் கேட்ட ஒரு கேள்விக்கு “பறவைகள்” என்று கூறிவிட்டு சிகரட்டை பற்ற வைப்பதில் முனைந்துவிட்டார்.

இப்படி இவருடைய கட்டுரைகளின் முதல் வரியே அடுத்து படிக்க வைத்துவிடும். காட்டுயிர் மட்டும்மில்லாமல் சினிமா பற்றியும் ஆய்வு செய்து நிறைய நூல்களை எழுதியுள்ளார்.அவருடைய ஒரு சினிமா பேட்டியில் உங்களுக்கு பிடித்த ஐந்து படங்களை வரிசைபடுத்துங்கள் என்ற கேள்விக்கு சகுந்தலை(1940),ஏழை படும் பாடு(1950),யாருக்காக அழுதான்(1965),அவள் அப்படிதான்(1978),அன்பே சிவம்(2003) என்று பதில் சொல்லியிருக்கிறார்.

தமிழில் காட்டுயிர் எழுத்து என்று மா.கிருஷ்ணன் அவர்களுக்கு அடுத்து மிக பெரிய அளவில் எழுதி கொண்டிருப்பவர், இன்று எழுதும் அனைத்து காட்டுயிர் எழுத்தாளர்களும், இவரை குறிப்பிடாமல் எழுதுவதில்லை.இந்த வயதிலும் தொடர்ந்து எழுதி கொண்டிருக்கிறார் என்பதற்கு சமிபத்தில் தி தமிழ் இந்துவில் வெளிவந்த “வரையாடு” கட்டுரையே ஒரு உதாரணம் முகநூலிலும் அப்படியே.


தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய சோலை என்னும் வாழிடம் புத்தக வெளியிட்டு நிகழ்சியில்.அவர் அருகில் நான் அமர்ந்திருந்தேன்.புத்தக வெளியிட்டு  நிகழ்ச்சி முடிந்து கிளம்பியவரை பார்த்தபடியே நானும் சென்றேன்.வேலை காரணமாக பல மாநிலங்களில் அவர் இருந்தாலும் இப்பொழுது பெங்களுருவில் வீடு கட்டி வசிக்கிறார்.தம் வீட்டை சுற்றி இதுவரை 33வகை புள்ளினங்களை பார்த்துள்ளதாக ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.இப்பொழுது இதை விட அதிகமாக பார்த்திருக்க கூடும்.

அவர் அனுபவம் நமக்கு கட்டுரையாக இருக்கிறது அதனுடன், நிறைய புத்தகங்களையும் நமக்கு அறிமுகபடுத்துகிறார். நிறைய இடங்களுக்கு சென்றும்  நிறைய படித்தும் ஒரூ கட்டுரையை எழுதுகிறார் என்பது அவருடையை எந்த கட்டுரையை படித்தாலும் தெரிந்துகொள்ளலாம்.நானும் நிறைய நூல் மற்றும் படங்களை அவருடைய கட்டுரைகளில் இருந்து குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.

1-Climb Every Mountain- கொல்லிமலை 


2-Tree of  Delhi


3-Check List of Birds of Tamil Nadu- M.A .பாட்ஷா 


4-Hachiko(2009)- movie


5-An Inconvenient Truth Documentary Film
 

6-Silent Spring 


7-The Deer and Tiger (இந்த புத்தகத்தை உல்லாஸ் கரந்த் தன்னுடைய The Way of Tiger என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்)


8-The Story of Asia’s Lion 


9- 18ஆம் யானை:மூன்று குரல்கள்- Documentary film
 
Hachiko படம் 1930களில் ஜப்பானில் வாழ்ந்த ஒரு நாயின் உண்மை கதை. ஹச்சிகோவுக்கு சிலை ஒன்றை ஜப்பான் ரயில் நிலையத்தில் வைத்துள்ளார்கள். இன்றும் அது இறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதியன்று மக்கள் அச்சிலை முன் கூடி மரியாதை செலுத்துகிறார்கள். பின்பு ஒரு முறை தியடோர் பாஸ்கரன் அவர்கள் ஜப்பான் சென்றதை அவர் வரிகளில் பார்ப்போம்-பயிற்சிக்காக ஒரு முறை நான் டோக்கியோ சென்றிருந்தபோது,எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் ஒரு ரயிலைப் பிடித்து புறநகர் ஷிபுயா ஸ்டேஷனுக்குச் சென்று,அங்கு நடைமேடையிலிருந்த ஹச்சிகோவின் சிலை முன் சில வினாடிகள் நின்றேன்.

தியடோர் பாஸ்கர் அவர்களின் நிறைய கட்டுரைகளை காட்டுயிர்,சினிமா பற்றி இருக்கும் ஆனால் எந்த இடத்திலேயும் அவருடைய வாழ்கை முறை வந்ததில்லை 1940ஆம் வருடம் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார் என்றே எல்லா புத்தகத்தின் புகப்பில் பார்க்கமுடிகிறது ஆனால் அவரை பற்றி ?

காலச்சுவடு எடுத்த ஓர் நேர்காணலில் அவரின் வழக்கை பற்றி சிறிது அறிந்துகொள்ள முடிகிறது அவற்றின் லிங்க் கொடுத்துள்ளேன்.


காட்டுயிர,சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி எழுதியும், பேசியும் மட்டுமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்பதை இசை விமர்சகர் ஷாஜி எழுதிய ஒரு கட்டுரையில்-ஒரு முற்பகல் நேரம் எனது நண்பனின் மளிகை கடையில் அமர்ந்திருந்தேன்.திடிரென ஒட்டுமொத்தக் கட்டடமும் பெரும் நடுக்கத்துடன் குலுங்கியது.ஒரு பூகம்பத்தை நான் உணர்ந்த முதல் அனுபவம் அதுவே. அக்காலகட்டத்தில் நான் பெருவந்தானம் ஜான் என்பவரை சந்தித்தேன்.அவர் ஒரு சுற்றுச்சூழலியல் போராளி.பேச்சை கேட்பவர்கள் என யாருமில்லாத ஒரு தெருமுனைக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். சாலையோரத்தில் அவரது உரை கேட்க சுவாரசியமில்லாமல் இருந்தது.ஆனால் எங்கள் பகுதிகளில் தொடர்ந்து நிகழும் பூகமப்தைப் பற்றிதான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்ததும் ஆர்வமுடன் நான் அவரது பேச்சை கவனித்தேன்.இப்படி செல்கிறது ஷாஜியோட வரிகள் ......ஆக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி கேட்பதற்கு கூட மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றே அவரின் ஆரம்ப வரிகள் உணர்த்தினாலும் தொடர்ந்து எழுதியும், பேசியும் மட்டுமே கவனத்தை திருப்ப முடியும் என்று அவரின் கடைசி வரிகள் உணர்த்துகிறது.

இன்றைய அளவில் தமிழில் அதிக அளவில் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு பற்றி கட்டுரைகளை எழுதி வருபவர் தியடோர் பாஸ்கரன் அவர்கள். எந்த ஒரு பறவையை பற்றியும் முழு விபரங்களை சொல்லி போரடிக்காமல் பார்த்ததை விவரிக்கும் பாங்கு சிறந்ததாக அமைந்திருக்கிறது.இவருடைய காட்டுயிர் ஆர்வத்திற்கு உதாரணமாக இந்த நிகழ்வை குறிப்பிடலாம் தான் இறந்தபின்,தான் நேசித்த காட்டிலேயே தனது உடல் புதைக்க பட வேண்டுமென்று உயில் எழுதியவர்- ஹ்யுகோ வுட். உயில்படியே அவரது உடல் டாப்ஸ்லிப்பில் புதைக்கபட்டது.ஆனால் அந்த உயிலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தியடோர் அவர்கள் பல அலுவகங்களுக்குச் சென்று தேடியும் ஒரு தடையமும் கிடைக்கவில்லை என்று பதிவுசெய்திருக்கிறார்.

ஒரு கட்டுரையில் வேட்டையாடிய உணவை சிங்கங்கள் சாபிட்டுகொண்டிருந்த இடத்தின் வெகுஅருகில் இவருடைய ஜீப் சென்று நின்று, இஞ்சினை டிரைவர் அணைத்துவிட்டார். பின் சீட்டில் அமர்ந்திருந்த தியடோர் பாஸ்கரன் இவற்றை புகைப்படம் எடுக்க கையில் கேமராவை எடுத்தபொழுது ஒரு ஆண் சிங்கம் இவரை நோக்கி திரும்பி நேருக்கு நேர் பார்த்தபொழுது ஈரக்குலையே நடுங்கியதாக குறிப்பிடுகிறார்.இதே போல் கார்டுனிஸ்ட் மதன் ஒரு பதிலில்-ஒரு முறை சிங்கம் ஒன்று நேருக்கு நேர் என் கண்ணை பார்த்தபொழுது என் உடல் நடுங்கியதாக எழுதியுள்ளார்.பெரும்பாலும் நாம் சிங்கம்,புலி இவற்றை அடைக்கப்பட்ட கூண்டில்  பார்த்தே பழகியதால் அவற்றின் கம்பீரம் நாம் உணருவதில்லை.புலியை அதன் வாழிடத்தில்,காட்டில் பாருங்கள் அதன் கம்பீரம் தெரியும் என்று எப்பொழுதோ தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதியது படித்த ஞாபகம் வருகிறது. 

இவர் செல்லும் இடங்களில் தரப்படும் உணவுகளை பற்றி எழுதும்பொழுது, அந்த உணவுக்கு என்ன சுவை இருக்குமோ அப்படியே அந்த சுவையை எழுத்தில் கொண்டுவந்துவிடுகிறார்.படித்துபாருங்கள் நீங்களும் உணர்வீர்கள். தியடோர் எழுதியுள்ள பறவை,விலங்குகளின் தமிழ் பெயர்களை அனைத்தும் எடுத்து தனியாக எழுதிவைத்துள்ளேன். முடிவில் என்பதுக்கும் மேற்ப்பட்ட தமிழ் பெயர்கள் வந்தது. ஜல்லிகட்டை தடை செய்த இந்த வேளையில் அவருடைய ஏறு தழுவுதல் கட்டுரையை அவரது முகநுலில் பதிவு செய்திருந்தார்.

 சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று தபால் துறையில் உயர்ந்த பொறுப்பு வரை சென்று,வேறு வேறு துறைகளிலும்(தொல்லியல் ,காட்டுயிர்,சினிமா) புலமையுடன் இருந்தவரை பற்றி இன்னும் முழுவதுமாக நாம் அறிந்துகொள்ள பேட்டியாகவும், கட்டுரையாகவும், ஆவணப்படமாகவும் அவரை பற்றி வரவேண்டும் என்பதே உண்மை.தமிழ் நாட்டில் மட்டுமே எதையும் ஆவணப்படுதுவதில்லை என்ற நம்பிக்கையை தகர்த்தி இவரை போன்றவர்களின் அனுபவங்களை சேகரிப்போம். 

                                                    - செழியன் 

           தெடர்புக்கு lapwing2010@gmail.com